திங்கள், 28 பிப்ரவரி, 2011

பிரிட்டனை பிரித்த கிரிக்கெட், கரீபியனை சேர்த்த கிரிக்கெட்

2007 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை ஆடியபோது, விடுதலைப்புலிகள் தங்களது துப்பாக்கிகளை மௌனத்தில் ஆழ்த்தினார்கள். உலகத்தை ஆச்சரியப்படுத்திய நிகழ்வு அது.  ஏதோ ஒருவகையில் நாடு என்ற விஷயத்துக்குள் அவர்கள் பிணைந்திருந்தார்கள். ஆனால் அதற்கு இன்றுவரை  நேர்மறையான பலன் கிடைக்கவில்லை. போகட்டும்.

கரீபியன்காரர்களுக்கு கிரிக்கெட் இந்த அளவு சீரியஸான விஷயமல்ல. அவர்களால் எடுத்துக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் கழகம் 15 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டது.
ஒரு காலத்தில் காலனி பகுதிகளாக இருந்தபோது, கிரிக்கெட்டுக்காகச் சேர்ந்திருந்த நாடுகள் இவை. பிரிட்டிஷ்காரர்கள் விட்டுச் சென்ற பிறகும் தொடர்ந்து சேர்ந்தே இருக்கிறார்கள். இவர்கள் வேறு எதற்காகவும் இணைவதில்லை.

பல்வேறு நாடுகள் சேர்ந்து இருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடும்போது, எந்தத் தேசியக் கொடியும் காட்டப்படுவதில்லை. தேசிய கீதமும் இசைக்கப்படுவதில்லை. அதனால், நாட்டுப் பற்று என்பது கிரிக்கெட்டுடன் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதில்லை. கரீபியன் என்கிற அடையாளத்துடன்தான் அங்கு கிரிக்கெட் ஆடப்படுகிறது.

பிரிவினைக்குப் பெயர் பெற்றவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். அவர்கள் அரசியல் ரீதியாக வலுக்கட்டாயமாகச் சேர்ந்திருந்தாலும் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டால் இந்தியா, பாகிஸ்தான் மாதிரி பிரிந்து கிடக்கிறார்கள். கிரேட் பிரிட்டன் கிரிக்கெட் கழகம் என்ற ஒன்றை உருவாக்குவது என்பதுதான் அவர்களுக்கு ஆசை.

 ஆனால், அயர்லாந்துக் காரர்கள் பிரிட்டனிடமிருந்து வடக்கு அயர்லாந்தையும், ஸ்காட்லாந்துக்காரர்கள் தனியாகவும் கிரிக்கெட் சங்கங்களைத் தொடங்கிக் கொண்டார்கள். இதனால், மற்றவர்களைப் பிரித்த பிரிட்டன் ஒன்று சேர முடியாமல் இருக்கிறது. வேல்சும் இங்கிலாந்தும் சேர்ந்ததுதான் இன்றைய இங்கிலாந்து கிரிக்கெட் அணி. யூனியன் ஜேக் கொடியை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளில் தேசியக் கொடியைப் பயன்படுத்துவதைப் பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. போட்டிக்கு ஆள் இல்லை என்பதுதான் காரணம். அதனால்தான் தேசியக் கொடியைக் குத்தகைக்கு எடுத்து கிரிக்கெட் வாரியங்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன.
..
..

சனி, 26 பிப்ரவரி, 2011

தோனி அணிக்கு பேராபத்து!

அற்புதமான ஷாட்
எகிப்து - அல்ஜீரியா இடையேயான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்தபோது, இரு நாட்டு ரசிகர்கள் இடையே கடும் மோதல் நடந்தது. ராணுவம் வரவழைக்கப்பட்டு கலவரம் அடக்கப்பட்டது.  எகிப்தில் அல்ஜீரிய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தூதரகத்தை மூடும் அளவுக்கு நிலைமை போனது. இறுதியில் சூடானில் வைத்து கிட்டத்தட்ட காலியான அரங்கில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த மாதிரியான ஒரு காரணத்துக்காக ஹோன்டூராஸுக்கும் எல்-சால்வடாருக்கும் இடையே 4 நாள் யுத்தமே நடந்திருக்கிறது. சொல்ல மறந்துவிட்டேன். இதெல்லாம் கால்பந்து விளையாட்டில்.

இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் கிரிக்கெட் போட்டிகளிலும் இதுபோன்ற பதற்றம் உருவாக்கப்பட்டிருந்தது. அதைத்தான் பிசிசிஐ நன்றாக அறுவடை செய்தது. பாகிஸ்தான் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால், இந்தியாவில் இப்படிக் கிரிக்கெட் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை மாறியிருக்கிறது. பொருளாதார, அரசியல் ரீதியாகவும் சரி, கிரிக்கெட் செல்வாக்கு வாரியாகவும் சரி இப்போது இந்தியாவுடன் பாகிஸ்தானை ஒப்பிட முடியாது. எல்லாவ வகையிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்துவிட்டது. ஆனாலும் அவர்கள் இந்தியக் கிரிக்கெட்டுக்குத் தேவை. ஆனால், இப்போது அந்தப் பகை கொஞ்சம் குறைந்திருக்கிறது. இது நம்மூர் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கும், ஸ்பான்சர்களுக்கும் அபாயகரமான ஒன்று என்ற எச்சரிக்கையை, நமது எதிரிகளுக்கு விடுக்கிறோம்.

இந்தியாவில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் போதை அதிகமாக ஏற்றப்பட்டிருக்கிறது. நன்றாகக் கவனிக்க வேண்டும் போதை "ஏற்பட்டிருக்கிறது". சன் டி.வி.யில் அடிக்கடி ஒரு படத்தின் விளம்பரத்தைக் காட்டினால், படம் ஓடுகிறதே அது போன்று, விளம்பரங்கள் மூலமாகவும் வேறுவகையான கவர்ச்சிகள் மூலமாகவும் இந்தப் போதை உண்டாக்கப்பட்டிருக்கிறது.

அதனால்தான், தமிழக மீனவர்களைக் காப்பாற்றுங்கள் என்று தமிழகமே குரல்கொடுத்துக் கொண்டிருந்தபோதும், இப்போதைக்கு கிரிக்கெட்டே வேண்டாம் என்று நோஐபிஎல் அதிபர் ஐ.நா.சபையில் கதறிக்கொண்டிருந்தபோதும், சென்னை ரசிகர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை. இந்தியா-நியூசிலாந்து பயிற்சி ஆட்டத்துக்கு டிக்கெட் வாங்குவதற்காக சேப்பாகத்தின் வரிசையின் நின்றார்கள். அதுவும் அதிகாலையிலே... தக்கல் டிக்கெட்டுக்கு வரிசையில் நிற்பார்களே அதைவிட ஆர்வமாக, பள்ளி அட்மிஷனுக்கு காத்திருப்பார்களே அதைவிடவும் அதிக நேரமாக வரிசையில் நின்றார்கள். புதிதாகக் கட்டப்பட்ட சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. 2 பேர் காயமடைந்தனர். நம் ஜனம் அசைந்து கொடுக்கவில்லை. அவர்களை ஒருபக்கம் தூக்கிச் சென்று கொண்டிருந்தனர். நமது தோல் தடித்துப் போன ஜனம் தொடர்ந்து வரிசையில் நின்று டிக்கெட்டை வாங்கிக் கொண்டிருந்தது.

அடுத்த கதை பெங்களூரைப் பற்றியது. பெங்களூர்காரர்கள் சென்னை ரசிகர்களைவிடப் பாவம். அவர்களுக்கு சூடு, சொரணை எல்லாம் உண்டா என்று தெரியவில்லை. இன்றைய போட்டிக்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்றவர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பலருக்கு காயம் ஏற்பட்டது. டிக்கெட் தீர்ந்துவிட்டது. ஆனால், கிரிக்கெட் ரசிகர்கள் விடவில்லை தொடர்ந்து அங்கேயே நின்று அடிவாங்கினார்கள்.

இந்தச் சம்பவம் பற்றி ஐசிசி தலைமை நிர்வாகி லோர்கதிடம் கேட்டார்கள். அவர் சொன்னார், "50 ஓவர் கிரிக்கெட்டுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு" என்று. ஓ... பெங்களூர்காரன் அடிவாங்கியது, ஐசிசிக்கு நல்ல ஆதாரமாகிப் போய்விட்டது. சென்னைக்காரரகள் சளைத்தவர்களா என்ன... கிரிக்கெட் டிக்கெட் வாங்குவதற்காக உயிரையும் கொடுக்க வேண்டாமா?

சரி, ஏன்யா இந்த டிக்கெட் பிரச்னை, 40 ஆயிரம் பேருக்கு 3 மணி நேரத்தில் டிக்கெட்டை விற்றுவிடுகிறார்களா என்று பார்த்தால், அதுதான் இல்லை. பெங்களூரில் உள்ள 40 ஆயிரம் டிக்கெட்டில் வெறும் 7 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டும்தான் விற்பனைக்கு. மற்றெல்லாம், ஸ்பான்சர்கள், அரசு அதிகாரிகள், ஐசிசி, பிசிசிஐ உறுப்பினர்கள், கிளப்புகளுக்கு ஒதுக்கப்படும். இந்த வகையில் மட்டும் 31 ஆயிரம் டிக்கெட்டுகள் முடக்கப்படும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா கூறியிருக்கிறது. ஆக, டிக்கெட் விற்பதால், இவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. இத்தனை டிக்கெட் பொதுவில் விற்க வேண்டும் என்பதற்கு எந்த விதியும் இல்லை. இதெல்லாம் தெரியாத பொது ஜனம் வரிசையில் போய்நின்று அடிவாங்குகிறது. என்றைக்காவது ஒருநாள் இதெல்லாம் நம்மூர்காரர்களுக்குத் தெரியத்தான் போகிறது. அப்போது இருக்கிறது தோனி அணிக்கு பேராபத்து!
.

..

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

நஷ்டத்தில் ஐபிஎல் அணிகள்: காம்ரேட் யெச்சூரியின் கணக்கு!

தபால்துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்றால் நம்பலாம். அதனால்தான் அவர்கள் கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்வதை விட்டுவிட்டு இன்சூரன்ஸ் பாலிசைகளை விற்பது, தங்கக் காசுகளை விற்பது என பெட்டிக்கடை வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் லாபத்தில் இயங்க வேண்டும் என்று நாம் கூறவேயில்லை. மிகக் குறைந்த லாபத்திலோ அல்லது மிகக் குறைந்த நஷ்டத்திலோ இயங்குவதுதான் அரசு சேவை நிறுவனங்களுக்குச் சரி. மக்களுக்கு ஏதோ நன்மை செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ரயில்வே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. லாலுவும் மம்தாவும் வந்து அதை லாபத்தில் இயங்கச் செய்திருக்கிறார்களாம்.  தக்கல் டிக்கெட், முன்பதிவு ரத்துக் கட்டணம், அளவுக்கு மிஞ்சிய சரக்குகளை ஏற்றி தண்டவளங்களை டார் டாராக் கிழிப்பது என பல மோசடிகளைச் செய்துதான் இந்த லாபம் சம்பாதிக்கப்படுகிறது. மக்களும் லாபம் வந்தால்தானே நல்லது என லாலுவையும், மம்தாவையும் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.  அவ்வளவு ஏன் நமது காம்ரேட் யெச்சூரிகூட லாபம் குறைந்துவிட்டதே எனக் கண்டிக்கிறார். பொதுவுடைமை பேசும் அவர் திடீரென லாபம் கூடவேண்டும் என ஏன் பேசுகிறார் என்று தெரியவில்லை. லாபம் அதிகரித்தால், ஒன்று மேற்சொன்ன மோசடிகளைச் செய்ய வேண்டும், அல்லது ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாகக் கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் மக்களிடமிருந்து கறக்க வேண்டும். யெச்சூரிக்கு இதில் எது பிடிக்கிறது என்று காம்ரேடுகள்தான் விளக்க வேண்டும்.

எல்.ஐ.சி.காரர்களின் மோசடி ரயில்வேயைவிட பல மடங்கு அதிகம். "செத்தாக் காசு" என்பதுதான் ஆயுள்காப்பீட்டின் ரகசியம். ஆனால் இந்த ரகசியத்தைச் சொன்னால் யாரும் ஆயுள்காப்பீடு செய்ய மாட்டார்கள் என்பதால், உங்களுக்கு அப்படிப் பணம் கிடைக்கும், இப்படிக் கிடைக்கும், மணிபேக், பங்குச்சந்தையில் இருக்கிறது என பலவாறு ஆசை காட்டி பணத்தைக் கறக்கிறார்கள். காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு மட்டும்தான் செய்ய வேண்டும். இந்த முதலீட்டு வேலைகளையெல்லாம் ஏன் செய்கிறார்கள்?

 உதாரணமாக 10 லட்சரூபாய் காப்பீடு பெற மாதம் ரூ.300 முதல் 500 கட்டினால் போதும். சராசரியாக ரூ.20 ஆயிரம் சம்பளம் பெறும் ஒரு மனிதன் ரூ. 1000 காப்பீட்டுக்குச் செலவு செய்தால் போதும். அவன் இறந்தால் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் வரை கிடைக்கும். அதுதான் காப்பீட்டுக் கணக்கு. ஆனால், எல்.ஐ.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாமே முதலீடு என்கிற பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். அதனால் லாபம் அடைகிறார்கள். இந்த லாபத்தைக் குறைத்து மக்களுக்கு கூடுதல் பணப்பயன்களைத் தரலாமே.. ம்கூம் மாட்டார்கள்.

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கின. அப்போதெல்லாம் விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தது. இப்போது அந்த நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம். வரிமூலம் அரசுக்கு பணம் கொட்டுகிறது. நஷ்டத்தை யார் சுமக்கிறார்கள். நாம்தான்..

ஆக, ஒரு அரசு நிறுவனம் அதிக லாபம் அடைகிறது என்றால், அது மக்களைச் சுரண்டுகிறது என்றுதான் அர்த்தம். இது நாம் சொல்லவில்லை. காம்ரேடுகளின் கணக்குகூட அதுதான்.

அந்த வகையில் ஐபிஎல் என்கிற அரசு நிறுவனம் (அட!) லாபத்தில் இயங்கினால், அதைபற்றி நாம் குறை கூறலாம். நோஐபிஎல் என்கிற பன்னாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டதிலும் ஒரு அர்த்தம் இருந்திருக்கும். ஆனால், இந்த அணிகள் எல்லாம் நஷ்டத்தில் அல்லவா இயங்கிக் கொண்டிருக்கின்றன.

2009-10 நிதியாண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 87கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக, நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவுக்கு அறிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் விஜய் மல்லையாவுக்கு ரூ.5 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறதாம்.

பஞ்சாப் 65 கோடியும், டேர்டெவில்ஸ் 47 கோடியும், மும்பை இந்தியன் 42 கோடியும், ராஜஸ்தான் 35 கோடியும், சென்னை 19 கோடியும் கொல்கத்தா 11 கோடியும் நஷ்டமடைந்திருக்கின்றன. இதற்கு முந்தைய ஆண்டில்கூட இந்த அளவு நஷ்டமில்லையாம். தொடர் நஷ்டத்தால் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு ஆட்டோவி்ல போகக்கூட காசில்லையாம். முகேஷ் அம்பானி எல்லா சொத்தையும் ஐபில் மூலம் நாட்டு மக்களுக்குச் சேவை செய்யவே அர்ப்பணித்துவிட்டாராம்.

ஏன்யா, இப்படி நஷ்டமடையும் தொழிலை செய்து கொண்டிருக்கிறீர்கள்? கடையை மூடிவிட்டு வேறு வேலையைப் பார்க்க வேண்டியதுதானே என்று பொதுக்கணக்குக்குழு கேட்டிருக்கிறது. அவர்கள் சொல்கிறார்கள் மக்கள் சேவைதான் முக்கியம் என்று. அதுவும் சரிதான்.
..
.

புதன், 23 பிப்ரவரி, 2011

டிராவிட், அசார், லாரா, சச்சின்

கிரிக்கெட் ஷாட் அடிப்பதில் ஸ்டைல் மன்னர்கள் லாராவும் டிராவிட்டும். அசாருக்கும் பல ஷாட்களை ஸ்டைலாக அடிப்பார். சச்சின் எல்லா வகையான ஷாட்களையும் அனாசயமாக அடிப்பார். 

 
கவர் டிரைவ், ஆஃப் டிரைவ்: 
கவர் டிரைவ், ஆஃப் டிரைவ் ஷாட்களை ஸ்டைலாக அடிப்பதில்  டிராவிட், லாரா, ரிக்கி பான்டிங், சச்சின் ஆகியோரைக் குறிப்பிடலாம். நமது பார்வையில் இந்த ஷாட்டில் டிராவிட்டுக்குத்தான் முதலிடம்.

டிராவிட்டின் கவர் டிரைவ்
சச்சின் கவர் டிரைவ்
அசாரின் ஆஃப் டிரைவ்


கட், ஸ்கொயர் கட்,  லேட் கட்:

பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் இந்த ஷாட்டை அடிப்பார்கள். ஆப் சைடுக்கு வெளிய பந்து வந்துவிட்டால், கண்டிப்பாக டிராவிட் ஸ்கொயர் கட் அடிப்பார் என்று சின்ன குழந்தைக்குக் கூடத் தெரியும். சில நேரங்களில் ஸ்டம்புக்கு மிக நெருக்கமாக பந்தை விட்டு டேஞ்சரஸ் லேட் கட் ஷாட்களையும் அடிப்பார். சௌவ்ரவ் கங்குலியும் ஸ்கொயர் கட்டுக்கு பெயர் போனவர். ஆனால் ஆஃப் சைடு பந்துகளை சச்சின், சேவாக் போன்றவர்கள் வேறுவகையான ஷாட்களையும் அடிக்கிறார்கள். ரிவர்ஸ் ஸ்வீப்கூட செய்கிறார்கள்.
அசார் கட்

டிராவிட் ஸ்கொயர் கட்
 லெக் கிளான்ஸ்:
 லெக் கிளான்ஸ் ஷாட்களை எந்த பந்தாவுமில்லாமல் அடிப்பவர் சச்சின்தான். இந்த ஷாட்டை டிராவிட் ரொம்ப மெனக்கெட்டு அடிப்பார். அசார், ஜடேஜா, லாராவும் இதில் ஸ்டைலானவர்கள்.

  
டிராவிட் லெக் கிளான்ஸ்
லாரா லெக் கிளான்ஸ்

ஹூக், புல் ஷாட்:

நம்மூர் தோனி, சேவக் உள்பட எல்லோரும் ஹூக் ஷாட் அடித்துத்தான் ரன்களைக் குவிக்கிறார்கள். டிராவிட் மாதிரி ஆட்கள் ஹூக் அடித்து மாட்டிக் கொள்வார்கள்.
சச்சின் ஹூக்
சேவக் ஹூக்
 நிற்பதிலேயே ஸ்டைல்ஸ்:
பொதுவாக பேட்ஸ்மேன்கள் சைடு வாங்கி நிற்பதுதான் வழக்கம் நமது சந்தர்பால் மாதிரி ஆட்கள் ஓபனாக நிற்பார்கள்.




ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்ட்ரெய்ட் டிரைவ், ஆன் டிரைவ்கள் பின்னர் வரும்...

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பிசிசிஐ அணிக்கு சாணம் எறிய பயிற்சி!

ஹலோ மிஸ்டர் பரட்டை நான் கமலஹாசன் வந்திருக்கிறேன். ஏதோ ஹெல்ப் வேண்டுமென்று கூப்பிட்டிருந்தீர்கள் என மெயில் வந்தது... சொல்லுங்க உங்க வேலையை முடித்துவிட்டு நான் பாராட்டுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு  ஐயாவை வாழ்த்திப் பேசவேண்டும். கண்ணீர் வடிக்க வேண்டும்...ம்ம்

டேய் டேய் என்னடா மிமிக்ரி பண்ற சப்பாணிதானடா நீ... போய் எண்ணெய எடுத்திட்டு வந்து தேயிடா... ஓடு ஓடு... சீக்கிரம்.................... இதெப்படி இருக்கு?

பரட்டையண்ணே பரட்டையண்ணே எப்டீண்ணே கண்டு பிடிச்சீங்க... ஆத்தாதான் இப்படி சொல்லிக் குடுத்தது... இஸ்கூலு பசங்க மாதிரி டீசன்டா பேசினா எந்த நாயும் திட்டாதுன்னு சொல்லிச்சு... அதான் அப்பிடி பேசினேன்...

ம்... வரவர இவனுக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சுடோய்... ஒழுங்கா எண்ணெய் தேய்க்கலைன்னா... ரெய்னா மாதிரி உன்னையும் தண்ணிபாட்டில் தூக்குற வேலைக்கு அனுப்பிடுவேன்....

அதத்தாம்ணே நானும் கேக்கணுன்னு இருந்தேன்... அந்த ஆளுங்கெல்லாம் பந்து எறியறதுல மக்கா இருக்காங்களாம்ணே... நேத்து வராட்டிக்கு சாணி எறியற எடத்துக்கு வந்து அதிசயமா பாத்திட்டு இருந்தாங்கண்ணே...
இங்கயும் வந்திட்டாங்களா... டேய் சப்பாணி... சாணி எறியறத மட்டும் அவங்களுக்கு சொல்லிக் குடுத்திறாதேடா... இந்த ஊருல சாணி எறியறத நாங்கதான் மொத்தக் குத்தகைக்கு எடுத்திருக்கோம்னு.... நம்மளயெல்லாம் வெளிய அனுப்பிச்சிருவாங்க... அப்புறம் அவங்களைக் கேட்டுத்தான் சாணி தட்ட முடியும்...

நான் என்ன முட்டாளாண்ணே... அவங்கள ஓட வைக்கிறதுக்காக...."என் சுதந்திரம் என்பது உங்கள் சுதந்திரத்துக்குள் இல்லை. நான் ஒரு வியாபாரி.  கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நீந்திக் கொண்டிருப்பவன். சாணி தட்டுவது என் ரத்தத்தில் ஊறிப்போனது. எனக்கு வேறெதுவும் தெரியாது" அப்டீன்னு மிமிக்ரி பண்ணினேன்...

நீ புத்திசாலிடா...

ஆமா பரட்ட... மயிலும் இப்படித்தான் இடியட் இடியட்னு பாராட்டும்... ஆனா அவங்க கேக்க மாட்டேங்கறாங்கண்ணே... உன்னயப் பிரதமரா ஆக்குறோம்... அனுஷ்காவ கட்டி வெக்கிறோம்... எப்படியாவது எறியறதுக்கு சொல்லிக் கொடுத்திடுன்னு கெஞ்சினாங்கண்ணே...

அட... இதப் பாருடா... ஆங்...

ஆனா... நம்ம அளவுக்கு அவங்களுக்கு திறமை பத்தாதுண்ணே... சுவத்துல எறியச் சொன்னா ஆள அடிக்கிறாங்க பரட்ட... ஏதோ போகட்டும்னு சொல்லிக் கொடுத்தேன்... நீதான் அடுத்த பிரதமர்னு சொல்லிட்டு போயிருக்காங்க... பிரதமராயிட்டா நிறைய பேருக்கு எண்ணெய் தேய்க்கலாமாண்ணே...

"அதிகமா ஆசைப்பட்ட சப்பாணியும் முறுகலா தோசைசுட்ட சம்சாரமும் உருப்பட்டதா நியூஸே இல்லே"

என்ன பரட்டையண்ணே என்னையச் சொல்லிபுட்டு நீயே மிமிக்ரி பண்ணி நக்கல் பண்ற... இரு.. இரு... ஆத்தாகிட்ட சொல்லி குதிரநாயகம் படத்தை எடுத்து டூரிங் டாக்கீஸ்ல போட்டுக் காட்றேன்...

..

.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

தோனி, சச்சினுக்கு மேட்ச் ஃபிக்சிங் அழைப்பு

சிங்களப் பத்திரிகைகளை நமக்குப் பிடிக்காது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம், ராணுவம் ஆகியவற்றின் வாய்கள் அவை. ராஜபக்ஷவின் ஒலிபெருக்கிகள்; ஊது குழல்கள். அப்படி வால்பிடிக்கும் சிங்கள ஆங்கிலப் பத்திரிகைளுள் ஒன்று தி ஐலேண்ட்.

இந்தப் பத்திரிகையில் அண்மையில் வெளியான ஒரு கட்டுரை பரபரப்பானது. எங்களுக்கு உலகக் கோப்பை வேண்டாம் என்று அந்தக் கட்டுரையை எழுதிய ரசல் கூறியிருந்தார். இலங்கைக் கிரிக்கெட்டில் ஊழலும், நிர்வாகச் சீர்கேடும் மலிந்துவிட்டதாகவும் அதனால், இன்னொரு முறை உலகக் கோப்பையை ஜெயிப்பதை நாடு தாங்காது என்றும் அவர் கூறியிருக்கிறார். கேப்டன் சங்ககாரவுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ராய்ட்டர்ஸ் நிறுவனம் இதை செய்தியாக்கியதால், உலகம் முழுவதும் பரபரப்பானது.

இதே கருத்தைத்தான் நோஐபிஎல் அதிபரும் பல ஆண்டுகளாகக் கத்திக் கதறிக் கூறிக் கொண்டிருக்கிறார். ராய்ட்டர்ஸ் கண்டுகொள்ளவில்லை. கிரிக்கெட்டை விமர்சித்து எழுதுவதும் இங்கு ஆதரிக்கப்படுவதில்லை. அந்த அளவு உணர்வு ரீதியாக மக்கள் கிரிக்கெட்டுக்குள் பிணைந்து போயிருக்கிறார்கள். அதனால், அதில் நடக்கும் ஊழல்கள் பற்றி மக்கள் கண்டுகொள்வதில்லை.

லலித் மோடி என்பவரை நமக்குத் தெரியும். மிகத் திறமையானவர். எல்லா வகையான பணிகளையும் மிகப் பொறுப்பாகவும் மிகப் பிரமாண்டமாகவும் செய்யக் கூடியவர். ஆனால் நேர்மை என்று நடுத்தர வர்க்கம் பிதற்றிக்கொண்டிருக்கிறதே... அதுதான் அவரிடம் கிடையாது. பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்தார். வரி ஏய்ப்பு செய்தார். வெளிநாட்டில் போய் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பஸ் டே கொண்டாட்டம் உள்பட எல்லா விஷயத்திலும் சட்டம் தனது கடமையை பொறுமையாகத்தான் செய்யும் என்று கூறிக் கொண்டிருக்கும் நம்மூர் கமிஷனர், மோடிக்கு காதல் கடிதம் எழுதிவிட்டு காத்திருக்கிறார். இனிமேல் கடிதமும் எழுதப்போவதில்லையாம். ஆக, விஷயம் முடிந்தது.
வழக்குத் தொடர்ந்தவர்கள் எல்லாம் உத்தமர்கள் அல்ல. புகார் கொடுத்துவிட்டு நல்லவர்களாகிவிட்டார்கள். அவ்வளவுதான். மோடி இங்கே வந்து வழக்கைச் சந்தித்தாலும் பலருக்கு ஆபத்துதான். அதனால்தான் சுபம் போடப்பட்டிருக்கிறது.  இதனாலென்ன, உனக்கென்ன நஷ்டம், நாட்டு மக்களுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கலாம்.

காமன் வெல்த் போட்டியில் கொள்ளை அடித்தவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள், முறைகேடுகள் அம்பலமானதும் சிறைக்குச் சென்றார்கள். வழக்கு நடந்து அவர் குற்றமற்றவர்கள் என்று கூட நிரூபிக்கப்படலாம். ஆனால், ஏதோ அவர்களைக் கைது செய்யவாவது முடிகிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கட்டுக்கடங்காத பலம் கொண்டு திமுகவின் அமைச்சரே சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இது நாடகமா உண்மையா என்று தெரியாது. ஆனாலும் காவலர்கள் பிடித்து இழுத்துச் செல்வதே பெரிய தண்டனைதான்.

ஆனால் கிரிக்கெட்டில் மோசடி என்கிற குற்றச்சாட்டே கிடையாது. வரி ஏய்ப்பு மட்டும்தான். ஏனென்றால் அது பிசிசிஐயின் தனிப்பட்ட விவகாரமாம். வரியைக் கட்டிவிட்டால், அல்லது கணக்குக் காட்டிவிட்டால் மோடி மஸ்தானுக்கு சசி தரூரின் இருக்கையைக் கூடக் கொடுப்பார்கள்.

இதெல்லாம் நம்மை எந்த விதத்தில் பாதிக்கும் என்று கேட்கலாம். ஸ்பெக்ட்ரம் ஊழலால் பணம் கொள்ளை போனது தெரியும். ஆனால், அதுதான் தமிழகத்தில் ஜனநாயகத்தையே விலைக்கு வாங்கப் பயன்பட்டது என்கிற கோணத்தில் யார் பார்க்கிறார்கள். அந்த வெற்றிதான் மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கு வழியில்லாமல் செய்துவிட்டது. அதுதான் மே 18 முடிவுக்குக் காரணமாக அமைந்தது. இந்த வெற்றியால் கிடைத்த தெனாவெட்டுதான் பெட்ரோல், டீசல் விலை நிர்ணய உரிமையை கம்பெனிகளிடமே கொடுக்கச் செய்தது. நீதிபதியை மிரட்டச் செய்ததும், பல்கலைக்கழக ஆவணங்களைத் திருத்தச் செய்ததும்கூட இதனால்தான்.

கிரிக்கெட்டும் இப்படித்தான். சரத் பவாரை மந்திரி வேலையிலிருந்து நீக்குவதற்கு சோனியா உள்பட யாருக்கும் துணிச்சலும் அதிகாரமும் இல்லையே ஏன்? ஐபிஎல் மூலமாகவும் விமானப் போக்குவரத்துத் துறை மூலமாகவும் நாட்டு மக்களை ஏமாற்றிய பிரபுல் படேலுக்கு முக்கியப் பதவி ஏன் வழங்கப்பட்டிருக்கிறது? இப்படி பல கேள்விகள் நம்மிடம் இருக்கின்றன. இதற்கெல்லாம் பதில் கிரிக்கெட்தான். இப்படி முறைகேடாகச் சம்பாதிக்கும் பணம் குறுக்கு வழிகளை உருவாக்குவதற்குத்தான் பயன்படுத்தப்படும்.
சச்சினும் தோனியும் இப்படிச் சம்பாதிக்கிறார்களா என்று தெரியாது. அவர்களுக்கு மேட்ச் ஃபிக்சிங்கில் நம்பிக்கை இருக்கிறா என்பது பற்றியும் பேச விரும்பவில்லை.

அவர்களிடம் நாம் முன் வைக்கும் கோரிக்கை இதுதான். நீங்கள் இருவரும் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட வேண்டும். புக்கிகளுடன் அல்ல... நாட்டு மக்களுடன்தான். முடிந்தவரை முட்டை அடியுங்கள். இல்லாவிட்டால் மற்றவர்களை ரன்அவுட் ஆக்குங்கள். நோபால் போடச் செய்யுங்கள். எப்படியாவது, இந்த முறை உலகக் கோப்பை என்கிற மாயை நமக்குக் கிடைக்கக்கூடாது. அடுத்த முறை உலகக்கோப்பை என்ற ஒன்றே இருக்கக்கூடாது. அது உங்கள் பொறுப்பு.
..
..
.

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

செபக் தக்ராவும் கிரிக்கெட்டும்: ஐசிசியின் அடுத்த சதி

 விளையாட்டு வீரர்களுக்கென ஒரு கோட்டா உண்டு. கல்வி, வேலைவாய்ப்புகளில் இந்த கோட்டாவைப் பெற எல்லோரும் தீவிரமாக முயல்வார்கள். மாநில அளவிலோ, தேசிய அளவிலோ  ஆடியிருந்தால் இந்த கோட்டாவில் மெடிக்கல் காலேஜ் சீட்டும், மத்திய அரசு என்ற பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல வேலையும் கிடைத்துவிடும். மாநில அரசு என்ற குட்டி நிறுவனமும் சலுகைகள் தரும். எந்த மாதிரி விளையாட்டுக்கெல்லாம் இந்த கோட்டா உண்டு அதுதான் தெரியாது. தேசிய அளவில் கிரிக்கெட் ஆடிய எவரும் இந்தக் கோட்டாவுக்கு அலைவதில்லை. ஏற்கெனவே வீடு நிறைய கரன்சியைக் குவித்திருப்பார். காலேஜ் சீட்டும் அரசு வேலையும் அவர்களுக்கு தேவையேயில்லை. செஸ், பேட்மின்டன் போன்ற விளையாட்டுகளுக்கும் நல்ல ஸ்பான்சர்கள் கிடைக்கின்றனர். அவர்களும் மெனக்கெடுவதில்லை. அப்படியானால் யார்தான் இந்த கோட்டாவை பயன்படுத்துகிறார்கள்?

நம்மூர் பெற்றோர்கள் புத்திசாலிகள் பிள்ளையை எந்த ஆட்டத்தை ஆடவைத்தால் அவனுக்கு கோட்டாவில் எல்லாம் கிடைக்கும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். மாநில அளவில் ஆடுவதைவிட, தேசிய அளவில் ஆடுவதையும்விட, சர்வதேச அளவில் ஆடினால்தான் கோட்டா பெறுவது ஈஸி என அவர்களுக்குத் தெரியும். ஆனால் எந்த ஆட்டம் ஆடுவது...? கிரிக்கெட் ஆட வேண்டுமென்றால் பிசிசிஐயின் காலில் தவம் கிடக்க வேண்டும். டென்னிஸ், செஸ், பேட்மின்டன் போன்ற எல்லாவற்றுக்கும் போட்டி அதிகம். தேசிய, சர்வதேச போட்டிகளில் ஆடுவது எளிதல்ல. யாருமே ஆடாத ஆட்டத்தைத் தேர்ந்தெடுத்து அதில் சர்வதேசப் போட்டியில் பங்கேற்றால் ..... சூப்பர் ஐடியா..

இப்படிப்பட்ட பெற்றோர்தான் பிள்ளைகளை செபக் தக்ரா போன்ற ஆட்டங்களை ஆடவைக்கிறார்கள்.  செபக் தக்ரா தெரியுமில்லையா...? கிரிக்கெட்டை விட அதிக நாடுகளில் ஆடப்படும் ஆட்டம்தானையா அது. வாலிபால் இருக்கிறதே அதைக் காலால் ஆட வேண்டும் அவ்வளவுதான். இந்தப் பெயரைக் கேள்விப்படவில்லையென்றால் உங்களுக்கோ உங்கள் பிள்ளைக்கோ அண்ணா யுனிவர்சிடியும், எம்ஜிஆர் யுனிவர்சிடியும் சீட் தரமாட்டார்கள். இந்த ஆட்டத்தில் சர்வதேசப் போட்டிகளில் ஆடுவதென்பது மிக எளிது. ஏனென்றால் இந்தப் பேரைக் கேள்விப்பட்டிருப்பவர்களே சொற்பமானவர்கள்தான். ஒருவேளை சர்வதேச போட்டிகளில் வெற்றிபெற்றுவிட்டால், உலகச் சாம்பியன் என்று கூறிக்கொள்ளலாம்... காலேஜ் சீட் கிடைக்கும். அரசு வேலையும் கிடைக்கும்...

இதுபோன்ற புத்திசாலித்தனத்தைத்தான் ஐசிசி பயன்படுத்துகிறது. அடுத்த உலகக் கோப்பை போட்டியிலிருந்து 10 அணிகள் போதும் என்கிறது. ஏற்கெனவே 1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 9 அணிகள் மட்டும்தான் ஆடின. இப்போது பழைய வரலாறு திரும்புகிறது. சிறிய அணிகளால் நேரமும் வீணாவதுடன், விறுவிறுப்பும் போகிறதாம். என்னைக் கேட்டால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை மட்டும் கொண்ட உலகக் கோப்பையை நடத்தலாம். இங்குதான் "அவர்கள்" அதிகம். என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார்கள். ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியிலும், சுழற்சி முறையில் ஒரு அணி வெற்றிபெறுவது போல திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். அப்போதுதான் "அவர்களை" தக்க வைத்துக் கொள்ள முடியும். 1983 -ஐக் காட்டியே இன்று வரைக்கும் அவர்களை ஆட்டுவிக்க முடிகிறதல்லவா?

அந்த விளம்பரம் மீண்டும் நினைவுக்கு வருகிறது...

"நான் ரேஸ்ல செகண்டா வந்தேன்"

"எத்தனை பேர் ஓடினாங்க"

"ரெண்டு"

...
..

சனி, 19 பிப்ரவரி, 2011

சச்சின் எதிர்ப்பு: நோஐபிஎல் அதிபரின் வெள்ளை அறிக்கை

சச்சினுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதி வருவது பற்றி நண்பர்கள் பலர் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், பிறருடைய மனதைப் புண்படுத்தியமைக்காக மன்னிப்புக் கோருவதற்கு நோஐபிஎல் அதிபர் முன்வந்திருக்கிறார்.


இதுபற்றி நேற்றிரவு அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சச்சின் மிகச்சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் என்பது மற்றவர்களைப் போலவே எனக்கும் தெரியும். எனினும் கிரிக்கெட்டில் உள்ள மோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் எழுதப்படும் படைப்புகளில் சச்சினைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை. எல்லாவகையிலும் கிரிக்கெட்டை ஆக்கிரமித்திருக்கும் சச்சினை விட்டுவிட்டு கிரிக்கெட்டைப் பற்றி எழுதச் சொன்னால் எப்படி? (கைதட்டல்)

அதனால், கிரிக்கெட்டுக்கு எதிராக ஏதாவது எழுதும்போது அனிச்சையாகவே சச்சினும் தோனியும் வந்துவிடுகிறார்கள். அவர்கள் திறமையானவர்கள் என்பதை நாம் ஒருபோதும் மறுத்ததில்லை. நையாண்டி செய்யும் இடங்களில் அவர்களது பெயர்களைப் பயன்படுத்துவதும்கூட அவர்களின் திறமைக்கும், புகழுக்கும் எனது அடிமனம் தரும் அங்கீகாரமே காரணம்.

இந்த நோஐபிஎல் பன்னாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டதே, ஐபிஎல் போட்டிகள் மூலமாக கிரிக்கெட் எப்படி வியாபாரமாக்கப்படுகிறது, அதில் நகரங்களின் பெயர்களும் நாட்டின் பெயர்களும் எப்படிப் போலித்தனமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை விவாதத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான்.

நமது நாட்டில் கிரிக்கெட் மறுஆய்வுக்கு உட்பட வேண்டும், அதுபற்று ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற வேண்டும் என்பதே நமது விருப்பம். அதற்கான களமாகவே இதை நான் கருதுகிறேன். நமது அதீத எதிர்ப்பின் காரணமாக தொடங்கப்பட்ட நோக்கத்திலிருந்து நமது கம்பெனி சற்று விலகியது போன்ற பிரமை தற்போது ஏற்பட்டிருக்கிறது. தம்பி கூர்மதியான், முகிலன், ஆதவா, ஜெயதேவ் தாஸ் ஆகியோரின் கருத்துக்கள் நம்மைத் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றன.

அதனால் பொதுமக்களின் சென்டிமென்ட் கருதி சச்சினை விவாதத்தில் இருந்து விலக்கிவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். இதுவரை யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதில் எனக்குத் தயக்கம் ஏதும் இல்லை. எனினும் பிசிசிஐயிடம் இருந்து கிரிக்கெட்டையும் கிரிக்கெட்டிடம் இருந்து நாட்டையும் காப்பாற்றும் நமது போர் தொடரும்.
 
..
..

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

எதிரணிக்கு ஆடுவாரா சச்சின்?


அண்ணே வணக்கம்னே!

என்னடா ஹோஸ்னி முபாரக் தலையா, இன்னிக்கு தேங்கா பொறுக்கப் போகலையா...

சும்மாயிருங்கண்ணே... இன்னிக்கு வேற வேலை இருக்கு... நானே பீலிங்ல இருக்கேன்...

இவரு பெரிய சிவாஜி, பீலிங்க கொட்டிட்டாலும்... அப்படி என்னடா பொல்லாத பீலிங்கு..

என்னண்ணே அப்டிச் சொல்லிட்டீங்க... நம்ம இந்திய டீம் இன்னிக்கு ஓல்டு கப் ஆடுதாம்னே...

என்னது ஓல்டு கப்பா... பாருங்க மகா ஜனங்களே... உலகக் கோப்பைன்னை என்னன்னே தெரியாத இந்த நாயெல்லாம் கிரிக்கெட் பத்தி பேசுது...

சொல்றதக்கேளுங்கண்ணே... நம்ம தோனி டீம் இன்னிக்கு பங்களா டீம் கூட ஏதோ காக்காவுல ஆடுதாம்ணே...

டே கோமுட்டி, அது டாக்காடா....

ஆங்... அதாம்ணே...

அதுக்கு என்னடா செய்யணும்...

பங்ளா காரங்கள பழிவாங்கணும்னே... போனவாட்டி நம்ம மானம் போனதுக்கு அவங்கதாம்ணே காரணம்.. ஏதாச்சும் ஐடியா இருந்தா சொல்லுங்கண்ணே...

பெப்சி பாட்டில்ல பால்டாயில ஊத்திடுவோமாடா...

பெப்சி குடிச்சே ஒண்ணும் ஆகாதவங்கள பால்டாயில் என்னண்ணே செஞ்சிடும்... வேற ஏதாவது டெல் மீண்ணே...

வேற என்ன பண்றது... சைட் ஸ்கிரீன்ல விஜய் படத்த ஓடவிடலாமா... அதுல பீதியாகி அவங்க ஓடிடுவாங்க நாம மேன் ஆப்த மேட்ச் டாக் ஆப்த மேட்ச் எல்லாம் வாங்கிட்டு ஓடியாந்திடலாம்...

அது சரிப்படாதுண்ணே... ஏற்கெனவே எந்திரன் படம் பாத்த பிறகும் அவங்களுக்கு ஒண்ணும் ஆகலையாம்ணே...

அப்படியா ஆச்சரியமா இருக்கே... படத்தப் பாத்திட்டு நமக்கெல்லாம் நாலுநாள் வாந்திபேதி ஆச்சேடா... அவங்க எப்படியா சமாளிச்சாங்க... ஒருவேளை அவங்க ஸ்டிராங் டீமா இருப்பாங்களோ...

ஆமாண்ணே... அதான் லாஸ்ட் டைம் ஜெயிச்சுட்டாங்க... இப்ப எப்படியாவது கவுத்திடனும்ணே...

பேசாம... சச்சின் தெண்டுல்கர எதிரணியில சேர்த்து விட்டரலாமா... இவரு பாட்டுக்கு செஞ்சுரி அடிப்பாரு.... அப்புறம் தோக்க வெச்சிடுவாரு....

அண்ணே சூப்பர் ஐடியாவா இருக்குண்ணே... ஜனங்க ஏத்துக்குவாங்களா...

ஜனங்களா....  அவங்க காதுலதான் பெர்மனென்டா பூ வெச்சுருக்குமேடா...

....
..

தோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்

மு.கு: இது மீள்பதிவு.

ஒரிசா, சத்தீஸ்கர், அசாம், உத்தரகண்ட், பிகார், மேற்கு வங்கம், தமிழகத்தின் தேனி, தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் தெரியும் இந்தியா வேறு, இந்தியா என்கிற பெயரில் ஆடிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் அணியின் முகம் வேறு. மேற்சொன்ன இடங்களில் இந்தியா ஒரு மூன்றாந்தர நாடு. வறுமையிலும் பஞ்சத்திலும் வாடும் நாடு. கல்வி அறிவில்லாத நாடு. உணவுக்காகவும், வேலைக்காகவும் வேறு பகுதிகளைத் தேடும் நாடு. இலவசங்களுக்காக வரிசையில் நிற்கும் நாடு.

ஆனால், பிசிசிஐ என்கிற கார்ப்பரேட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் கிரிக்கெட் அணியின் இந்தியா, வளர்ச்சியடைந்த நாடு. வளர்ச்சியடைந்த நாடுகளாகக் கருதப்படும், பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்றவற்றுக்கே உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நாடு. கிரிக்கெட் உலகில் எதேச்சதிகாரப் போக்கு கொண்ட நாடு.
கடந்த 20 ஆண்டுகளில் மேம்பாலங்களாகவும், குட்டிக் கார்களாகவும், மெட்ரோ ரயில்களாகவும் இந்தியாவின் பொருளாதார வீக்கம் பெரிதாகிக் கொண்டே போவதுபோல, கிரிக்கெட் அணியின் செல்வாக்கும், அச்சுறுத்தும் போக்கும் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது.

உண்மையைச் சொன்னால், இந்தியக் கிரிக்கெட் அணி நினைத்தால் எந்த நாட்டில் வேண்டுமானாலும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம், அல்லது நிறுத்தலாம், மாற்றி அமைக்கலாம். எந்த அணியை வேண்டுமானலும் நசுக்கலாம். மேலே கொண்டுவரலாம். அந்த அளவுக்கு இந்திய மக்களின் தலைகளையும், கிரிக்கெட் ஆர்வத்தையும் சந்தைப்படுத்தி பிசிசிஐ செல்வாக்குப் பெற்று வருகிறது.

ஒரு களியாட்டம் என்கிற வகையில் எல்லா பொழுதுபோக்கையும் போல இது நடந்தால், வெறும் வியாபாரம் என்று கூறிவிட்டுப் போய்விடலாம். ஆனால், இங்கு நாட்டையும் துணைக்கு அழைத்து ஒரு மோசடி நடக்கிறது.
2ஜி அலைக்கற்றை இந்தியாவின் வளம் என்றால், இந்திய மக்களின் கிரிக்கெட் ஆர்வம் மட்டும் தேசத்தின் சொத்து இல்லையா? 

2ஜி, 3ஜிக்களை எல்லாம் ஏலம்விட்டு ராயல்டி கேட்கும் இந்திய அரசு, எந்த ராயல்டியும் இல்லாமல் ஒரு கூட்டம் இந்தியாவில் இந்தியாவின் வளத்தை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பதை எப்படி அனுமதிக்கிறது? நம்மையெல்லாம் விற்கிறார்கள், அதுவும் தனியாருக்கு, அப்படித்தானே?

இவ்வளவு காலமும் பிசிசிஐதானே கிரிக்கெட்டை கட்டிக் காப்பாற்றி வந்தது, அப்போதெல்லாம் எழுப்பப்படாத கேள்வி இப்போது எழுப்பப்படுகிறது என்று கேட்கலாம். இது நாள்வரை இல்லாத அளவுக்கு கடந்த 15 ஆண்டுகளில்தான் கிரிக்கெட் பெரும் வர்த்தகமாகியிருக்கிறது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பது போல் முதலிலேயே கிரிக்கெட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தனியார் கூட்டம்தான் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பது நிச்சயமாக மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகும். இந்தத் துரோகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்றால்,  2ஜி அலைக்கற்றை, எஸ்-பாண்ட் விவகாரத்தை எல்லாம் கேள்வி எழுப்பவே கூடாது.

ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக முதற்கட்டமாக 8 அணிகள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் ரூ.300 கோடி அளவுக்கு ஏலம் போயின. பணம் பிசிசிஐக்கு போனது. அவர்கள் பிரித்துக் கொண்டார்கள். யாருடைய சொத்தை யார் ஏலம் விட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதில் இவர்களுக்கு வரிச் சலுகை வேறு.

இப்படிக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தாரை வார்த்துத் தரப்பட்டகிரிக்கெட், இப்போதெல்லாம் உண்மையாக ஆடப்படுவதில்லை; ஸ்கிரிப்ட் போல எழுதப்படுகிறது என்பதுதான் நிஜம்.
கடந்த உலகக் கோப்பை போட்டிகளில் டிராவிட் அணி தோல்வியுற்ற போதும், ஐபிஎல் போட்டிகளில் நடந்த மோசடிகள் வெளியானபோதும், இந்திய கிரிக்கெட், பிசிசிஐ என்கிற கார்ப்பரேட் நிறுவனத்தின் பிடியில் இருந்து விடுதலையாகும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் நடக்கவில்லை. இந்த முறையாவது அது நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். தோனி அணி தோற்பதன் மூலம் கிரிக்கெட்டும், பின்தங்கிய இந்தியாவும் காப்பாற்றப்படட்டும்.

...
..
.

வியாழன், 17 பிப்ரவரி, 2011

உலகக் கோப்பை அட்டவணை மோசடி: அயர்லாந்து, நெதர்லாந்துக்கு துரோகம்

தொடங்கிவிட்டது உலக நாடுகள்(!) அனைத்தும்  கலந்து கொள்ளும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் டோர்னமென்ட். இந்தப் போட்டியை உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்க்கப்போகிறார்கள். அதனால் ஆதித்யா, சிரிப்பொலி சேனல்கள் இப்போதே கவலைப்படத் தொடங்கிவிட்டன. எனினும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும் என்பதில் சந்தேகமில்லை.
நம்ம ஊரில் கிரிக்கெட் டோர்னமென்ட் நடத்தினால், போட்டியை நடத்தும் அணி நேரடியாக செமி பைனலுக்கு வருவதுபோல அட்டவணை அமைப்போம். அதுதான் நீதி, அதுதான் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நமது பாரம்பரியம். செமிபைனலில் அம்பயர்களைக் கொண்டு, எல்பிடபிள்யூக்கள் மூலமாகவும் ரன் அவுட்கள் மூலமாகவும் ஜெயித்துவிடலாம். அதன் பிறகு உள்ளூர் தேசபக்தர்களைக் கொண்டு கலகம் செய்வோம். வெளியிலிருந்து முட்டை, காலி வாட்டர் பாட்டில், மாட்டு சாணம், விஜய் பட சிடி என தேவையற்றவைகளைக் கொண்டு அடிப்போம். நெத்தியில் பந்து படும்போது எல்பிடபிள்யூ தருவோம். உருண்டுவரும் பந்தைப் பிடித்துவிட்டு கேட்ச் என்போம். அம்பயரின் தீர்ப்பே இறுதியானது உறுதியானது என மைக் செட் அலறும். எதிரணி பாதியிலேயே ஓட்டம் பிடிக்கும். இதுதான் நடப்பு. இதை எதிர்த்து யாராவது பேசினால் அவர்கள் விவரம் தெரியாதவர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் மரபைத் தெரிந்து கொள்ளட்டும்.

இந்த மரபுதான் இப்போது ஐசிசி உலகக் கோப்பையிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த போட்டியில் டிராவிட் அணியும் பாகிஸ்தான் அணியும் முதல் சுற்றிலேயே வீட்டுக்கு வந்தன. இந்தியாவுக்கு வங்கதேசம் ஆப்பு வைத்தது என்றால், பாகிஸ்தானுக்கு அயர்லாந்து டின் கட்டியது. இப்படி வேறு எந்த அணியும் திறமை காட்டினால், நமது மரபு என்ன ஆவது. உள்ளூர் தேச பக்தர்களின் மனங்கள் உடைந்து போகாதா? இதைக் கருத்தில் கொண்டுதான் இந்த ஆண்டுக்கான போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்கும்போது மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது.

டோர்னமென்ட் டைரக்டர் ரத்னாகர் ஷெட்டிதான் அண்மையில் இதற்கான அன்டர்கிரவுன்ட் வேலைகளையெல்லாம் மக்களுக்கு விளக்கியிருக்கிறார். உள்ளூர் அணிக்கு எந்த ஆடுகள் சாதகமாக இருக்கும், எத்தனை நாள் இடைவெளி விட்டால் நம் ஆட்கள் சுயநினைவுக்குத் திரும்புவார்கள் என்பதையெல்லாம் கணக்கிட்டுத்தான் அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஐசிசியும் இதற்கு ஒத்து ஊதியிருக்கிறது. இந்த முறை அயர்லாந்து, நெதர்லாந்து, வங்கதேசம் என எந்த அணியும் அடுத்த சுற்றுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஓரிரு ஆட்டங்களில் அவர்கள் ஜெயித்தாலும் நிச்சயமாக அது நமது தேசத்துக்கு எந்தவகையிலும் அச்சுறுத்தலாக இருக்காது. அதனால், தேசபக்தர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.
..
.

.

அசார் - சச்சின் மோதல் : யார் குற்றவாளி?

அஜாரூதீன் என்று அழுத்தமாக அழைக்கப்படும் அசாருதீன் நோஐபிஎல் அதிபருக்கு மிகவும் பிடித்த ஆட்டக்காரராக ஒருகாலத்தில் இருந்தார். குச்சிபோல பேட்டை அவர் எடுத்துவரும் ஸ்டைலே கவர்ச்சியாக இருக்கும். காலால் பந்தை மேலே எழுப்புவது, பாய்ந்து பீல்டிங் செய்வது என மைதானத்தில் அவரது ஆளுமை எப்போதும் இருக்கும். ஆனால் மேட்ச் ஃபிக்சிங் எனும் மோசடிக்குப் பிறகு அவரை கரிசனத்துடன் பார்க்க முடியவில்லை. அதனால் அவரைப் பிடிக்காமல் போயிற்று.

கபில்தேவ் வேறு மாதிரியான ஆள். 431வது டெஸ்ட் விக்கெட்டை எடுப்பதற்கு அவர் ஸ்பின் பவுலிங் போட்டபோதும்கூட அவரைப் பிடிக்கத்தான் செய்தது. பிசிசிஐயிடம் இப்போது அவர் சரணடைந்திருந்தாலும்கூட அவர் மீது யாரும் குற்றம்சாட்டியதில்லை.

சச்சின் தெண்டுல்கரை மற்றவர்களுடன் ஒப்பிட முடியாது. கபில்தேவ், அசாருதீன் உள்ளிட்ட அனைவரையும்விட திறமையானவர். ஆனால் மேட்ச் பிக்சிங் முறைகேடுகளுக்குப் பிறகு சச்சினையும் பிடிக்காமல் போயிற்று. அவர் செஞ்சுரி அடிக்கும்போது மற்றவர்கள் ரசிப்பதைப் போல ஐபிஎல் அதிபரால் ரசிக்க முடியவில்லை. சச்சின் மீதான குற்றச்சாட்டு இன்று வரைக்கும் மறுக்கப்படவில்லை. அசாருதீனை எதற்காக மற்றவர்கள் ஒதுக்கினார்களோ அதே காரணத்துக்காக சச்சின் தெண்டுல்கரும் ஒதுக்கப்படுகிறார். மற்றபடி அவர் மீது சேற்றைவாரி வீசு வேண்டும் என்ற எண்ணமோ, நம்மை அணியில் சேர்ப்பதற்கு அவர் ரெகமண்ட் செய்யவில்லை என்ற கோபமோ கொஞ்சமும் இல்லை.

உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில், சச்சினுக்கும் அசாருதீனுக்கும் இருந்த பகை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மேட்ச் பிக்சிங் முறைகேட்டில் அசாருதீனை போட்டுக் கொடுத்ததில் சச்சினுக்கும் பங்குண்டு என்பதை நினைவில் கொண்டு மேற்கொண்டு படிக்கவும்.

பிப்ரவரி மாத ஜிக்யூ இதழுக்கு அசாருதீன் ஒரு பேட்டியளித்துள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கை பற்றியும், அரசியல் வாழ்க்கை பற்றியும் விவரித்திருக்கும் இந்தப் பேட்டியில் சச்சினின் கேப்டன்சி பற்றிய கேள்விக்கு, "அவரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை" என்று வெறுப்பாகப் பதிலளித்திருக்கிறார்.


மேட்ச் பிக்சிங் முறைகேட்டில் தம்மீது ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்படியானால் என்ன என்று அனைவருக்கும் தெரியும் என்று அவர் கூறியிருப்பதைப் பார்த்தால் பிசிசிஐ, சச்சின் உள்பட அனைவருக்கும் தெரிந்ததேதான் இந்த மோசடி நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் அமைப்புகள் இன்று வரைக்கும் பிரச்னையை மூடி மறைக்கும் வேலையை மட்டுமே பார்த்து வருகின்றன.

மோடி - சசி தரூர் விவகாரத்துக்குப் பிறகு ஐபிஎல் மோசடிகள் தெரிய வந்ததுபோல், இப்போது சச்சின் - அசார் உள்பகை மோதலால் பழைய மேட்ச் பிக்சிங் மோசடிகளில் உண்மை வெளிவந்தால் நன்றாக இருக்கும். தங்கள் மீதான கறையைக் கழுவிவிட்டு சச்சினும் பிசிசிஐயும் இந்தியாவுக்காகக் கொடி பிடிக்கட்டும். அதுவரையில் இந்தியா ... இந்தியா... என்று கிரிக்கெட் மைதானங்களில் கோஷமிடுவோருக்கு ஒரு அய்யோ!

அசாரின் பேட்டி: Azharuddin interview to GQ Magazine




(கிளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்)
.
.
.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

இந்தமுறை வங்கதேசம் இல்லை, அயர்லாந்து அல்லது நெதர்லாந்து!

முன்குறிப்பு: எப்போதும் நெகடிவ் மனநிலையுடன் எழுதுவதாகக் குற்றம்சாட்டுவோருக்காக ஒரு பாசிட்டிவ் பார்வை.
உலகக் கோப்பையை எந்த அணி ஜெயிக்கும் என்று கங்குலியிடம் கேட்ட நிருபருக்கு என்ன கொழுப்பு இருக்க வேண்டும்? மனுஷன் நொந்துபோய் இருக்கும் நேரத்தில் இதெல்லாம் கேட்டால் அவருக்கு கோபம் வரும் அதைப் பார்த்து ரசிக்கலாம் என்றுதானே இப்படிக் கேட்கத் துணிந்தீர்கள். ஆனால் புண்களால் பண்பட்டிருக்கும் கங்குலி என்ன சொன்னார்? இந்த மாதிரி ஆதரவு ஊகத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னாரா இல்லையா? அவரு எங்க ஆள். அவருக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். எந்த அணியாவது ஜெயிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ இல்லையோ, தோனி அணி தோற்க வேண்டும் என்று அவர் நிச்சயம் விரும்புவார். அந்த வகையில் அவரும் ஐபிஎல் அதிபரின் கட்சித்தான். பின்ன... என்.....ன.... அடி... கொஞ்ச நஞ்சமா?

ஆனால் அவருக்கு ஒரு கசப்பான சேதி கிடைத்திருக்கிறது. கடந்த உலகக் கோப்பை போட்டியில் டிராவிட் அணியின் கதையை முடித்து வைத்தது வங்கதேசம்தான். இந்த முறையும் அதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானுடன் அந்த அணி ஆடிய பயிற்சி ஆட்டத்தைப் பார்த்தால், இது நடக்காது போலத் தெரிகிறது. அதுவும் 19-ம் தேதி தோனியை அணியை எதிர்த்து ஆட வேண்டிய அதே மைதானத்தில் நடந்த பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தானிடம் வங்கதேசம் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது. சேஷாத்தும், மிஸ்பாவும் பின்னியெடுத்துவிட்டார்கள். அதனால், இந்த முறை அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. இருந்தாலும் டாக்கா மைதானத்தில் வங்கதேச அணி துடிப்பாய் ஆடினால் நல்லது. நெதர்லாந்து, அயர்லாந்து, வங்கதேசத்துக்கு நமது வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு.
..
.

திங்கள், 14 பிப்ரவரி, 2011

தோனி முட்டை அடித்தது ஏன்? தென்னாப்பிரிக்கா தோற்றது ஏன்?

வழக்கமாகவே நோஐபிஎல் அதிபருக்கு தூக்கத்தில் கனவு வரும். இந்திய கிரிக்கெட் அணிக்காகக் களமிறங்கி வங்கதேச அணியைப் பழிவாங்குவது போன்ற கனவு அது. நாட்டுப் பற்றுக் கொண்ட அனைவருக்கும் வரக்கூடிய கனவுதான் அது. நோஐபிஎல் அதிபருக்கு கடந்த சில நாள்களாக அப்துல் கலாம் சொன்னது போல 2020 பற்றிய கனவு வருகிறது.
 அது 2020ம் ஆண்டு. லீப் வருடம் என்று காலண்டர் சொன்னது. நன்றாக நினைவுக்கு வருகிறது பிப்ரவரிக்கு 29 நாள்கள். குட்ரோச்சி வெளியுறவு அமைச்சராகவும் அஜ்மல் கசாப் உள்துறை அமைச்சராகவும் இருப்பது போன்று அந்தக் கனவில் தெரிகிறது. இதில் அதிர்ச்சியாகி நின்றால், அந்தப் பக்கம் ராணுவ அமைச்சராக எகிப்தின் ஹோஸ்னி முபாரக் இருக்கிறார். இதெல்லாம் எப்படி சாத்தியம், இது இந்தியாதானே இங்கு எப்படி குட்ரோச்சியும் ஹோஸ்னி முபாரக்கும் வந்தார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. சரி அது போகட்டும் பிரதமர் யாரென்று பார்த்தால் ஆ..... ராசா. ஆ.... அவரது அலுவலக வாசலில் ஒரு போர்டு இருந்தது.  அதில் "முதலில் வருவோருக்கு முன்னுரிமை" என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. கூடவே, முந்தைய அரசின் கொள்கைகளையே எப்போதும் பின்பற்றுவோம் என்றும் எழுதப்பட்டிருந்தது. குட்ரோச்சி, கசாப், முபாரக் எல்லாம் எப்படி அமைச்சரானார்கள் என்பது இப்போது புரிந்துவிட்டது. ராசா ராசாதான்...

 இந்தப் பக்கம் 2023-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவுக்குத்தான் என்று இனிமையான குரல் கேட்டது. இந்த உலகக் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெற்றுவிடுவேன் என்று சச்சின் அறிவித்திருப்பது செய்தித்தாள்களில் தெரிந்தது. உலகக் கோப்பையை சச்சினுக்குப் பெற்றுத்தருவதே தனது லட்சியம் என்று கேப்டன் கேணி அறிவித்திருந்தார். சச்சின் தெண்டுல்கரின் ஆட்டமே தங்களுக்கு பெரிய பலம் என்றும் அவர் கூறியிருந்தார். 120 சதம் அடித்த நாயகனே என்றும் அவரைப் பற்றிய எஸ்எம்எஸ்கள் வந்துகொண்டிருந்தன. இதற்கு மேல் அந்தக் கனவைப் பற்றிச் சொல்ல முடியாது. தேச நலனுக்கு உகந்தது இல்லை என்பதால் அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று... விட்டுவிடலாம்.
---

உலகக்கோப்பை ஆட்டங்களிலேயே மிகச் சிறப்பான போட்டி எது கேட்டால் எல்லோரும் சொல்வார்கள் 1999-ம் ஆண்டு ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டிதான் என்று. இன்றைக்கும் அப்படித்தான் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் போட்டியில் ஆஸி 213 ரன்கள் அடித்தது. க்ளுஸ்னரும் டொனால்டும் களத்தில் இருந்தபோது, தென்னாப்பிரிக்கா சரியாக 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இரண்டும் சம பலம் வாய்ந்த அணிகள் என்று சொல்லப்பட்டன. தென்னாப்பிரிக்காவுக்கு துரதிருஷ்டம் பின்தொடர்வதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்தத் தொடர் முழுவதுமே காதில் ஹெட்போனுடன் மைதானத்தில் வலம் வந்துகொண்டிருந்த குரோனியேவை எல்லோரும் மறந்துவிட்டார்கள். மேட்ச் ஃபிக்சிங்கில் சர்ச்சையில் சிக்கிய அவர், அந்தப் போட்டியில் எடுத்த ரன்கள் முட்டை.... தலைப்புக்கு முழு அர்த்தத்தையும் இதற்கு மேல் விவரிக்க முடியாது. கூறியது கூறல் என பொதுஜனம் கோபித்துக் கொள்ளும்.

பின்குறிப்பு: எதையாவது கண்டுபிடித்துக் கூறினால் சிறந்த கண்டுபிடிப்பாளர் பட்டம் கொடுக்கவேண்டுமே தவிர, எஸ்எம்எஸ் மூலம் இலக்கணப் பிழைகளுடன் மிரட்டல் விடுக்கக்கூடாது.
.
.
.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும் - தோனிக்கு ஒரு காதல் கவிதை


 குறிப்பு: தோனியிடம் கொடுத்துவிடும்படி ரசிகை ஒருவர் மெயில் அனுப்பிய கவிதை இது


பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும்

யாயாகிய யாயயே!
அரிய கிண்ணத்தை
எளிதாய்ப் பெயர்த்த ஆர்ப்பே!

பகைவர்க் கஞ்சா போரேறே!
கிராபைட் கேசம் துறந்து
உன் விழிசிவப்ப நான் அழுதேன்.

உலகம் மருக
பிரிதோர் நாள் நல்ல நாடகத்தில்
சுவர்ண முட்டைகள் பெற்றாயே!

பேய் மகளிர்
நின்றாட அய்பீஎல்
இறுதிவரை சென்றாயே!

ஆவிக்கு இனிய!
என் எழுமைக்ரான் சருமம்
அணுமின்சாரத்தில் அதிர்ந்ததே!

பந்தைப் பொறுக்கி!   
உன் ஆறுகளால் எனை
நொறுக்கினாய் சுக்காய்!

பொறைக் குமர,
இடக்கை திருக்கியடிக்கும்
மிடாஃப் வீச்சுக்கு அடிமை நான்.

சேயிழையாள் என்னை,
தவிக்கவிட்டு
காத தூரம் இருக்கிறாய்  நீ!

ஆட்டம் முடிந்து
அவனுக்கு கோப்பை கொடுத்து
புயலாய் திரும்பி வாராய்!

காதற் பெருக்கில் கிடக்கின்றேன்.





..

.

சனி, 12 பிப்ரவரி, 2011

எஸ்.எம்.கிருஷ்ணாவும் பியூஷ் சாவ்லாவை காப்பாற்றும் தோனியும்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் யாராவது, எகிப்து எங்கேயிருக்கிறது என்று கேட்டால், அது தூத்துக்குடி பக்கம், காரைக்குடி பக்கம் இருக்குது என்று தடாலடியாகச் சொல்வார். அந்த அளவுக்கு அவருக்கு பொது அறிவு ஜாஸ்தி. இவர்களுக்கு ஒருபடி மேலேபோய், இத்தாலி அதிபர் சில்வியோ பெர்லுஸ்கோனி பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது உள்ளாடை ரகசியம் பற்றி நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார்.

இப்படி வெளிநாட்டுக்காரர்களைப் பற்றிய நகைச்சுவையைப் படித்து ரசித்த நமக்கு நமது வெளியுறவு அமைச்சரே கேலிக்கு ஆளாகியிருப்பது வருத்தமாக இருக்கிறது. நம்மூர் அமைச்சர் கிருஷ்ணா முதல் முறையாக ஐ.நா.சபைக்கு இப்போதுதான் சென்றிருக்கிறார். பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தரமாகச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக அங்கு போனவர் அவர்.


பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். தலைவர்கள் ஒவ்வொருவராகப் பேச, இவரது முறை வந்தது. தலைவர் எழுந்தார், பேசுவதற்கான இருக்கையில் அமர்ந்தார் உரையை வாசிக்கத் தொடங்கினார். மிகச் சரளமாக. எங்களது போர்த்துக்கீசிய மொழி பேசும் பிரசிலும் அர்ஜென்டினாவும் என்று பேசியபோது கேட்டுக்கொண்டிருந்த செயலர் ஓடிப்போய்த் தடுத்தார். பிறகுதான் தெரிந்தது, அது போர்ச்சுக்கல் வெளியுறவு அமைச்சர் பேசிய உரை என்று. அவர் சற்று முன்புதான் பேசி முடித்திருந்தார். என்ன உரை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதுகூட தெரியாமல்தான் இந்திய வெளியுறவுத்துறை வழிநடத்தப்படுகிறது.


இப்படியொரு சம்பவம் இந்தியா என்கிற பெயரில் ஆடும் கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்யும் கூட்டத்திலும் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சந்தேகத்துக்குக் காரணம் அணியில் பியூஷ் சாவ்லா இடம்பெற்றதுதான். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக அணியிலேயே இல்லாதவர் எப்படி திடீரென, அதுவும் உலகக்கோப்பை அணிக்கு வந்தார் என்று தெரியவில்லை. ஏதோ ரஃப் பேப்பரில் யாரோ எழுதிவைத்ததை அறிவித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.


இப்படி எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தெரியாத ஒருவரை நம் கிரிக்கெட் ஜூனியர் கடவுள் தோனி தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அந்த ரஃப் பேப்பரில் இவர்தான் எழுதி வைத்தாரோ என்னவோ? யாராவது விவரம் தெரிந்தால் சொல்லுங்கள்.


...

..

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட், யாருக்கு நஷ்டம்?


1999-ம் ஆண்டில் இருந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஐசிசி ஏகபோக குத்தகைக்கு எடுத்து நடத்துகிறது. அடாவடி, கெடுபிடிகள் எல்லாம் உண்டு. இதனால், ஐசிசி காட்டில் இப்போது நல்ல பணமழை. இந்தப் பொதுச் சேவை நிறுவனம் தனது பெயரை ஐசிசி இன்டர்நேஷனல் லிமிடெட் என்று  பதிவுசெய்திருக்கிறது. வரி ஏய்ப்பு செய்வதற்காக மொனாக்கோவில் தலைமையகத்தை மாற்றியது. இப்போது அதைவிட கூடுதலாகச் சுருட்டலாம் என்பதற்காக துபையில் செயல்பட்டு வருகிறது.

 2011 உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைக்காக மட்டும் ரூ. 10 ஆயிரம் கோடியை இஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழங்கியிருக்கிறது. அந்தத் தொகையை விளம்பரங்கள் மூலம் அவர்கள் வசூலித்துக் கொள்வார்கள். 10 செகண்ட் விளம்பரத்துக்கு ரூ.24 லட்சம் கட்டணமாம். தோனி டீம் நாக் அவுட் ரவுண்டுக்குப் போனாலோ, பைனலுக்குப் போனாலோ வேறு வகையான கட்டணம். எப்படியோ கல்லாக் கட்டிவிடுவார்கள்.

ஒருவேளை நோஐபிஎல் அதிபர் நடத்தும் புரட்சியின் காரணமாக, மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டு சேப்பாக்கம் மற்றும் அண்ணா சதுக்கம் முன்பாக லட்சோபலட்சம் மக்கள் திரண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளே நடக்காமல் போனாலும் இஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு லாபம்தான். ஏனென்றால் அவர்கள் ரூ.30 ஆயிரம் கோடிக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியிடம் இன்சூரன்ஸ் செய்திருக்கிறார்கள். அவர்கள் இந்த இன்சூரன்ஸை ரீஇன்சூரன்ஸ் செய்திருக்கிறார்கள். இது தொடர் ரீஇன்சூரன்ஸ். இதனால் இன்சூரன்ஸ்காரர்களுக்கும் ஒருவகையில் லாபம் கிடைக்கப் போகிறது.

 அப்புறம் பாகிஸ்தானில் நடந்த 14 போட்டிகள் மற்ற பகுதிகளுக்கு மாற்றப்பட்டதால், ஐசிசி இழப்பீடு தரப் போகிறது. அது கிட்டத்தட்ட ரூ.10ஆயிரம் கோடியைத் தொடும் என்கிறார்கள். அதனால், ஒரு போட்டியைக்கூட நடத்தாமல் அவர்களுக்கும் லாபம்.
அப்புறம் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பவர்களுக்கும் ஒருவகையில் லாபம்தான். இலங்கையிலும், வங்கதேசத்திலும் ரூ.10 முதல் டிக்கெட் கிடைக்கிறது. அம்பாந்தோட்டை மைதானத்தில் கூவிக்கூவி டிக்கெட் விற்பதாகக் கேள்விப்படுகிறோம். சிட்டகாங் மைதானத்தில் ஓசிக்கே விட்டாலும் விடுவார்கள் போலத் தெரிகிறது.இதனால், ஏதோ பத்து ரூபாய்க்கு நாள் முழுக்க சிரிப்பொலி தொலைக்காட்சியே நேரிலேயே பார்க்க முடியும் என்பதால் ரசிகர்களுக்கும் ஓரளவு லாபம்தான்.

ஆனால், இதையெல்லாம் இந்தியாவில் எதிர்பார்க்கக்கூடாது. கூடுவாஞ்சேரி, அமிஞ்சிக்கரை ஆட்டத்தை சேப்பாக்கத்தில் பார்க்கவேண்டுமென்றால்கூட ரூ.500 அழவேண்டும். அங்குபோய் என்ன ஆட்டம் நடக்கிறது என்றே தெரியாமலேயே இந்தியா வாழ்க, ஜெய்ஹிந்த், பாரத் மாதா கீ ஜெய், தாய் மண்ணே வணக்கம், வந்தே மாதரம் என்று யாராவது கத்திக் கொண்டிருந்தாலும் அப்பாவியாகக் கேட்டுக் கொண்டு வரவேண்டும். காசும் போய், பக்த கோடிகளின் காட்டுக் கத்தலால், உள்ளே நடக்கும் காமடியை ரசிக்க முடியாமல், உண்மையிலேயே நஷ்டமடைவது நமது இந்திய ரசிகர்கள்தான் என்று நமது தீர்ப்பைச் சொல்லி....

...
..
...
...

வியாழன், 10 பிப்ரவரி, 2011

சச்சின் செய்தது துரோகமில்லையா?

மு.கு: சச்சின் மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர், அவரது கிரிக்கெட் சாதனைகளும், ஆட்ட நுணுக்கங்களும் வேறு யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. இவ்வளவு சீனியராக ஆன பிறகும் பயிற்சிகளைத் தவறவிடாத அவரது பண்பு, அர்ப்பணிப்பு உணர்வுக்கு அடையாளம். இவை எதையும் நாம் விமர்சிக்கப்போவதில்லை.

கிரிக்கெட்டை மதமாகவும் சச்சினை தெய்வமாகவும் நினைக்கும் நமது நாட்டில் நோஐபிஎல்  அதிபரின் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பப்படுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஆனால், ஆட்டோ காசையும், அடியாள்கள் கூலியையும் அவரிடமே வசூலிக்கும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் கிரிக்கெட் பக்தகோடிகளுக்கு நமது வேண்டுகோள்.

பிசிசிஐ அணியையும் அது நாட்டுக்குச் செய்யும் சேவைகளையும் போற்றிப் புகழ்பவர்கள் நமது நாட்டில் அதிகம். ஆனால், அந்த அணியை விமர்சிப்பவர்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர்.  இந்தச் சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் மிரட்டுகின்றனர். ஏன் குறிவைத்து அடிக்கப்படுகிறோம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் நசுக்கப்படுவது புதிதல்லவே.
சச்சின் பற்றி எழுதியதற்காக ஏராளமான கண்டனங்கள் வந்தன. இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. அதன்பொருட்டு இங்கு மீண்டும் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கிறது.

சச்சின் மீதான எல்லாக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தவர்கள், ஒரேயொரு குற்றச்சாட்டை மட்டும் மறுக்கவேயில்லை. அதுதான் சூதாட்ட ஊழலை மறைத்தது. ஐசிசியால் அசாருதீன் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை இன்னும் விலக்கிக்கொள்ளப்படவில்லை. ஆனால், பிசிசிஐ அவருக்கு கௌரவம் அளிக்கிறது. இதுதான் பிசிசிஐயின் லட்சணம்.

 நாட்டுக்காகத்தான் இந்தக் கிரிக்கெட் அணி ஆடுகிறது என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியானால், மேட்ச் ஃபிக்சிங் செய்வது என்பது நமது மொழியில் கூறினால், தேசத் துரோகம்தானே. அதற்கு அரசு தண்டனை வழங்கியிருக்க வேண்டுமே. அவ்வளவு பெரிய துரோகம் செய்தவருக்கு ஓராண்டுகூட சிறைத்தண்டனை இல்லையே? ஏதோ கம்பெனி விவகாரம் போல பிரச்னை சுமுகமாக முடிக்கப்பட்டுவிட்டதே!

இப்படியொரு துரோகம் நடக்கும்போது எனக்குத் தெரியும் என்று சச்சின் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். தெரிந்தே ஒரு தேசத்துரோகம் நடக்கும்போது அதைக் கண்டுகொள்ளாமல், தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்தவரை கடவுளாகப் போற்றுவது எந்த வகையில் நியாயம்? இதை மன்னிக்கும் அளவுக்கு நமது தோல் தடித்துவிட்டதா என்ன?

சச்சின் சிறந்த ஆட்டக்காரர் என்பதற்காக இதை மன்னித்துவிடலாம் என்றால், கொஞ்சம் கூடுதல் பெருந்தன்மையுடன் ஆ.ராசாவையும் மன்னித்துவிடலாம். அதைவிடக் கூடுதல் பெருந்தன்மை இருந்தால் கசாபைக்கூட மன்னிக்கலாம். பாவம் அவர்களும் திறமையானவர்கள்தானே!
--------------------------------------

மேட்ச் ஃபிக்சிங் விவகாரம் பற்றிய சர்ச்சை எழுந்த நேரத்தில் நமது கிரிக்கெட் வீரர்கள் சொன்னது கீழே தரப்பட்டிருக்கிறது. யார் மீதான புகாரும் நிரூபிக்கப்படாத நேரம் அது. சில மாதங்களுக்குப் பிறகுதான் அசார், ஜடேஜா மீது புகார் நிரூபணம் ஆனது. அதுவும் குரோனியே சொன்ன பிறகுதான். அதன் பிறகு சச்சின் உள்ளிட்ட அனைவரும் என்ன பேசினார்கள் என்பது நமக்குத் தெரியும். எல்லோரும் சேர்ந்து தங்களது கிரிக்கெட் வர்த்தகத்தை காப்பாற்றிக்கொள்வதையே முக்கியமாக நினைத்தார்கள். ஒரு சிலரைப் பலிகடாவாக்கிவிட்டு நினைத்ததைச் சாதித்துக் கொண்டார்கள்.

Manoj Prabhakar: I cannot disclose the names of team-mates or of any other person involved in offering the bribe to me for losing... because if I do so, my life will be in danger. I was given a threat to that effect by persons who offered me a bri be. I am also afraid that I will be sued or prosecuted for defamation if I disclose the names. I have no evidence to prove my statements... The prosecution or the suit will ruin me... These are the reasons why, initially, I did not speak out for three ye ars and why, now, I cannot disclose the names of the culprits.

Sachin Tendulkar: I do not believe that matches are fixed or can be fixed... Within my knowledge, no match has ever been fixed. I never got the feeling that any of my team-mates deliberately played a bad shot to get out. Speaking for myself, I... decide to take an occasional risk which works most of the times but fails occasionally. A batsman who can deliberately get out would indeed be a super technician. He will use his expertise for playing well rather than for getting out.
The statements made by Manoj Prabhakar have no foundation. He has made a specific allegation that in the India-Pakistan match which was played in Sri Lanka in the Singer Cup series in 1994, a team-mate had offered him Rs.25 lakhs to play badly. If Manoj had the courage to say this, he should have had the courage to name the player.

Mohammed Azharuddin: I do not think that any match can be fixed... It is true that I dress well. I also like to live in a good style. I have a house in Hyderabad and a flat in Bombay. My accounts are quite clear. The tax authorities are the best j udges of that.

Nayan Mongia: We earn about Rs. 40 lakhs a year officially from the BCCI. In addition, we make quite some money in other lawful ways as in advertisements. There is no need to look beyond it. The team meets very often, we are together for long hour s, we discuss our strategy but never, never, is there even a whisper of fixing a match or of betting.

Ajay Jadeja: Fixing a match requires a great amount of homogeneity which is not to be found in a pronounced manner in our team...
I believe that people bet on cricket. But a player can make far more money by playing well and winning a match than by playing badly and losing a match...
I do not think that in today's Indian team, there is any player who bets on the game. It is true that at one time, friends used to have access to the players' enclosure and sometimes they used to speak on mobile phones. Now mobiles are not allowed after we leave our hotel. No friends are now allowed in the players' enclosure, much less in the dressing room.

Sunil Gavaskar: I think that it is impossible to fix a match. In my fairly long experience... I have never known that any match was fixed. You cannot fix a match by buying over a couple of players.
Some people are firing shots in a dark room to hit someone. But there is no one in the room. So the shots only damage the room. That room is Indian cricket... Anyway, if Manoj Prabhakar had a story up his sleeve, he could have approached his captain, vice-captain, coach or team manager, which he never did. I do not believe his story.

Kapil Dev: In my entire career as a player, I was never approached by anyone for match-fixing. I guess that there is large betting on cricket, but the evil of betting can be dealt with only by the police. Today there is so much cricket that there is much betting also. Those who lose their bets are the first to blame the players for playing bad deliberately.
Fixing a match does not mean fixing all the players in the team. It is possible to approach a couple of star players and fix a match... But in my experience no match was fixed.
I am of the opinion that the Board should set up a private agency to find out the assets of players. That will give some clue whether players lay bets or agree to fix matches.

Ajit Wadekar: During my long term as a manager and even a longer term as a Test player, I never suspected that any player was involved in betting. But, as a manager, I felt that the priorities of the players were all wrong. They attended too many parties and mixed with too many outsiders just to keep their own allowances intact. Their attention is not all focussed on the game of cricket...
The episode of offer of Rs. 25 lakhs narrated by Manoj Prabhakar has no foundation in fact. I was the manager of the team at that time. But he did not tell me a word about it.

Sanjay Manjrekar: The statements made by Manoj Prabhakar are wholly untrue... It is well known that matches have been won by tail-enders oftentimes... That makes match-fixing difficult to believe.
Sandeep Patil: I have seen one of the leading players in the Indian team talking on the mobile phone right through the tour for long periods like 20 minutes from the balcony of the Lords dressing room. I wrote to the Board that players should not be allowed to take mobile phones with them once they leave the hotel. My suggestion was readily accepted. I had also complained to Mr. Jag Mohan Dalmiya that I suspected that two persons, one of them a player and the other closely connected with him, wer e leaking important information to the press. I was also unable to understand why Dr. Ali Irani was allowed to attend the team meetings on the eve of the match or at any time.

I have experienced that the press knew the composition of the team before the team was officially declared.
D.V. Subba Rao: I was the manager of the Indian team which toured West Indies from February to May 1997... My experience belies the allegation of match-fixing in Indian cricket.

Sunil Dev (manager of the Indian team on the tour of South Africa and Zimbabwe in 1996-97): Betting on cricket takes place heavily in India. It has been there for about ten years. It has assumed a large proportion since the introduction of one-day games. There is heavier betting on one-day matches because they are result-oriented. I cannot identify any particular player who bets on cricket but I am fairly certain that members of the team do lay a bet and one can only bet to lose. It is easy to ge t run out or hit a lofted shot. Coaches can detect a deliberate under-performance and so can students of the game. We may have lost some matches because some of our players laid bets to lose.

Matches can be and are fixed but they can be fixed only for losing, not for winning...
The Board cannot do anything about disproportionate assets of the players. But I have a feeling that one or two players have acquired disproportionate assets.

..
...

..

புதன், 9 பிப்ரவரி, 2011

சச்சின் செய்த துரோகங்கள்!

மு.கு: சச்சின் மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர், அவரது கிரிக்கெட் சாதனைகளும், ஆட்ட நுணுக்கங்களும் வேறு யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. இவ்வளவு சீனியராக ஆன பிறகும் பயிற்சிகளைத் தவறவிடாத அவரது பண்பு, அர்ப்பணிப்பு உணர்வுக்கு அடையாளம். இவை எதையும் நாம் விமர்சிக்கப்போவதில்லை.

ஏற்கெனவே எழுதியவற்றுக்கே நமக்கு கறுப்புப் பூனை, கறுப்பு எலி பாதுகாப்பெல்லாம் தேவைப்படுகிறது. இந்த லட்சணத்தில் கிரிக்கெட் கடவுளை விமர்சித்தால் அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்புக் கிடைத்தாலும் தப்பிக்க முடியாது என்று நலம் விரும்பிகள் பலர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனாலும் பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்பதாலும் நமது கைகள் கறைபடியாதவை என்பதாலும் எழுதுவதற்கு பிரேக் போடமுடியவில்லை. இது தொடர்பாக கடவுளை அவமதித்த வழக்குத் தொடர்வதற்கு ஐபிசியில் பிரிவு ஏதும் இல்லை என்பதை அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோருடன் ஆலோசித்து உறுதி செய்த பிறகே இதை எழுத முடிவெடுத்தோம்.


 சச்சினுக்கும் ஐபிஎல் அதிபருக்கும் எந்த உள்பகையும் வெளிப்பகையும் வாய்க்காத்தகராறும். உண்மை நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே சச்சின் செய்த துரோகங்களை எழுத வேண்டிய நிர்பந்த்தம் ஏற்பட்டிருக்கிறது.


வினோத் காம்ப்ளி 1991-ம் ஆண்டில் பிசிசிஐ ஒருநாள் அணிக்கு வந்தார். 1993-ம் ஆண்டில் அவருக்கு பாதுகாப்பான நிரந்தர இடம் கிடைத்தது. தனது 11-வது போட்டியில் முதல் சதம் அடித்தார். 1993-ம் ஆண்டில் டெஸ்ட் அணிக்கு வந்தார். இரண்டே ஆண்டுகளில் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது அவருக்கு வயது 24 கூட ஆகவில்லை. அதன் பிறகு அவ்வப்போது ஒருநாள் போட்டிகளில் தலைகாட்டினாலும் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.


சச்சின் 1989-ம் ஆண்டில் அணிக்கு வந்தார். முதல் 2 போட்டிகளிலும் முட்டை அடித்தார். 5 ஆண்டுகள் வரை அவரால் சதம் அடிக்க முடியவில்லை அவருக்குப் பிறகு களத்துக்கு வந்த வினோத் காம்ளி ஒருநாள் போட்டியில் சதமும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டைச் சதமும் அடித்திருந்தார். 1994-ம் ஆண்டில்தான் டெண்டுல்கரால் முதல் சதத்தை அடிக்க முடிந்தது. இருவரும் இணைபிரியா நண்பர்கள் என்று கருதப்பட்ட இருவரும் உள்ளுக்குள் உரசிக் கொண்டிருந்தது, பின்னர் தெரியவந்தது. நெருக்கடியான தருணங்களில் சச்சின் எனக்கு கைகொடுக்கவில்லை என்று காம்ப்ளி வெளிப்படையாகவே தெரிவித்தார்.


1999 உலகக் கோப்பைப் போட்டிகளுக்குப் பிறகு சூதாட்ட சர்ச்சை வெளி உலகுக்குத் தெரிய வந்தது. அசாருதீன், ஜடேஜா, குரோனியே உள்ளிட்ட பலரும் சிக்கினர். எல்லோருக்கும் தடை விதிக்கப்பட்டது. குரோனியே மர்மமான முறையில் இறந்தார். சச்சினிடம் சூதாட்டம் பற்றிக் கேட்கப்பட்டது. தம்மைப் பலரும் அணுகினார்கள் எனவும், அசாருதீன் வலியுறுத்தினார் எனவும் ஒப்புக் கொண்டார். ஏன் முன்னரே தெரிவிக்கவில்லை என்று கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை.


2003-ம் ஆண்டில் வெளிநாட்டில் இருந்து பெராரி ரக சொகுசு காரை இந்தியாவுக்குக் கொண்டுவர சச்சின் விரும்பினார்.  அதற்காக அப்போதைய பாஜக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். தமக்குச் இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று. தீயணைப்புக் கருவிகள், அரசுக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் போன்றவற்றுக்கெல்லாம் வரிவிலக்கு அளிக்க முடியாது என்று கூறியிருந்த பாஜகவின் பிரமோத் மஹாஜன், சச்சினுக்கு உடனடியாக வரிவிலக்கு அளிக்க ஏற்பாடு செய்தார். அது பிறகு சர்ச்சையானது.


நாட்டுப்பற்று தேசப்பற்று என்று பிதற்றிக்கொண்டிருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் பிசிசிஐ அணி சார்பில் இனி 20 ஓவர் போட்டியில் விளையாட மாட்டேன் என்று அறிவித்த சச்சின், இன்னும் ஐபிஎல் அணிக்காக ஆடிக் கொண்டிருக்கிறார்.


சரி முதலில் உலகக் கோப்பை என்ன விலை என்று கேளுங்கள். அப்புறம், பாரத ரத்னாவுக்கும் நோபல் பரிசுக்கும் பேரம் பேசலாம்.



..
..


...


..

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

தோனியைப் பழிவாங்கப் போவது யார்?

உன் வலைப்பதிவைப் படித்தால் ரத்தம் கொதிக்கிறது என்று தேசபக்தர் ஒருவர் நேற்றிரவு நோஐபிஎல் அதிபருக்கு போன் செய்து சொன்னார். இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கோயில், மசூதி, சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனை செய்து வருவதாகவும் அவர் கூறினார். நோஐபிஎல் அதிபரைக் கண்டித்து ஜனாதிபதிக்கு தந்தி அடித்து வருவதாகவும், அவரது ரேஷன்கார்டு, பால்கார்டு, விசிட்டிங் கார்டு உள்ளிட்ட அனைத்தையும் கேன்சல் செய்து இந்திய தேசத் துரோகி என்று நாடு கடத்துவதற்கான முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. 


உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் வேளையில்இந்தப் போட்டியில் தோனியைப் பழிவாங்கப் போவது யார் என்று ஆளுக்கு ஆள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இப்படிப் பழிவாங்குவது யாரோ அவர்தான் அடுத்த உலகக் கோப்பை போட்டிக்கு கேப்டனாக வருவார் என்று கணிக்கப்படுகிறது.


அதுசரி, தோனியை ஏன் பழி வாங்க வேண்டும்? அப்படி அவர் என்னதான் தவறு செய்தார் என்று கேள்வி கேட்பவர்களுக்காக இந்த விளக்கம் மீண்டும் அளிக்கப்படுகிறது.

கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் டிராவிட் தலைமையில் பிசிசிஐ அணி களம் இறங்கியது. ஒரு பிரிவில் 4 அணிகள். டிராவிட் அணி இருந்த பிரிவில் இலங்கை, வங்கதேசம், பெர்முடா அணிகள் இருந்தன. லீக் சுற்றில் மொத்தமே 3 ஆட்டங்கள்தான். குறைந்தது 2 போட்டியில் ஜெயித்தால் அடுத்த சுற்றுக்குப் போய்விடலாம்.


முதல் போட்டியிலேயே டிராவிட் அணி வங்கதேசத்திடம் தோற்றுப் போனது. அடுத்து பெர்முடா அணியிடம் 250-க்கும் அதிகமான ரன்களில் ஜெயித்தது. அடுத்த இலங்கையிடம் தோற்றது. இந்த 3 போட்டிகளில் தோனி எடுத்த ரன்கள் முறையே -முட்டை, 29, முட்டை- அதாவது தோற்ற போட்டிகள் இரண்டிலும் முட்டை எடுத்தார்.


 இப்படி முட்டை எடுத்தவர்தான் இன்று கேப்டன் என்பதால். இந்த உலகக் கோப்பை போட்டியில் அதிக முட்டை எடுத்தால் அடுத்த உலகக்கோப்பை போட்டியில் கேப்டனாக இருக்கலாம். அந்த வாய்ப்பு யாருக்குக் கிடைக்கப் போகிறதோ?

.
.
.

திங்கள், 7 பிப்ரவரி, 2011

கபில்தேவ் - அசல் சரண்டர்!

1983 உலகக் கோப்பையை வென்ற கேப்டன், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தவர், கிரிக்கெட் அகாதெமியின் தலைவராக இருந்தவர், இந்திய அணியின் பயிற்சியாளராக வலம் வந்தவர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் கபில்தேவ். ஹரியானா காளை, ஹரியானா சூறாவளி என்றெல்லாம் புகழ்மாலை சூட்டப்பட்டவர். 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸை கேட்ச் பிடித்து வெளியேற்றியதும், ஜிம்பாப்வேயுடனான 175 ரன்களும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாதவை. 

இத்தனை பெருமைக்குரியவராக கிரிக்கெட் ரசிகர்களாலும் பிசிசிஐயாலும் பார்க்கப்பட்ட கபில்தேவ் 2007-ம் ஆண்டு இந்தியாவின் எதிரியானார். அதாவது கிரிக்கெட்டின் எதிரியானார்.  அதாவது பிசிசிஐயை பகைத்துக் கொண்டார்.  அவர் செய்தது ஜீ குழுமத்தின் ஐசிஎல் என்கிற 20 ஓவர் கிரிக்கெட் அமைப்பை தலைமையேற்று நடத்த முற்பட்டதுதான்.  இந்தியன் கிரிக்கெட் லீக் என்கிற இந்த ஐசிஎல் அமைப்புத்தான் 20 ஓவர் போட்டிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஐபிஎல்லுக்கு முன்னோடி என்பதும் நமக்குத் தெரியும்.


ஐசிஎல் அமைப்பில் சேர்ந்த மறுநாளே இந்தியக் கிரிக்கெட் அகாடெமி தலைவர் பொறுப்பில் இருந்து கபில்தேவ் தூக்கி எறியப்பட்டார். துரோகி பட்டம் சுமத்தப்பட்டது. இத்தனைக்கும் ஐசிஎல் என்பது பிசிசிஐக்கு எந்த விதத்திலும் போட்டியாக அமையாது என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. அதாவது அதுவரை இந்தியாவில் ஆடப்படாத 20 ஓவர் கிரிக்கெட்டை மட்டும்தான் ஆடுவோம் என்றும் ஐசிஎல் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. ஆனாலும் கிரிக்கெட்டுக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் பிசிசிஐ தியாகிகள் அதைக் கேட்கவில்லை.


மைதானங்கள் கிடைக்கவில்லை. பாப்புலர் ஆட்கள் கிடைக்கவில்லை. ஐசிஎல் குதிரை நொண்டியடித்தது. பின்னர் செத்துப் போனது. இப்போது அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.
ஐசிஎல் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த பலரும் பிசிசிஐ காலில் விழுந்து தேசத் துரோகி என்கிற அவப்பெயரை நீக்கிக் கொண்டார்கள். இப்போது ஒரு வழியாக கபில்தேவும் காலில் விழுந்துவிட்டார். ஆக்ரோஷமாக ஆட வேண்டும் என்று தோனிக்கு அறிவுரையும் வழங்கியிருக்கிறார்.  பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவி காத்திருக்கிறது சூறாவளியே!

..


.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

மீனவர் பிரச்னை முடிந்தது, இன்று சேப்பாக்கத்தில் வரிசையில் நிற்கும் நாள்

அன்று பி.டி. கத்திரிக்காய்க்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்தினார்கள். ஜெய்ராம் ரமேஷுக்கு நெருக்கடி கொடுத்து எப்படியாவது அந்த பி.டி. கத்திரிக்காய் வரவிடாமல் செய்து விடலாம் என்று கூறினார்கள். ஆனால், இதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. புத்திஜீவிகளைக் கொண்ட அவரது தலைமையிலான மரபுப் பொறியியல் குழு பி.டி.கத்திரிக்காய்க்கு ஆசீர்வாதத்துடன் அனுமதி வழங்கியது. ஆதர்ஷ், போஸ்கோ ஆலை, லாவாசா மலை நகரம் போன்ற திட்டங்களில் "எல்லாம் முடிந்த பிறகு" சீனுக்குள் வந்தவர். பேருக்குத் தடை விதிக்கும் பணியைச் செய்து சுற்றுச் சூழலுக்கு நல்லவர் என்கிற பெயரைத் தட்டிச் செல்கிறார். இப்போது பிடி கத்திரிக்காயை எல்லோரும் மறந்து போனார்கள். ஜால்ரா போடும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கும் இவர் இப்போது ஹீரோவாகிவிட்டார். நமது நாட்டு ஹீரோக்கள் இப்படித்தான் உருவாகிறார்கள். இப்போது கையெழுத்து வேட்டை மீனவர்கள் பிரச்னைக்காக நடக்கிறது. நடக்கட்டும் நடக்கட்டும்.

இன்று சேப்பாக்கத்தில் டிக்கெட் கொடுக்கிறார்களாம். காலையில் சீக்கிரமே சென்றால்தான் டிக்கெட் கிடைக்கும். 4 மேட்ச் இருக்கின்றன. மார்ச் 20-ம் தேதி தோனி அணியும் மேற்கிந்தியத் தீவுகளும் மோதுகின்றன. மற்ற மூன்றும் வேறு நாட்டு அணிகளுக்கு இடையேயான போட்டி. மீனவர் பிரச்னைக்காக கையெழுத்துப் போட்டுவிட்டு நேரே சேப்பாக்கம் வந்து விடவும். நேரில் பார்க்க விருப்பமில்லாதவர்கள் ஈஎஸ்பிஎன், ஸ்டார் தொலைக்காட்சிகளுக்கு கேபிள் ஆபரேட்டரிடம் சொல்லி வைக்கவும்.

..