வியாழன், 15 டிசம்பர், 2011

சாத்தான்களும் யூதாஸ்களும்

கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் இறுதிப் போட்டிவரை வந்த அணிகள் 16 ஆட்டங்களில் ஆடியிருந்தன. 16 ஆட்டங்கள் என்றால் ஒவ்வொரு வீரரும் அதிகபட்சமாக 48 மணி நேரம் களத்தில் இருந்திருப்பார்கள்.

பேட்டிங் என்றால் பன்னாட்டு நிறுவன விளம்பரங்கள் அச்சிட்ட பேட்டை கேமரா முன் காட்டுவதிலேயே பாதி நேரம் போய்விடும். பீல்டிங் நேரத்தில் வீரர்கள் எவ்வளவு "சுறுசுறுப்பாக' இருப்பார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எப்போதாவது பந்து வந்தால் ஓட வேண்டும். இல்லையென்றால் வழக்கம் போல ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கலாம்.

48 மணி நேரத்தில் இவர்கள் செய்த இந்த மாதிரியான வேலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் எவ்வளவு தெரியுமா? ரூபாயில் சொல்வதென்றால் சில கோடிகள். அதுவும் சென்னை மண்ணின் மைந்தனாகிப் போன தோனியின் வருமானம் 10 கோடி ரூபாயையும் தாண்டும் என்கிறார்கள். இப்படி அள்ளிவீசப்படும் பணம்தான் கிரிக்கெட்டையும், வாரியத்தையும் பெருந்தலைகள் மொய்ப்பதற்குக் காரணம்.

இந்தியாவில் கிரிக்கெட்டைப் பற்றி விமர்சித்தால் ஒன்று தேசத் துரோகியாக வேண்டியிருக்கும். அல்லது வயிற்றெரிச்சலில் பேசுகிறான் என்பார்கள். கிரிக்கெட் மீது நம் மக்கள் வைத்திருக்கும் பற்று அப்படி. சரி, கிரிக்கெட் என்கிற விளையாட்டை விடுங்கள். அதை நிர்வகிக்கும் பிசிசிஐ அமைப்பு பற்றி யாராவது கைநீட்டிக் குறைகூறிவிட முடியுமா? அந்த அமைப்பை எதிர்த்து இதுவரை யாராவது ஜெயிக்க முடிந்திருக்கிறதா? ஒரு காலத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த கபில்தேவ்கூட, கொஞ்சகாலம் பிசிசிஐக்கு எதிராகப் போராடிப் பார்த்துவிட்டு, கடைசியில் சரணடைந்து விட்டார்.

இப்போது பிசிசிஐக்கு எதிராகக் கிளம்பியிருப்பவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் கேப்டனுமான அனில் கும்ப்ளே. அவரது பேரைச் சொன்னதும் இரு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. மற்றொன்று 2002-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக செயிண்ட் ஜான் மைதானத்தில் நடந்த போட்டியில் தில்லான் அடித்த பந்து தாடையைக் கிழித்த பிறகும், தலையைச் சுற்றிக் கட்டுப் போட்டுக் கொண்டு வந்து 14 ஓவர்கள் பந்து வீசிய துணிவு. இத்தகைய வீரர் இப்போது, பிசிசிஐக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கிறார். கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

பிசிசிஐ மீது எத்தனையோ புகார்கள் எழுந்த போதெல்லாம் வராத எதிர்ப்பு, இப்போது ஏன் வந்திருக்கிறது என்று எல்லோரும் கேட்பது புரிகிறது. ஓய்வு பெற்ற பிறகு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைவராக இருந்து வந்தார் கும்ப்ளே. இளம் வீரர்களுக்குப் பயிற்சியளித்து, திறமையானவர்களை அடையாளம் காண்பதற்காக கடந்த 2000-ம் ஆண்டில் ராஜ்சிங் துங்கர்பூர் தொடங்கிய அமைப்பு இது. அண்மையில் சதமடித்த மனோஜ் திவாரி உள்பட பலர் இந்த அமைப்பின் மூலம் அணிக்கு வந்திருக்கிறார்கள்.

தன்னுடைய கனவுத் திட்டங்கள் எதையும் பிசிசிஐ அமைப்பு ஏற்கவில்லை என்றும், வெறும் தலையாட்டி பொம்மையாக, ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக தாம் தொடர முடியாது என்றும் கூறி தனது பதவியை கும்ப்ளே ராஜிநாமா செய்திருக்கிறார். பிசிசிஐ நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் கூறியிருக்கிறார். ஆனால், கும்ப்ளேவின் பதவி விலகலுக்குப் பின்னணியில் இருக்கும் பல்வேறு தகவல்கள் இப்போது கசிந்து கொண்டிருக்கின்றன. வீரர்களின் காயங்கள் தொடர்பான மேலாண்மைக்கான புதிய திட்டத்தை கும்ப்ளே முன்வைத்திருக்கிறார்.

ரூ.15 கோடி செலவு பிடிக்கும் இந்தத் திட்டம் கணினி மென்பொருளை மையமாகக் கொண்டது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம்தான் இதற்கான ஒப்பந்தத்தை வழங்க வேண்டும் என்பதில் கும்ப்ளே பிடிவாதமாக இருந்ததாகவும், ஆனால் அந்த நிறுவனத்திடமிருந்து கமிஷன் பெற முயற்சிக்கிறார் என்று கூறி வாரியம் அதை நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகே கும்ப்ளே பதவி விலகியிருக்கிறார்.

தேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைவராக இருந்து கொண்டே, டென்விக் என்கிற கிரிக்கெட் வீரர்களுக்கான நிறுவனத்தையும் நடத்தி வந்தார் கும்ப்ளே. அந்த நிறுவனம் இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு லாபம் கிடைப்பதற்காக தனது பதவியை பயன்படுத்திக் கொண்டார் என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

உலகக் கோப்பைக்கு வரி செலுத்த மறுத்தது, சூதாட்டக்காரர்களுடன் முன்னணி வீரர்களுக்கு இருந்த தொடர்பு பற்றி இன்றுவரை மூடி மறைப்பது, டால்மியா மீதான புகார்களை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக் கொண்டது, ஐபிஎல் போட்டி மோசடிகளுக்கு மூளையாகச் செயல்பட்ட லலித் மோடி மீது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கருணைகாட்டுவது, இந்தியா என்கிற பெயரைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் பணத்துக்கான கணக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர மறுப்பது என பிசிசிஐயின் எண்ணற்ற அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கைகளைப் பார்த்துவிட்ட நமக்கு கும்ப்ளேவின் விவகாரம் பெரிதாகத் தெரியவில்லை.

கும்ப்ளேவுக்கு ஆதரவாக பிசிசிஐ அமைப்பைத் தாக்கியிருக்கும் காவஸ்கர்கூட, தனது ஐபிஎல் சேவைகளுக்கு ரூ.4 கோடி தரவில்லை என்றுதான் குற்றம்சாட்டியிருக்கிறார். கபில்தேவ், கும்ப்ளே, லலித் மோடி, காவஸ்கர் போன்றோரெல்லாம் பிசிசிஐ மீது குற்றம்சாட்டுவதும், முறைகேடுகளை அம்பலப்படுத்துவதாகக் கூறுவதும் அவர்களது சுயநலத்துக்குத்தானேயன்றி, அதில் நடைபெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதற்காக அல்ல. அவர்களுக்குச் சாதகமாக எல்லாம் நடந்தால் பிசிசிஐயுடன் கைகோத்துவிட தயங்கவே மாட்டார்கள்.

மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் பறித்து பதுக்கி வைத்துக் கொண்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைக்கூட தர மாட்டோம் என்று கூறும் பிசிசிஐ அமைப்பையும் அதற்குத் துணை போவோரையும் ரசிகர்களே எதிர்த்தால்தான் உண்டு.

..