திங்கள், 6 பிப்ரவரி, 2012

சகாரா ஊடலும் டீசல் திருடர்களும்

எனக்குத் தெரிந்தவரையில் யாருக்காகவும் எதற்காகவும் பிசிசிஐ வளைந்து கொடுத்தது கிடையாது. 2009-ம் ஆண்டு தேர்தலின்போது, ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டபோது, அதைச் செவிமெடுக்கவில்லை. அரசையே எதிர்த்துக் கொண்டு, தென்னாப்பிரிக்காவுக்குப் போய் போட்டிகளை நடத்தினார்கள். போட்டிகளை இங்கே ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிடக்கூட இந்திய அரசால் முடியவில்லை.

அதற்கு முன்பு 2008-ம் ஆண்டில் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோதும், நாட்டுக்குத் திரும்பிச் சென்ற இங்கிலாந்து அணியை வலுக்கட்டயாகமாக திருப்பி அழைத்துவந்து ஆட வைத்தார்கள். ஐசிஎல் அமைப்புக்கு நேர்ந்த கதியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.


நாடு முழுவதும் சலுகைவிலையில் அரசு வழங்கிய இடத்தில் கட்டப்பட்டிருக்கும் மைதானங்களை, முழுக்க முழுக்க வர்த்தகத்துக்காகப் பயன்படுத்துவதைக்கூட கேட்பதற்கு நம்மால் முடியாது. உதாரணத்துக்கு டிஎன்சிஏவுக்கு தமிழக அரசு பலவிதமான சலுகைகளை வழங்கியது. இப்போதும் மாநில விலையில் டீசல் வழங்குவது உள்ளிட்ட படுபாதகங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 

அதாவது அப்பாவி மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய மானியம்தான் ஐபிஎல் போட்டிகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. விவசாயத்துக்கும் மீன் பிடிப்பதற்கும் டீசல் இல்லாதபோது, இங்கே ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு மானிய விலையில் தட்டுப்பாடு இல்லாமல் டீசல் கிடைக்கிறது என்றால், அது மோசடிதானே.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர், தன்னுடைய சொந்த வர்த்தக லாபத்துக்காக சேப்பாக்கம் மைதானத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று டிஎன்சிஏவில் இருப்பவர்களே சொல்கிறார்கள். ஐபிஎல் போட்டிகளுக்காக மட்டுமே மைதானம் புதுப்பிக்கப்படுகிறது. ஆனாலும் அதைத் கேட்க நாதியில்லை. அவ்வளவு செல்வாக்கு.


சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மாநகராட்சியின் எந்தவொரு பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. அவசரகால முன்னேற்பாடுகள் எதுவும் கிடையாது. மேல்புற கேலரியில் அமரும் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அவசரமாக வெளியேற வேண்டுமானால் ஒரேயொரு குறுகியவழிதான் இருக்கிறது. ஆனாலும் தி.நகரில் கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டதைப் போல சேப்பாக்கம் மைதானம் சீல் வைக்கப்படவில்லை. பேருக்கு இரண்டு கேலரிகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அதன் இப்போதைய சொந்தக்காரர், உலகில் அதிகப் பணம் படைத்த விளையாட்டு அமைப்பின் தலைவர்.


ஆனால் இவர்களையும் பணிய வைத்திருக்கிறது சகாரா குழுமம். பெரு நிறுவனங்களின் நடவடிக்கைகள், நியாமற்ற வர்த்தக முறைகளுக்கு நாம் எதிரானவர்கள்தான் என்றாலும், ஐபிஎல்லை அடிபணிய வைத்திருப்பதில் முதல் வெற்றியைப் பெற்றவர்கள் என்பதற்காக சகாரா குழுமம் நமது பாராட்டுக்குரியவர்கள். பிசிசிஐ ஒன்றும் எதிர்க்க முடியாத அமைப்பல்ல என்பதை இது நிரூபித்திருக்கிறது.


புணே அணி எங்களுக்கு வேண்டாம் என்று சகாரா ஒதுங்கியிருப்பதன் மூலம் சுமார் 1700 கோடி ரூபாயை அவர்களுக்குத் திருப்பியளித்தாக வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது. இதுவரையில் யாருக்கும் அடிபணியாத பிசிசிஐ இப்போது, சகாரா குழுமத்துடன் பேச்சு நடத்துவதற்கும் முன் வந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலக கிரிக்கெட்டையும், இந்திய மக்களையும், அரசையும் ஆட்டிப்படைத்து வந்த பிசிசிஐக்கு இது முதல் தோல்வி. கிரிக்கெட்டை சுயநல வாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கும்வரை இது தொடர வேண்டும்.

.
.
.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்!

சச்சின் ஜுரம் எல்லோருக்கும் 100 டிகிரியைத் தாண்டி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அவர் நூறாவது சதத்தை எப்போது அடிப்பார் என்பது மட்டும் தெரியவில்லை. இன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 2 ரன் எடுத்திருந்தபோது பான்டிங் அவரை பிடித்து வெளியே அனுப்பிவிட்டார். சச்சின் நூறு அடித்தாலும் அடிக்காவிட்டாலும் நமக்குக் கவலையில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அதையெல்லாம் விமர்சனம் செய்யவே கூடாது என்கிற ரீதியில் நமது கடைக்கு வரும் ஒரே ஒரு வாடிக்கையாளரும் குறை பட்டிருப்பதுதான் வேதனையளிக்கிறது.

1991-92 ல் பென்சன் - ஹெட்ஜஸ் சீரியஸ், அதைத் தொடர்ந்து வந்த பென்சன் - ஹெட்ஜஸ் உலகக் கோப்பைகளில் இந்திய அணி மிகச் சுமாராக ஆடியது. இன்றைக்கு ஊரிலுள்ள அனைவருக்கும் பேட்டிங், பவுலிங் டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் நமது ரவி சாஸ்திரி அன்றைக்குத் தொடக்க ஆட்டக்காரர். உலகக் கோப்பையின் முதல் இரு போட்டிகளிலும் அசார் தலைமையிலான அணி,  இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் தோற்றுப் போனது. அதிகப் பந்துகளைச் சந்தித்து குறைந்த ரன்களை எடுத்திருந்தார்.  எனது நினைவு சரியெனில், முதல் போட்டியில் 54 பந்துகளில் 27 ரன்களும், இரண்டாவது போட்டியில் 110 பந்துகளில் 57 ரன்களும் எடுத்தார். இந்தப் போட்டிகளில் 7 ரன்கள் மற்றும் 1 ரன் வித்தியாசத்தில் அசார் அணி தோற்றது.

ரவிசாஸ்திரியின் இந்த ஆட்டம் மோசமானது என்பதில் சந்தேகமேயில்லை. குறிப்பிட்ட ஓவர்கள் போட்டியில் இப்படி ஆடவேகூடாதுதான். இதற்காக அவருக்குக் கிடைத்த தண்டனை என்ன தெரியுமா? செருப்பு மாலை. 

ஆனால், இன்றைய வீரர்களுக்கு அத்தகைய பரிசு கிடையாது. செருப்பு மாலை அணிவிப்பது தவறுதான். ஆனால், அவர்களைக் கடுமையாக விமர்சிப்பதும் தவறு என்பதுதான் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. நூறு நூறு ரன்களாக அடிப்பதால் மட்டும் சச்சின் டெண்டுல்கரோ, பிற வீரர்களோ வளர்ந்துவிடவில்லை.  ஊடகங்களில் வெற்று உந்துதல் மிக முக்கியமான காரணம். அதன் மூலமாகத்தான், கிரிக்கெட்டும் அதன் வீரர்களும் வளர்ந்திருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நீங்களும் நானும்கூட இவர்களை வளர்த்துவிட்டதில் ஓர் அங்கம். ஆனால், நீங்கள் எதிர்பார்த்த கிரிக்கெட்டைத்தான் இன்றைய வீரர்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்களா? இல்லவே இல்லை.

இந்தியாவை பிராண்டாகவும், அதன் மக்களை சந்தையாகவும் மாற்றி வியாபாரம் செய்வதுதான் இன்றைய கிரிக்கெட்டின் உத்தி. இந்தியா என்ற பெயரில் ஆடிய அணி உலகக் கோப்பையில் வெற்றி பெற்றது என்றால், அதற்குப் பின்னால், பல்வேறு வியாபார ராஜதந்திரங்கள் இருக்கின்றன என்பதுதான் உண்மை. வேறு எந்த தேசபக்தியும் மண்ணாங்கட்டியும் கிடையாது.

உலகக் கோப்பைப் போட்டியில் தோனி அணி ஜெயிக்கக்கூடாது என்றோ, சச்சின் டெண்டுல்கர் நூறாவது சதம் அடிகக்கூடாது என்றோ நான் வேண்டிக் கொள்வது கிடையாது. ஆனால், இவர்களின் தந்திரம் தோற்றுப் போகவேண்டும் என்கிற அக்கறை எனக்கு உண்டு. 
  
 கிரிக்கெட்டை வெறும் களியாட்டமாக மாற்றிக் கொண்டிருப்பதற்காக, பிசிசிஐ மட்டும் எதிர்க்க வேண்டுமா அல்லது சச்சின், தோனி போன்ற அனைவரையும் எதிர்க்க வேண்டுமா என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.  ஆனால், இந்தக் காலத்தில் ஆடப்படும் கிரிக்கெட்டையே விமர்சிப்பதுதான் நமது வழி. பிசிசிஐயும் அதன் அடிமைகளும் நமது விமர்சனத்துக்கு ஆளாவதைத் தவிர்க்கவே முடியாது.

"யாருமே இல்லாத கடையில யாருக்குப்பா டீ ஆத்தறே"  என்கிற கேள்விக்கு இடம் தராதவகையில் நம் கடையிலும் சரக்குத் தேடி வரும் அந்த ஒரேயொரு வாடிக்கையாளருக்காகவே இந்த விளக்கம்.

.

.
...