செவ்வாய், 17 ஏப்ரல், 2012

ஐபிஎல் போட்டியால் வளரும் வீரர்களுக்கு நன்மையா?


ஐபிஎல் போட்டிகள் பற்றி விமர்சனம் செய்யும் போதெல்லாம், எட்டுத் திக்கிலிருந்து கண்டனக் கணைகள் பறந்து வருகின்றன. இதில் பெரும்பாலானோர் தேசபக்தர்கள். பலர் சென்னையை தாய் மண்ணாகவும் தோனியை மண்ணின் மைந்தனாகவும் கருதுபவர்கள். நொடிந்து போயிருக்கும் இந்தியக் கிரிக்கெட்டையும் மட்டையாகிப் போன தோனியையைும் மீட்பதற்கு, பிரியங்கா சோப்ரா போன்ற உலக அழகிகள் வந்துதான் குத்தாட்டம் போட வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த தேசபக்தர்கள்,  "ஐபிஎல் போட்டிகளால் தேசிய அணியில் இடம் கிடைக்காத இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. அதனால் கிரிக்கெட் வளருகிறது" என்று பிதற்றுகிறார்கள்.

இது எப்படியிருக்கிறது தெரியுமா? கஜானாவுக்கு 1.72 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய ஒருவர், "நிறுவனங்களுக்கு நான் அளித்த சகாயங்களால்தான் இப்போது நீங்கள் 10 பைசாவுக்கு போனில் பேசிக் கொண்டிருக்க முடிகிறது, சந்து பொந்தெல்லாம் செல்போன் நடமாடுகிறது" என்றாராம். அப்படித்தான் இருக்கிறது ஐபிஎல் போட்டிகளால் வளரும் வீரர்களுக்கு நன்மை என்கிற சப்பைக் கட்டு, சாக்குப் போக்குகள்.

தொலைக்காட்சியில் தோன்றி ஐபிஎல்லுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் டபிள்யூ.வி.ராமன் உள்ளிட்ட எல்லோரும்தான் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையிலே வளரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றால், ஐபிஎல் போல எத்தனை அமைப்புகள் வந்தாலும் எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டும். திறமை உள்ளவர்கள் எந்த அமைப்பில் இருந்தாலும், நீங்கள் தேசிய அணி என்ற எதேச்சதிகார அணி ஒன்றை வைத்திருக்கிறீர்களே, அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், உண்மையில் என்ன செய்கிறீர்கள்? இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்.

ஐசிஎல் என்ற அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த எத்தனையோ இளம் வீரர்களின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தீர்கள். அப்படியொரு அமைப்பு இனி எந்த வகையிலும் தொடங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகக் கங்கணம் கட்டிச் செயல்பட்டீர்கள். உள்ளநாட்டுக்கார்கள் மாத்திரமல்ல, வெளிநாட்டைச் சேர்ந்த யாராக இருந்தாலும், அவர் ஐசிஎல்லில் பந்து பொறுக்கிப் போடும் வேலையைப் பார்த்திருந்தாலும்கூட அவர்களுக்கு தேசிய அணியில்  எந்த நன்மையும் கிடைக்காமல் பார்த்துக் கொண்டீர்கள்.

உண்மை இப்படியிருக்க,  ஏதோ கிரிக்கெட்டுக்கும், இளம் வீரர்களுக்கும் நன்மை செய்வதாக கபடநாடகம். ஐபிஎல் என்பது வெறும் பொழுதுபோக்கு களியாட்டம்தான். எதிரிகள் பலரை நயவஞ்சகமாக ஒழித்துக் கட்டிவிட்டு நடத்தப்படும் வியாபாரம்தான். லாபமெல்லாம் முதலாளித்துவ வர்க்கத்தின் உச்சியில் இருக்கும் பத்துப் பதினைந்து பேருக்குப்போகின்றன. இதில் எங்கிருந்து வந்தது கிரிக்கெட்டுக்கும் இளம் வீரர்களுக்கும் நன்மை?  ஆடும் வீரர்களுக்கு கிடைப்பதெல்லாம் முதலாளிகள் வீசியெறியும் சோற்றுப் பருக்கைகளும்,  எலும்புத் துண்டுகளும், சதைகளும்தான்.  இதைத்தான் நன்மை என்கிறார்கள். 
நல்லாயிருக்குப்பா உங்க பெர்பாமென்ஸு!

...

வியாழன், 5 ஏப்ரல், 2012

"அது" மாயம் - சிறுகதை


அன்று அமாவாசை. மாலை 4.30 மணி. ஊரே நிசப்தமான பவர்கட் நேரம். அந்த பங்களாவின் கிரில் கேட்டை திறந்து கொண்டு நான்கு உருவங்கள் உள்ளே நுழைகின்றன. முகங்கள் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் முகமூடி அணிந்திருக்கலாம். அல்லது அந்த கண்ணாடிக் கடைக்காரன் நம்மை ஏமாற்றியிருக்க வேண்டும்.

நான்கு உருவங்களும் பங்களாவின் பின்பக்கமாகச் சென்று கதவை உடைத்தன. யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு வீட்டுக்குள் புகுந்தன. அந்த பங்களாக்காரர் வைர வியாபாரி. அவருக்கு  அழகான 3 பெண்கள். ஆனால், இந்த உருவங்கள் எந்த நோக்கத்துக்காக வந்திருக்கின்றன என்று இதுவரை தெரியவில்லை.

நான்கு உருவங்களும் உள்ளே நுழைந்த இடம் சமையல்கட்டு. அதைத் தாண்டிப் பார்த்தால், எதிரெதிரே இரண்டு அறைகள். பூனைகள் போல அடியெடுத்து வைத்து நகர்ந்தனர். ஒருவன் முதலாவது அறைக் கதவு அருகே சென்றான். தொட்டதும் திறந்து கொண்டது. உள்ளே படுக்கையில் இரு பெண்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். ஐஸ்வர்யா ராயும் அமலாபாலும் போல. முதலாவது உருவம் அவர்கள் அருகே சென்றது. இருண்டாவது உருவமும் உள்ளே நுழைந்தது. மூன்றாவது உருவம் உள்ளே நுழைய முயற்சித்த போது "2 பேர் போதும்" என்பது போல நான்காவது உருவம் தடுத்தது.

கதவை ஓசையில்லாமல் சாத்திவிட்டு இரு உருவங்களும் அடுத்த அறையைத் திறக்க முயற்சித்தன. வேறு யாரும் வருகிறார்களா என்று பார்த்துவிட்டு ஒரு உருவம் கதவைத் தட்டியது. சில விநாடிகளுக்குப் பிறகு கதவு திறந்தது. நின்றது ஒரு பெண். அங்கே ஐஸ்வர்யா ராயும் அமலாபாலும் சொன்னோமா, இங்கே நின்றது சினேகா. இவர்களைப் பார்த்து அவள் கண்ணை அகலத் திறந்து, பிறகு வாயைத் திறந்து கத்துவதற்குள், டக்கென்று ஒரு உருவம் வாயைப் பொத்தியது. அந்தப் பெண்ணின் வாயைத்தான்.

மீதமிருக்கும் ஒரு உருவம் கதவைச் சாத்திவிட்டு வீட்டு அடுத்த பகுதிக்குச் சென்றது. அங்கே பிரமாண்டமான மற்றொரு அறை திறந்தே கிடந்தது. அழகிய வேலைப்பாடுடன் கூடிய கதவு. உருவம் உள்ளே சென்று பார்த்தது. யாரும் இல்லை. பிறகு வேறு எதையோ தேடியது. அங்கே ஒரு பீரோ. உருவத்தின் கைகள் பரபரத்தன. வேகமாகச் சென்று பீரோவைத் திறக்க முயற்சித்தது. முடியவில்லை. மீண்டும் முயற்சித்தது. முடியவில்லை. மீண்டும் மீண்டும். ஊகூம்.

திடீரென இருமல் சத்தம். பாத்ரூம் கதவு திறந்தது. வெளியே வந்தது டாப்ஸியாக இருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுவும் பாத்ரூமிலிருந்து... கதை விளங்கிடும்... சரி.. என்ன வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தது அமிதாப் உயரம் கொண்ட ஒரு ஆள். சுதாரித்துக்கொண்ட உருவம் பீரோவின் மறுபுறத்தில் பதுங்கிக் கொண்டது.

பாத்ரூமில் இருந்து வெளியே வந்த ஆள் கையில் வைத்திருந்த சாவியைக் கொண்டு பீரோவைத் திறந்தார். அதில் இருந்த நம்பர் பேடில் சில எண்களைத் தட்டினார். சிறிய கதவுகள் திறந்து கொண்டன. உள்ளே. மின்னும் கற்கள். அவர் வைரவியாபாரி என்பதால் அது வைரக் கற்களாகத்தான் இருக்க வேண்டும்.

நொடிப்பொழுதில் செயல்பட்ட உருவம், கையில் இருந்த மயக்க மருந்து தடவிய கைக்குட்டையை அந்த ஆளின் முகத்தில் வைத்தது. அந்த ஆள் மயங்கிச் சரிந்தார். பீரோவைத் திறந்த அந்த உருவம் வைரக் கற்களைத் தள்ளிவிட்டு எதையோ தேடியது. சிறிது நேரத் தேடலுக்குப் பிறகு அது அகப்பட்டது. அத்துடன் வேலை முடிந்தது. 4 உருவங்களின் வேலையும் முடிந்தது.

மறுநாள் தினந்தந்தி பேப்பரில் தலைப்புச் செய்தி, "வைர வியாபாரி வீட்டில் 4 ஐபிஎல் டிக்கெட்டுகள் கொள்ளை: முகமூடிக் கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு". - எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைப்பு. பக்கத்திலேயே அமிதாப் பச்சன் போல அந்த ஆளும் 3 பெண்களும் கதறியழுதபடி நிற்கும் படம், வண்ணத்தில். (உள்படம்) சிதறிக் கிடக்கும் வைரக் கற்கள். (சைடு படம்) கொள்ளையர்கள் விட்டுச் சென்ற மெர்சிடஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்.

..
...

புதன், 4 ஏப்ரல், 2012

ஐபிஎல் கோடிகளும் 121 கேடிகளும்


நாட்டில் சென்சஸ் கணக்கெடுப்பதே இந்தியாவில் எத்தனை தலைகள் இருக்கின்றன. கிரிக்கெட் என்ற பெயரில் அவர்களை விற்று எப்படிச் சம்பாதிக்கலாம் என்பதற்குத்தான். கிரிக்கெட் ஒளிப்பரப்பு உரிமம், விளம்பரம், ஐபிஎல் உரிமம், ஏலம் எல்லாம் சென்சஸ்படிதான். நீங்கள் இன்னொரு குழந்தையைப் பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசனுக்கு லாபம் கூடுகிறது என்பதுதான் உண்மையான பொருள். 

ஆனால், ஐபிஎல் போட்டிகளை வெறுப்பவர்கள், அதை விரும்புவர்கள் என நம்நாட்டில் இரு இனங்கள் இருக்கின்றன. முதலாவது பெரும்பான்மை சுமார் 121 கோடி. இரண்டாவது மிகச் சிறுபான்மை சுமார் 121 கேடி. நோஐபிஎல் கடையின் ஓனர் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். ஐபிஎல் பிடிக்காது. பிடிக்காவிட்டால் அதைப்பற்றி ஏன் பேச வேண்டும் என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

இது ஏதோ "எனக்கு வென்னிலா பிடிக்காது, ஸ்டிராபெர்ரி பிடிக்காது, பிஸ்தாதான் பிடிக்கும்" என்பது போன்ற "பிடிக்காது" அல்ல. எனக்கு ராஜபட்ச பிடிக்காது, பொன்சேகா பிடிக்காது என்பார்களே அந்த மாதிரி "பிடிக்காது".

சிலர் குத்தாட்டம் போடுவதற்காக எல்லோரும் போகும் பாதையில்தான் போக்குவரத்தை மாற்றுகிறார்கள். எல்லோருக்கும் பவர்கட் இவர்களுக்கு மெகாவாட் கணக்கில் மின்சாரம். எல்லோருக்கும் பொதுவான அரசு இவர்களுக்குத்தான் இலவசமாக நிலத்தை வழங்கி மைதானம் கட்டிக்கொள்ள அனுமதியளித்திருக்கிறது. 

தி.நகரில் விதிமீறல் கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன. பூட்டி சீல் வைக்கப்படுகின்றன. ஆனால் சேப்பாக்கம் மைதானத்தின் கட்டுமான விதிமீறல்கள் மட்டும் "நாட்டுக்காக" மன்னிக்கப்படுகின்றன. தியேட்டரில் 120 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விலை வைக்கக்கூடாது என்பதைக்கூட  அரசு நிர்ணயித்திருக்கிறது. இங்கு அந்த விதியும் கிடையாது. 

பிசிசிஐ என்கிற தனியார் நிறுவனம் இந்த நாட்டின் கிரிக்கெட் வளத்தையெல்லாம் கொள்ளையடிக்கிறது. ஒரு சிறிய தொழிலதிபர்களின் ரகசியக் கூட்டில் இதில் ஆட்டத்திறன் குறைக்கப்பட்டு நாடகத்திறன் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பெருங்கூட்டம் பஞ்சப் பரதேசிகளாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், கொஞ்சூண்டு அதை அனுபவித்து வந்த எவனாலும் ஐபிஎல் போட்டிகளை ஆகா ஓகோவெனப் புகழ்ந்து எழுத முடியாது.

அதனால் சென்னை சூப்பர் கிங்ஸை வெறுப்பவர்கள் சென்னையை வெறுப்பவர்கள் இல்லை. மும்பை இண்டியன்ஸை புறக்கணிப்பவர்கள் இந்தியாவின் எதிரிகளும் இல்லை. 

..