திங்கள், 18 மார்ச், 2013

ஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா?



"இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதம் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. போரின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ராணுவம் மனிதாபிமான உதவிகளைச் செய்தது.
போர்முனைக்குச் சம்பந்தமே இல்லாத கொழும்பு போன்ற நகரங்களில் அப்பாவிகளைக் குறிவைத்து தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; குண்டுகள் வீசப்பட்டன. இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை முறியடித்து வெற்றி பெற்ற ராணுவத்துக்கு வாழ்த்துகள்! "


இதைப் பேசியது யார் தெரியுமா? சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் குமார சங்ககாரதான். 2011-ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த கௌட்ரி நினைவு உரையில் அவர் பேசியதுதான் இது.

இப்படிப் பேசியவரைத்தான் நம்மூர்க்காரர் ஒருவர் பல கோடிகளைக் கொடுத்து அணியின் தலைவராக நியமித்துள்ளார்.

இது மட்டுமல்ல இவரைப் போல மொத்தம் 13 பேர் ஐ.பி.எல். அணிகளில் உள்ளனர்.

மஹில ஜெயவர்த்தன டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளர் குலசேகர இருக்கிறார்.

புணே வாரியர்ஸில் அஜந்தா மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ்.

ராயல் சேலஞ்சர்ஸில் தில்ஷன், முத்தையா முரளி தரன் (இவர என்ன பண்றது?)

மும்பையில் லசித் மலிங்கா.

ஆக ஏழு அணிகளில் மொத்தம் 13 பேர்.

சென்னையில் நடக்கும் 16 போட்டிகளிலும் ஏதாவது ஒரு இலங்கை வீரர் ஆட இருக்கிறார். ஆக இலங்கை வீரர்கள் இல்லையெனில் ஐ.பி.எல். போட்டியே பணாலாக வாய்ப்புள்ளது.

இனப்படுகொலைக்கு நீதி கேட்பது முக்கியமா? அல்லது சங்காரவின் கவர் டிரைவ்களையும், மலிங்காவின் யார்க்கர்களையும், மெண்டிஸின் சுழலையும் பார்த்து ரசிப்பது முக்கியமா என்று முடிவெடுக்க முடியாத குழப்பமான நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல். நடக்கவில்லை என்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுமே, என்ன செய்வது?

இன்னொரு பக்கம் சோ கால்டு "ஈழ ஆதரவு அரசியல்வாதிகள்" ஐபிஎல் ஓனர்களுடன் பேரம் பேசத் தொடங்கியிருப்பார்கள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டேன். நானும் நம்ப மாட்டேன்.

போகட்டும். மற்ற போராட்டக்காரர்கள் என்ன செய்வார்கள்?

ஓட ஓட விரட்ட சங்ககாரவும், மெண்டிஸும் புத்த பிக்குகளா என்ன?

..

ஞாயிறு, 17 மார்ச், 2013

ஐபிஎல் கவுன்டவுன்: சபாஷ் சிவ சேனா!





நண்பர் ஒருவர் கேட்டார்...

"பாஸ்! இந்தப் போராட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்?"

"தெரியலையே பாஸ்!"

"அதெல்லாம் உங்களுக்குக் கண்டிப்பா தெரியும்... சும்மா சொல்லுங்க". வாயைப் பிடுங்கினார்.

நான் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை.

"இல்லைங்க... சத்தியமா எனக்குத் தெரியாது". நழுவினேன்.

"ஹலோ! அதான் ஏதாவது சொல்லுவீங்களே, ஐ.பி.எல். தொடங்குறவரைக்கும்தான் போராட்டமெல்லாம்... அப்டீன்னு" ஒரே போடாகப் போட்டார்.

ரொம்ப ஆசைதான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்...

"அப்படியெல்லாம் சொல்ல முடியாது..." இழுத்தேன்.

"நீங்க சொல்லாட்டி பரவாயில்ல... நான் சொல்றேன்... ஐ.பி.எல். தொடங்கின உடனே எல்லோரும் சேப்பாக்கத்தில் வரிசையில நிப்பாங்க" அப்டீன்னார்.

இதுக்கு மேல் போனால், அடிதடி நிச்சயம் என்று உணர்ந்து, பேச்சை மாற்றினேன்.

"சேப்பாக்கைத்தை விடுங்க. ஐபிஎல் போட்டிய நடத்தணும்னா, விவசாயிகளுக்கு ரூ.500 கோடி நிவாரணம் தரணும்னு ஐ.பிஎல். ஓனர்களுக்கு சிவசேனை எச்சரிக்கை விடுத்திருக்கே தெரியுமா"

"ஓ அப்படியா" ஆர்வமாகக் கேட்டார்.

"ஆமாம்.." வேறு பிரச்னைக்கு தாவிவிட்ட திருப்தியில் வேகமாகத் தலையை ஆட்டினேன்.

"ஆமாங்க! மும்பை, புணே அப்டீங்கற பேர வெச்சுத்தானே சம்பாதிக்கிறாங்க... அப்ப கொடுக்க வேண்டியதானே. ஊர்ப் பேரு மட்டும் இல்லாட்டி இவங்களை நாய்கூட மதிக்காதே..."

"சரிதாங்க" ஆமோதித்தேன்.

"இங்க உள்ளவங்க என் பண்றாங்க... இங்கேயும் விவசாயிகள் தண்ணி கிடைக்காம கஷ்டப் படுறாங்க... மின்சாரம் இல்லாம சிறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்காங்க... ஊர்ப் பேரை வெச்சு ஏமாத்துற காசுல கொஞ்சத்த கொடுக்க வேண்டியதுதானே" லாஜிக்காக பேசினார்.

"சூப்பரா சொன்னீங்க" பாராட்டினேன்.

"ஆனா இங்க நடக்காதுங்க" சுருதியைக் குறைத்தார்.

"ஏங்க"




"இங்க உள்ளவங்க அவங்க சொந்தக்காரங்களுக்கு ஏதாவது கேட்டு வாங்கிப்பாங்களே தவிர, ஊருக்காகக் கேட்டு வாங்குற பழக்கமெல்லாம் இதுவரைக்கும் கெடையாதே..."

"ஓ" ஆச்சரியப்படுவதுபோலக் கேட்டேன்.

"அதுக்கெல்லாம் சொரணை வேணுங்க". சொல்லி முடித்தார்.

"..."




ஐபிஎல் கவுன்டவுன் : தேசப் பணிக்குத் திரும்பும் போதை சர்மா!




அந்தக் கால கிராமங்களில் நிறைய மைனர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு முழுநேர வேலை போதை ஏற்றுவது, கிடைத்த பெண்களை பயன்படுத்திக் கொள்வது மட்டும்தான். இவர்களை யாரும் கேட்க முடியாது. நடுத்தர வர்க்கத்தை ஒடுக்க வரும் சட்டங்களும், கட்டுப்பாடுகளும் இவர்கள் ஒன்றும் செய்யாது. அப்பாவிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் பண்பாட்டு நியாயங்களைக்கூட இவர்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது.

இதுபோன்ற மைனர்கள் இப்போது இருக்கிறார்களா என்று கேட்கும்போது, சினிமாக்காரர்களைத்தான் நாம் கைகாட்டுவோம். ஆனால் அவர்களைவிட மைனர் வேலைகளைச் செய்து தப்பித்துக் கொள்பவர்கள் நமது கிரிக்கெட் வீரர்கள்தான். அதற்கு லேட்டஸ்ட் சான்று நமது ராகுல் சர்மா.

புணே வாரியர்ஸ் ஐபிஎல் அணியில் இடம்பெற்றிருந்த ராகுல், பர்னெல் இருவரும், கடந்த ஆண்டு மே மாதம் மும்பையின் மேட்டுக்குடிப் பகுதியான ஜூகுவில் உள்ள கேளிக்கை விடுதியில் நடைபெற்ற போதை விருந்து நிகழ்ச்சியில் (மேற்கத்திய ரேவ்) கலந்துகொண்டனர்.  இதைப்பற்றி யாரோ போட்டுக் கொடுக்க, அங்கு வந்த போலீஸ், விருந்தில் கலந்துகொண்ட ராகுல் சர்மா, பர்னெல், ஏகப்பட்ட பெண்கள் உள்பட 90 பேரை சுற்றி வளைத்தனர். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் அவர்களை விடுவித்தும் விட்டனர்.

இந்தச் சமயத்தில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ராகுல் சர்மா, போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டால் கிரிக்கெட்டே ஆடப் போவதில்லை என்று அறிவித்தார். இதற்கு ஆதாரம் வேண்டுமெனில் யூட்யூபில் "ரேவ் ராகுல் சர்மா" என்று தேடவும்.

இப்போது சோதனை முடிவுகள் வெளியாகிவிட்டன. ராகுல் சர்மா, பர்னெல், ஷில்பா உள்ளிட்ட 86 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகிவிட்டது. சில நாள்களுக்கு முன்பு அவர்கள் மீது ஆயிரத்துச் சொச்சம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பர்னெல் உள்ளிட்ட 35 வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டார்கள். நம்மூரில் சைக்கிளைத் திருடினால்கூட "டெய்லி சாயந்திரம் டேஷன்ல கைநாட்டு" போடச் சொல்லும் காவல்துறை, இந்த மைனர்களைத் தப்பவிட்டுவிட்டு, இப்போது, தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறது.

ஏற்கெனவே, சவால் விட்ட ராகுல் சர்மா இப்போது வாய் திறக்க மறுக்கிறார். இதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? வரும் ஐ.பி.எல். போட்டிகளில் அவர்கள் ஆடப்போவதாக  புணே வாரியர்ஸ் அறிவித்துள்ளது. இது ஒன்றும் ஊக்கமருந்து இல்லையே, போதை மருந்துதானே என்பது அவர்கள் கூறும் சாக்கு.

கஞ்சா வைத்திருந்தால் பிணையில் வெளிவர இயலாத பிரிவுகளில் உள்ளேபோடும் காவல்துறை இதையெல்லாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு ஒருபடி மேலேபோய், அண்மையில் திருவாய் மலர்ந்தருளிய ஐபிஎல் அண்ணன் ராஜீவ் சுக்லா, காவல்துறையை மறைமுகமாக மிரட்டினார்.

ஓகே. இனி என்ன செய்வார்கள்..?

குறைந்தபட்சம் ஐபிஎல் போட்டிகள் முடியும்வரை ராகுல் சர்மா மீது எந்த நடவடிக்கையும் இருக்காது. தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர் கிரிக்கெட் ஆடுவதை கோடிக்கணக்கானவர்கள் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், காவல்துறை மட்டும் அவரைத் தேடிக்கொண்டே இருக்கும். ராகுல் சர்மா சாப்பிட்டது கேக்தான். அதில் யாரோ தீவிரவாதிகள் கொகைனையும், பிரவுன் சுகரையும் தடவிவிட்டார்கள் என்று அறிக்கை அளிக்கப்படும்...

பிறகு போதை சர்மா, ஐபில், பிசிசிஐ அணிகளில் ஆடிவிட்டு, தேசப்பற்று பற்றி நமக்கு வகுப்பெடுப்பார். நாமும், நமது இனப்படுகொலை, ஜெனீவா விவகாரங்களை எல்லாம் கொஞ்ச நாளைக்கு மூட்டைகட்டி வைத்துவிட்டு, ஐபிஎல் பார்க்க வரிசையில் நிற்போம்.

இந்தப் போதைசர்மா ஒரு சோறுதான்... ஐபிஎல் வடிவில் பெரும்பானை இருக்கிறது.

(குறிப்பு: படத்தில் இருப்பவர் ரொம்ப நல்லவர்)


வெள்ளி, 15 மார்ச், 2013

ஐபிஎல் கவுன்டவுன்: நீ தமிழனாடா?


வங்கிக்கொள்ளையர்கள் என்ற சொல் வழக்கத்தில் உள்ளது. முகமூடி அணிந்தபடி வங்கிகள் நுழைந்து திருடிச் செல்பவர்களைத்தான் இப்படிச் சொல்கிறோம். உண்மையில் வங்கிக் கொள்ளையர்கள் என்று யாரை அழைக்க வேண்டும் தெரியுமா? வங்கிகளை நடத்திக் கொள்ளையடிப்பவர்களைத்தான். இது ஒன்றும் ஆதாரம் இல்லாமல் சொல்லும் கருத்தல்ல. உலகம் முழுவதும் மோசடி செய்து அபராதம் செலுத்திக் கொண்டிருக்கும் எச்.எஸ்.பி.சி, பார்க்லேஸ் வங்கிகளைப் பற்றிப் படித்துப் பாருங்கள். பிறகு புரியலாம். வங்கிகளில் கொள்ளையடித்தால் என்கவுன்டர்; வங்கியை நிறுவிக் கொள்ளையடித்தால் முதல் மரியாதை. ஏன் இப்படி?

காப்பீட்டு நிறுவனங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எச்.டி.எஃப்.சி., ரிலையன்ஸ், டாடா என எந்த நிறுவனத்திலும் பணத்தைப் போட்டு முழுமையாகத் திரும்பப் பெற்றவர்கள், அல்லது உரிய நேரத்தில் காப்பீடு கிடைத்தவர்களைப் பார்ப்பது அரிதினும் அரிது. குப்பனும் சுப்பனும் சிறுகச் சிறுகச் சேர்க்கும் பணத்தைத் தின்று செரித்து ஏப்பம் விட்டு விடுகிறார்கள் இந்தக் காப்பீட்டுக் கொள்ளையர்கள். ஆனாலும் இந்த நிறுவனங்களுக்கு ராஜமரியாதைதான். போதாதென்று, இந்தத் துறையின் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்திக் கொண்டே போகிறார்கள். இதைத் தடுக்கவே முடியாதா?

பூஸ்ட் குடித்தால் வலிமை பெருகும், பெப்சியும் கோக்கும் குடித்தால் உற்சாகம் பிறக்கும், ஹார்லிக்ஸ் குடித்தால் மூளை வளரும்,  ஃபேர் அண்ட் லவ்லி பூசினால் அழகாகி விடலாம் என்று சச்சின், தோனி போன்றவர்கள் கூறும்போது,  நீ அதையாடா குடிக்கிற? என்று கேள்வி எழுப்பப்படுகிறதா? இல்லை இதையெல்லாம் யாராவது சோதனை செய்து பார்த்திருக்கிறார்களா?

இதையெல்லாம் மாற்றவே முடியாது... ஏன் என்று கேட்கிறீர்களா? இது ஸ்பான்சர்களின் உலகம். இங்கு பொய்கள் எல்லாம் உண்மைபோல கொண்டாடப்படுகின்றன. ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் நிறுவனங்களின் பணத்தில்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். தட்டிக்கேட்க வேண்டிய ஊடகங்களுக்கு அடிப்படையே விளம்பரங்கள்தான். அதுவும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி டாடாக்களும் அம்பானிகளும் சம்பாதிக்கும் பணம்தான் ஊடகங்களின் "சமூக அக்கறைக்கு" அடித்தளம். கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகை விவகாரம் ஒன்று போதாதா இதை விளக்க!

இதன் தொடர்ச்சிதான் ஐ.பி.எல். பொய்தான் ஐபிஎல்லின் வருமானத்துக்கே ஆதாரம்.  2ஜி முறைகேட்டில் கொள்ளையடித்த நிறுவனங்களும், பூச்சி மருந்து என்று தூற்றப்படும் குளிர்பான நிறுவனங்களும், நஷ்டக் கணக்கு காட்டியவரின் மதுபான நிறுவனங்களும் இதில் அடக்கம். இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் சென்னை அணி, மும்பை அணி, டெல்லி அணி என நகரம், மாநிலம் வாரியாக அணிகளைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். இவர்களிடமிருந்துதான் தேசப் பற்றும், மாநிலப் பற்றையெல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சென்னை அணி எனப் பெயர் வைத்தால், அதை தமிழ்நாட்டு அணி என்று நினைத்து தமிழர்கள் எல்லாம் கொண்டாடுகிறார்கள். இதைப் போலத்தான் மற்ற இடங்களிலும். எப்படி எவன் எவனெல்லாமோ இருக்கும் அணியை சென்னை அணி என்று ஏற்றுக் கொள்கிறார்கள் மக்கள்? இந்தப் பொய் எப்படி உண்மையாக்கப்பட்டது?  எப்படி நமது அடையாளத்தை மறந்து யாரையெல்லாமோ தமிழர்களின் தலைவன் போலப் பாவித்து வருகிறோம். விளம்பரங்களால் ஏற்பட்ட மயக்கங்களும், ஊடகங்களின் மௌனமும்தான் காரணம்.

இந்தக் கொடுமை மாறப்போவதில்லை, தோனியைப் பார்த்து,  நீ தமிழனாடா? என்று கேட்கும்வரை.
..
.