வியாழன், 23 ஜூன், 2011

கிரிக்கெட் வாரியமும் தமிழர் கோபமும்!

நமது நாட்டில் கிரிக்கெட்டை ஒட்டமொத்தக் குத்தகைக்கு எடுத்திருக்கும் பிசிசிஐ, இப்போது உலக கிரிக்கெட்டையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதுவும் ஐபிஎல் தொடங்கி வெற்றிகரமாக வியாபாரம் ஆனதும் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் சக்தி தங்களுக்கு வந்துவிட்டதாக பவார், மனோகர் குழு நினைத்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் இலங்கை பிரீமியர் லீக் மீதான அடக்குமுறை.

 இலங்கை மீதும் அதன் அதன் அதிபர் மீதும் நமக்குக் வெளிப்படுத்த முடியாத கோபம் இருக்கத்தான் செய்கிறது. அதுவே இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீதும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உலகக் கோப்பை இறுதி டிராமா போட்டியில் தோனி குழுவினர் ஜெயிக்க வேண்டும் என்று தமிழர்கள் அங்கப் பிரதட்சணம் செய்ததற்கும் இந்தக் கோபம்தான் காரணம். எம்ஜிஆரும் நம்பியாரும் சண்டையிட்டால் டி.வி.பொட்டி முன் நின்று குதித்துக் கொண்டிருப்போமே, அதே பழக்கம்தான் இந்த விஷயத்திலும் தொடர்கிறது. நோஐபிஎல அதிபரைப் போல் போல் நடுநிலையாகவும், நேர்மையாகவும் சிந்திக்கக்கூடிய யோக்கியவான்கள் ஆயிரம் பேர் வந்தாலும் இதையெல்லாம் திருத்த முடியாது. யார் நினைத்தாலும் பிசிசிஐ இப்போதைக்கு கலைக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது.

 இருந்தாலும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை மிரட்டியிருப்பதன் மூலம் பிசிசிஐ புதிய அத்தியாயத்தைப் படைத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. மும்பையில் இலங்கை அணியை தோனி நாடகக் குழுவினர் புரட்டியபோது மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற தமிழர்கள் இதற்காகவும் மகிழ்ச்சியடையலாம். ஏனென்றால், இந்திய அரசு ஒரு போதும் இலங்கை அரசை எச்சரித்ததோ மிரட்டியதோ இல்லை. ஆனால் நாட்டுக்காகவே ஆடும் சாமுராய்கள் நிறைந்த நமது கிரிக்கெட் அணியை உருவாக்கிய வாரியம், இலங்கையை எக்கச்சக்கமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது.

 சானல்-4 புட்டுப்புட்டு வைத்தபோதும், மூன் விலாவாரியாக விவரித்தபோதும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதால், இந்தவகையிலாவது பழிதீர்த்துக் கொண்டதாக உணர்வோம். அதுதான் நமது கிரிக்கெட் வாரியத்துக்கும், அத்துடன் இணைந்த வியாபார வஸ்துக்களான சச்சின், தோனிக்கும் மட்டுமல்ல, நமது தேசபக்திக்கும் நல்லது.



.