செவ்வாய், 23 மார்ச், 2010

ஐபிஎல் கள்ள வோட்டு: வலைப்பதிவு ஜனநாயகம் - ஒரு செல்ஃப் ஆப்பு

ஒரு வயித்தெரிச்சக் கோஷ்டியின் ஆதங்கம்.

விஜயகாந்த் மாதிரி கட்சி தொடங்கியாச்சு. தெரிஞ்சவங்க, தெரியாதவங்க எல்லாத்துக்கும் மெயில் அனுப்பி வோட்டு போடவும் சொல்லியாச்சு.  தமிலிஷ்லேயும் தமிழ்மணத்திலேயும் மனுத்தாக்கல் ஏற்பாடு பண்ணியாச்சு. கள்ளவோட்டுப் போடச் சொல்லி கைக்காசு காலியாச்சு. நம்மகிட்ட காசு வாங்கிட்டு எதிரணிக்கு வோட்டுப் போடறாங்க. இப்படியே போய்க்கிட்டிருந்தா நம்ம கட்சிய ஒரு நாள் கலைச்சிர வேண்டியதான்.

கட்சி ஆரம்பிக்கும்போதே நல்லவங்க சிலபேரு சொன்னாங்க. இதெல்லாம் உனக்கு ஒத்து வராதுண்ணு. அதுக்கெல்லாம் தலையில இருக்கிற கிட்னி ஒழுங்கா வேலை செய்யணுமாம். நல்லவங்க சொன்னா நாம எங்க கேக்கறோம். தெனாவெட்டா கட்சியத் தொடங்கினோம். கலர் வேணுங்கறதுக்காக கத்ரீனா, ஜூகி, ப்ரீத்தியெல்லாம் போஸ் கொடுக்க வெச்சோம். ஆனா என்ன பலன்? யாரும் வோட்டுப் போட மாட்டேங்கிறாங்க.

தமிலிஷ்லகூட நம்ம கட்சி சார்ந்த சமாசாரம்தான் ஹாட். நித்யானந்தா விவகாரம் பரபரப்பா இருந்தபோது "சூடான சங்கதி"ன்னு தனி காலமே கொடுத்தாங்க. என்ன பொழைப்போ அது. நக்கீரனை விடக் கேவலம். ஜூனியர் விகடனைவிட அசிங்கம். சன் டி.வி.யைவிடக் கொடுமை. நான் கட்சியைக் கலைக்கும் முன்னாடி தமிலிஷ் கட்சியைக் கலைச்சிரலாம். தேர்தல் கமிஷனே இப்படியிருந்தா எப்படி? இதச் சொன்னதுக்காக நம்ம கட்சி அங்கீகாரத்த ரத்து பண்ணீராதீங்க. இது சும்மா வாய்க்கொழுப்பு. பரபரப்பு வீராப்பு. அம்புட்டுதேன்.

வோட்டு வாங்கறதுக்காக நித்தியானந்தாவ பிரசாரத்துக்குக் கூப்பிடக்கூடான்னுதான் மோடியையும் கங்குலியையும் கூப்பிட்டோம். இப்ப என்னடான்னா, சூடான சங்கதி ஐபிஎல்தானாம். ம்... வெளுத்துக் கட்டுங்க. நல்லவேளை நித்தியானந்தா பரபரப்பை ஐபிஎல் அடக்கிருச்சி.

இன்னொரு தேர்தல் கமிஷன் தமிழ்மணம். மொய்யெழுதுவோர் பட்டியலை தனியே காட்டி அசிங்கப்படுத்துகிறார்கள். நாமும் எல்லா இடத்துக்கும் போய் ஹாய்.... பாய்.... சூப்பர்.... நீங்க புதுமையான தலைவர்.... வாழ்க... ஒழிகன்னு எவ்வளவோ மொய் எழுதிக் கோஷம் போட்டு வந்தாலும் கார்த்திக் கட்சி வேட்பாளர் மாதிரித்தான் நம்மள பாக்கறாங்க. என்ன மொய் எழுதறாங்கங்கறது முக்கியமில்ல... எவ்ளோங்கறதுதான் முக்கியம்.... நம் வீட்டுக் கல்யாணத்துக்கு நாமே மொய்யெழுதினாலும் கணக்கில சேரும் போலிருக்கு. இது அமெரிக்கா மாதிரி, சுவிட்சர்லாந்து மாதிரி ரொம்ப மேம்பட்ட ஜனநாயகம்.

தேர்தல் கமிஷன் திரட்டிகளே கொஞ்சம் சிந்தியுங்கள். இதிலெல்லாம் ஜனநாயகம் தேவையா?  கிடாக்கறி விருந்து கொடுக்க வசதியில்லாத சுயேச்சைகளெல்லாம் தேர்தலில் டெபாசிட் இழக்கத்தான் வேண்டுமா? ஒவ்வொரு வீடாகச் சென்று மொய் வீசிவிட்டு வந்தால்தான் வோட்டுக் கிடைக்குமா? வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, பூத் ஏஜெண்டுக்கு குவார்ட்டர் வாங்கிக் கொடுப்பது போன்ற தில்லாலங்கடி வேலைகளெல்லாம் உண்டா? இல்லையென்றால் தேர்தல் கமிஷனையே கவனிக்க வேண்டுமா?


..
.
.

2 கருத்துகள்: