புதன், 31 மார்ச், 2010

ஐபிஎல் வானிலை அறிக்கை: யூசுப் புயலும் சேவக் சூறாவளியும்

ஷார்ட் லெக் பகுதியில் ஃபீல்டிங் செய்வதற்கு நிறையவே துணிச்சல் வேண்டும். ராமன் லம்பாவுக்கு அது தேவைக்கும் அதிகமாகவே இருந்தது. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஹெல்மெட் இன்றி வங்கதேசத்தில் நடந்த உள்ளூர் ஆட்டம் ஒன்றில் ஷார்ட் லெக்கில் பீல்டு செய்யும்போது மெஹ்ரப் ஹுசைன் அடித்த பந்து லம்பாவின் தலையைத் தாக்கிவிட்டு,  விக்கெட் கீப்பரின் கைகளுக்குச் சென்றது. இறந்து கொண்டிருக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல் லம்பா தொடர்ந்து பீல்டிங் செய்தார். கவனிக்கப்படாமல் விடப்பட்ட உள்காயத்தால், உரிய மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படாமலேயே அவர் இறந்து போனார். பிசிசிஐ அரசியல் குழப்பங்களால் புறக்கணிக்கப்பட்டிருந்த ராமன் லம்பாவுக்கு இந்திய அணியில் உரிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பது 80 களின் இறுதியில் கிரிக்கெட்டை கவனித்தவர்களுக்குத் தெரியும்.

எல்லோரும் ராமன் மாதிரி புறக்கணிக்கப்பட்டதாகக் கூற முடியாது. இந்தக் காலத்தில் மாஸ்டர் பேட்ஸ்மேன் என்று நம்மால் புகழப்படுபவரும், நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்ட சூதாட்டப் புயலும், வங்காளப் பெரியண்ணாவும், பெருஞ்சுவரும் மேலிடத்துச் செல்வாக்கப் பயன்படுத்தி நீண்டகாலம் வெட்டி மொக்கை போட்டார்கள்.

சரி அது போகட்டும். சென்னை பெங்களூர் அணி ஆட்டத்தைப் பார்க்க ஓசியில் டிக்கெட் கிடைத்ததால் சீயர் லீடர்ஸ் அருகில் அமர்ந்து ஆட்டத்தைக் கவனித்தபடியே இதை எழுத வேண்டியதாயிற்று. கெவின் பீட்டர்சனை அணியில் சேர்க்காதீர்கள் என்று எத்தனையோ முறை மல்லையாவிடம் சொல்லிப் பார்த்தாச்சு.. போன ஐபிஎல்லில் கெவின் போன பிறகுதான் பெங்களூர் உருப்பட்டது. இந்த ஐபிஎல்லில் அவர் ஆடுகளத்துக்குள் இறங்கியதும் நிலைமை தலைகீழாகிவிட்டது. சரி தோத்த பிறகு என்ன பேசறதுக்கு இருக்கு?

இன்றைக்கு இரண்டாவது ஆட்டம் தில்லிக்கும் ராஜஸ்தானுக்கு நடக்கிறது. இந்த ஆட்டம் பற்றி வானிலை ஆய்வு மையத்துக்கு அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் நண்பர் மெட்ராலஜி மகாவிடம் தொலைபேசியில் கேட்டோம். அவர் சொல்கிறார்.

இன்றைய ஆட்டத்தில் யூசுப் பதான் நிறைய ரன்கள் அடிக்க வாய்ப்பிருக்கிறது. காற்று திசை மாறி நகரும்பட்சத்தில் அவர் சொற்ப ரன்களுடன் வீட்டுக்குப் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதேபோல் சேவக், கம்பீர் போன்றோரும் சிக்சர்களுடன் கூடிய ரன்மழை பொழிய வாய்ப்பிருக்கிறது. மற்றபடி வறண்ட வானிலையே காணப்படும். ஷில்பா வந்தால் லேசான தூறல் வரும்.

ஒட்டுமொத்த நிலையைப் பார்க்கும்போது, இப்போதைக்கு தில்லியை மையம் கொண்டிருக்கும் புயல் ராஜஸ்தானை நோக்கி நகர்வதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே தோன்றுகிறது.... ஷில்பா தரப்பில் இருந்து ட்ரீட்மென்ட் இல்லாதவரை.



...
..
..

செவ்வாய், 30 மார்ச், 2010

ஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு?


இந்திய இளைஞர்கள் பலர் சோகமாகியிருக்கின்றனர். தமிழகத்தில் நேற்றிரவு டாஸ்மாக்குக்குச் சென்று பலர் இன்னும் வீடு திரும்பவில்லை. எல்லோர் கையிலும் சானியா படம் இருந்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் இளைஞர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் என்ன இளைஞர்களா இல்லை? அதென்ன எதிரி நாட்டுடன் சம்பந்தம் செய்வது? சோயிப் மாலிக் ஒழிக.

இப்படிப் பெருஞ்சோகத்தில் பலர் ஆழ்ந்திருக்க வேறு சிலர், கங்குலிக்கு வேலை தேட முற்பட்டிருக்கின்றனர். நேற்றைய ஆட்டத்தில் அவர் பேட்டை தூக்குவதற்கு பட்ட பாட்டைச் சொல்லி மாளாது. 2 மீட்டர் இறங்கி வந்து அடித்தால், எல்லா பந்தும் சிக்சருக்குப் போயிருமா என்ன? உங்க பப்பு 2010ல வேகாது அண்ணே.

எப்படியும் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கங்குலிக்கு வாய்ப்பேயில்லை என்பது தெரிந்துவிட்டது. அவருக்காக மூன்று முக்கியத் துறைகளில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. வர்ணணையாளர் பணிக்கு அவர் லாயக்கில்லை என டி.வி. நிறுவனம் ஒன்று ஏற்கெனவே ஒதுக்கிவிட்டது. அதனால் அது இப்போதைக்கு வேண்டாம். பயிற்சியாளர் பணிக்குச் சென்றால் அந்த அணியின் நிலைமை என்னவாகும் என்பதைக் கூறத் தேவையில்லை. வேண்டுமானால் எத்தியோப்பிய அணிக்கு பந்து பொறுக்கிப் போடுவது பற்றிச் சொல்லும் பயிற்சியாளராகச் செல்லலாம். அடுத்தது அரசியல். புத்ததேவுடன் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி ஏதாவது செய்யலாம்.

இத்தனையும் பிடிக்காவிட்டால், ஏற்கெனவே நம்மிடம் உள்ள காஜா போடும் வேலையை கங்குலிக்கு அளிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். அதனால் கங்குலிக்கு கவலைப்பட வேண்டாம்.

இன்னிக்கு ஐபிஎல் போட்டியில் ஆடும் அணிகள் பஞ்சாபும் மும்பையும். இதில் ஒன்று ஆனை, மற்றொன்று எறும்பு. ஒன்றுக்கு முதல் இடம் மற்றொன்றுக்கு கடைசி இடம். இருந்தாலும் கட்டங்கள் சரியாக இருக்கிறதா என்பது பற்றி நீண்டகால ஓய்வில் இருந்து திரும்பிய குடுகுடுப்பையிடம் கேட்டோம்.

ஏற்கெனவே கொடுத்த அருள்வாக்குக்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப்படவில்லை என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார். உடுக்கைக்கு புதிய வார் போடுவதற்கு ரூ.5 கொடுக்க வேண்டியதாயிற்று.

அவரது கணிப்புப்படி இந்த முறையும் மும்பை அணியே வெற்றி பெறும் எனத் தெரிகிறது. பார்ம் தப்பிப் போன யுவராஜ் சிங் தொடர்ந்து சொதப்புவார் என்பது இன்றைய நிலவரம். மற்றபடி சிங்களர்களுக்குக் கட்டம் சரியில்லை.

மும்பைக்காரர்கள் கடந்த போட்டியில் தோற்பது போலப் போய். பஜ்ஜியால் ஜெயித்தார்கள். அதனால், அவர்களுக்கு நல்ல ஆவிகள் துணையிருக்கிறது என்பது நிரூபணமாகிவிட்டது. இன்னொரு வெற்றி அவர்களுக்கு இருக்கிறது.

--------------------
ஐபிஎல் எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் சிங்கள் எதிர்ப்பாளர்கள் தயவு செய்து  முகிலனின் சிங்கள எதிர்ப்பு   இடுகையைப் படியுங்கள். 

முகிலன் கவலைப்படாதீங்க..... நல்ல காலம் பொறக்குது....

..
.
.
.

ஞாயிறு, 28 மார்ச், 2010

ஐபிஎல் எறா: நான் நடிச்சா தாங்க மாட்ட...


எறா படத்தில் இளைய தளபதி ஐபிஎல் வீரராக நடிப்பதாகக் கேள்விப்பட்டோம். படப்பிடிப்பின்போது அவர் அடித்த பந்து பாகிஸ்தான் பார்டரில் போய்
விழுந்ததாகக் கூறப்படுகிறது. இவர் பந்து வீசியபோது, அந்தப் பந்தை கெயில் அடிக்க முயல பேட் தீப்பிடித்து எரிந்ததாகவும், மற்றொருமுறை ஸ்ம்புகள் பறந்துபோய் இந்துமாக் கடலில் விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் நடிக்க வராவிட்டால், மிகச் சிறந்த சிபிஐ ஆபிஸராக ஆகியிருப்பார் என்றுதான் இதுவரை ரசிகப் பெருமக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். இப்போதுதான் புரிகிறது, இந்தியா 50 சச்சின் தெண்டுல்கர்களைத் தவற விட்டிருக்கிறது என்று.

அவரது ஐபிஎல் அனுபவம் பற்றி கேட்பதற்காக படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றோம்...

கேள்வி: பேட்டைக்காரன் வெற்றிதானே?

தளபதி: என்னாங்கண்ணா, நீங்க டிவியே பாக்கறதில்லையா. அதுல நாங்களே சொல்லியிருக்கோம்ல. டாப் டென்ல நாங்கதான டாப்.

உங்களுக்கு இப்ப யாரு போட்டி?

சிலிண்டர்களெல்லாம் எனக்குப் போட்டியாக முடியுமா? இப்ப எங்க அப்பா மட்டும்தான் எனக்குப் போட்டி.

எறா படத்தோட கதை என்ன?

ஐபிஎல் போட்டியில பந்து பொறுக்கிப் போடற பையன் நான். பவுண்டரில இருந்து எடுத்துப் போட்ட பந்து கிரவுண்டுக்கு வெளிய போய் விழுது. அதப் பாத்த ஜனங்க எல்லாம் நீங்கதான் அடுத்த பிராட்மேன்னு என்னய தூக்கிச் வெச்சு கொண்டாடறாங்க. அப்பதான் இன்ட்ரோ சாங். சேப்பாக்கம் ஸ்டேடியமே அதிருது. பெரியவனா ஆனபிறகு ஒருநாள் கென்யா டீம் இந்தியாவ 50 ரன்ல சுருட்டுது. அதப் பாத்து கொதிச்சுப் போய் நானும் கிரிக்கெட்ல சேர்றேன். கென்யா டீம எப்படி தனி ஆளா பழி வாங்கறேங்கறதுதான் கத.

எல்லாப் படத்திலயும் நீங்க ஒரே மாதிரி நடிக்கிறதா சொல்றாங்களே?

சொன்னது யாரு. சிலிண்டர் ரசிகனா? அவங்களப் பத்தி தெரியாதா. முசல் படத்துல பாட்டு பாத்திருப்பீங்களே.. அவ்வ்வ்..

ஐபிஎல் பத்தி என்ன நினைக்கிறீங்க?

நமக்கு இதெல்லாம் ஒத்து வராதுங்க. கிரிக்கெட்ல ஒரு பேட் வெச்சுத்தான் வெளையாடனும்னு ரூல் எதாவது இருக்கா? நானெல்லாம் 5 பேட்ட வெச்சு ஒரே நேரத்துல ஆடுவேன். பந்து கிழிஞ்சு போகும்.

இன்னிக்கு போட்டியில யாரு ஜெயிப்பாங்கன்னு நினைக்கிறீங்க?

நான் கவாஸ்கர் ரசிகன். அவர் பந்து போட்டா அனல் தெறிக்கும். அவர் எந்த டீம்ல இருக்காரோ அந்த டீம்தான் ஜெயிக்கும்.

பொது அறிவுல உங்கள பீட் பண்ண முடியாது. சரி கங்குலிக்கும் சேவக்கும் மோதினா யார் ஜெயிப்பாங்க?

தெரியலைங்க அப்பாகிட்ட கேட்டுச் சொல்லட்டுமா?

வேணாங்க. நீங்களே எதையாவது சொல்லுங்க. அதே நடக்கறதுக்கு ஏற்பாடு பண்ணுவோம்.

சரி எழுதிக்குங்க கங்குலி ஜெயிப்பாரு.

..
.

ஐபிஎல் நொந்திரன்: இது எப்படி இருக்கு?

கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் சச்சின் தெண்டுல்கர். டெஸ்ட் போட்டி ஒன்றில் அவர் 196 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருந்தார். வெளியேயிருந்த தற்காலிக கேப்டன் திராவிட், இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். கடுங் கோபம் அடைந்த தெண்டுல்கர், டிரஸ்ஸிங் ரூமில் திராவிட்டுடன் சண்டையிட்டது நல்ல நகைச்சுவையாக இருந்தது. அதன் பிறகு இன்று வரைக்கும் திராவிட்டுக்கும் தெண்டுல்கருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. அந்த அளவுக்கு தெண்டுல்கர் மிக நல்லவர். அணியின் வெற்றியே கருமமென ஆடுபவர். வேறென்ன சொல்ல,  திராவிட் கேப்டனாக இருந்த காலத்தில் அவரை முடிந்தவரை சச்சின் இம்சித்தார் என்று கூறினால் பக்தகோடிகள் நம்பவா போகிறார்கள்?

சரி கதைக்கு வாங்க. நம்ம ரியல் சூப்பர் ஸ்டார் ப்ரீமியர் லீக் பத்தி என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்கிறதுக்காக ரிஷிகேஷுக்கு சேட்டிலைட் போன் வழியாகப் பேசினோம்.


கேள்வி: நொந்திரன் படப்பிடிப்பில இருக்கறதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்க, நீங்க இங்க என்ன பண்றீங்க?

எட்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி நான் ஒரு எறும்பா பிறந்திருந்தேன். அந்த எறும்போட ஜீவ சமாதியத் தேடித்தான் இங்கு வந்திருக்கேன். எல்லாம் மாயா.

உங்களுக்கு என்ன பிரச்னை? ஏன் இப்படி பேசுறீங்க?

பிரச்னை எனக்கில்ல. அவங்களுக்குத்தான். அந்தப் பிரச்னை லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும்.

நொந்திரன் படத்தோட கதை என்ன?

அத வெளியே சொல்லக்கூடாதுங்கறது டைரக்டர் உத்தரவு. இருந்தாலும் உங்களுக்குச் சொல்றேன் வேறு யாருக்கும் சொல்லீறாதீங்க. ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டிக்கிட்டிருந்தா. அப்ப ஒரு காக்கா வந்து வடையத் தூக்கிட்டு போயிருச்சு.....


சார் மீதிக் கதைய சொல்ல வேண்டாம். த்ரில் போயிடப்போகுது. நாங்க தியேட்டர்லேயே பாத்துக்கறோம். ஆமா காக்காவா நீங்கதானே நடிக்கிறீங்க?

எப்பிடிக் கண்டுபிடிச்சீங்க. சரிதான். பாட்டி வேஷத்தில ராய் நடிக்கிறாங்க.


அத விடுங்க சார்.  இன்னிக்கு ஐபிஎல் மேட்ச்சில டெக்கான் ஜெயிக்குமா? மும்பை ஜெயிக்குமா?

ஜெயிக்கறது ஜெயிக்காம போகாது. ஜெயிக்காம இருக்கிறது ஜெயிக்காது.

ஓ. புரியுது. மும்பை ஜெயிக்கும்னு சொல்றீங்க சரிதானே?

நான் ஒரு தடவை சொன்னா...

சார் புரிஞ்சிடுச்சி.. புரிஞ்சிடுச்சி... போதும். ஐபிஎல் போட்டியில உங்க வாய்ஸ் யாருக்கு...?

நான் யாருக்கும் வாய்ஸ் கொடுக்கறதும் இல்லை. கை தட்டறதும் இல்லை. இத்தனை நாளா மண்டை காய்ஞ்சது பத்தாதா? ஆனாலும் நான் வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துருவேன். அது நூறு வருஷத்திலேயும் நடக்கலாம், முன்னூறு வருஷத்திலேயே நடக்கலாம். நன்றி.

..
.

சனி, 27 மார்ச், 2010

ஐபிஎல் பேட்டி: வீட்டுக்கொரு பந்து, ரேஷன் கடையில் ஸ்டம்பு

கேப்டன் கங்குலி அவர்கள் மிகச் சிறந்த கேப்டன் என்பதை அனைவரும் அறிவோம். நேற்றைய போட்டியில் அவர் மிகச் சிறந்த துடுப்பாட்டக்காரர் என்பதையும் நிரூபித்தார். அவர் 50 ரன்களை எடுத்த அதிர்ச்சியில் அவரது ரசிகர்கள் சிலருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் மிதமான நிலநடுக்கமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவ்வளவு ஏன் 50 ரன்கள் எடுத்ததில் அவரே அதிர்ச்சியாகி அவுட்டானார் என்றால், அந்த 50 ரன்களின் முக்கியத்துவம் பற்றிக் வேறென்ன கூற வேண்டியிருக்கிறது.

இப்படிப் போய்க்கொண்டிருக்கிற சூழலில், இன்றைய போட்டிகளைப் பற்றி நிஜமான கேப்டனிம் பேட்டியெடுப்பதற்காக அவரது வீட்டுக்கு  ஜோல்னா பையுடன் மூத்த பத்திரிகையாளர் பால்பாயிண்ட் அவர்கள் சென்றார்கள். பல பார்டர்களையும் ஏகே 67 களையும் தாண்டி கேப்டனிடம் எடுக்கப்பட்ட பேட்டி இது.

கேள்வி: ஐபிஎல் பத்தி உங்க கருத்து என்ன?

கேப்டன்: எல்லோருக்கும் பணம் கொடுத்து ஜெயிக்கிறாங்க. எல்லாம் மோசடி. எதுக்குப் பதினோரு பேரு சேந்து ஆடணும். தில்லு இருந்தா தனிச்சு நின்னு ஜெயிக்கட்டுமே பாக்கலாம்.


என்ன மாற்றம் கொண்டு வந்தா இது உருப்படும்?

நாட்டுல இப்ப 30 கோடியே 24 லட்சத்து 322 கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறாங்க. அதுல ஆம்பளைங்க 28 கோடியே 12. எழுதப்படிக்கத் தெரிஞ்சவங்க 39 கோடியே 23 லட்சத்து 57 ஆயிரத்து 128. மொத்த கிரவுண்டு 64, பிளேயர் எண்ணிக்கை ஆயிரத்து 548.


என்ன கேள்வி கேட்டாலும் இதுதான் உங்க பதிலா?

நக்கலா? நான் சொல்றேன் கேட்டுக்கோங்க. கிரிக்கெட் உருப்படணும்னா, வீட்டுக்கே போய் பந்து சப்ளை பண்ணணும். பேட், ஸ்டம்பெல்லாம் ரேஷன் கடைல கிடைக்கறதுக்கு ஏற்பாடு பண்ணணும். டிவியில ஹிந்திலயும் இங்கிலீஸ்லயும் கத்தறத விட்டுப்புட்டு தெலுங்குல பேசறதுக்கு ஏற்பாடு பண்ணணும். சீயர் லீடர்ஸ் பொண்ணுங்களயெல்லாம் கூட்டு அறிவுரை சொல்லணும்.

சரிங்க இன்னிக்கு நம்ம சென்னை டீம் ஜெயிக்குமா?


ஜெயிக்காது.

ஏன் அப்படி சொல்றீங்க?

அதக் கேக்காதீங்க. அதுதான் தீர்ப்பு.

ரசிகர்களுக்கு உங்க அறிவுரை?

யாரும் கல்யாண மண்டபம் கட்டாதீங்க.

...

.
.

ஐபிஎல் அறிக்கை: உடன் பிறப்பே...

கேள்வி: ஐபிஎல் ஒரு சூதாட்டம் என கூறப்படுவது பற்றி...

பதில்: எல்லோரும் காலைவாரிவிட்ட பிறகும் தன்னம்பிக்கையுடன் இந்தத் தளம் இயங்குகிறதென்றால், எனது அண்ணன் தந்த எதையும் தாங்கும் இதயம் உன் அண்ணனுக்கு இருப்பதுதான் காரணம். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை சூதாட்டம் என்று சொல்பவர்கள் பகுத்தறிவுச் சிந்தனை இல்லாதவர்கள்.  அப்படிப் பார்த்ததால் வாழ்க்கையே கூட ஒரு சூதாட்டம்தானே.

கேப்டன் கங்குலியை விமர்சிப்பது சரியா?

முதலில் ஒன்றைச் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். கேப்டன் என்று அழைப்பதை நிறுத்துங்கள். அணித் தலைவர் என்று தாய்த்தமிழ் தந்த முத்துச் சொல் இருக்கிறபோது மாற்றான்சொல் எதற்கு. அந்தப் பெயரை நீக்கினாலே அவப்பெயரும் நீங்கும். கங்குலியை விமர்சிப்பது முற்றிலுமாகத் தவறு. காசைச் சுண்டி பூவா, தலையா போடுவது, போட்டி முடிந்ததும் தமிழினமே மெச்சத் தக்க வகையில் பேட்டியளிப்பது என எல்லாப் பணிகளையும் அவர் சரியாகவே செய்திருக்கிறார். இதில் எங்கிருந்து கண்டீர் குறை. அது சொல்வோர் கண்ணிலிருக்கிறது தம்பீ.

என்ன செய்தால் சென்னை அணி வெற்றிபெறும்?

தம்பி தோனி, ரெய்னா போன்றவர்களெல்லாம் நமது செயற்குழு எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும். தொப்பி போட்டுக் கொண்டு நடுவில் நிற்பாரே நடுவர், வெயிலிலும் மழையிலும் உழைத்துச் சோர்ந்துபோகும் அவருக்கு உரிய ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். எதிரணியைச்  சேர்ந்தவர்களுக்கு நமது அணியில் சேருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். இதைவிட எளிதான வழி ஒன்று இருக்கிறது. அதற்கு மதுரைக்காரர் ஒருவரை அணியில் சேர்க்க வேண்டும். விதிகள் இடந் தருமா எனக் கேட்டுச் சொல்.


இன்றைய ஐபிஎல் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்?

தம்பி கங்குலியும் தொப்புள்கொடி உறவுகளுக்குத் துரோகம் செய்த நாட்டைச் சேர்ந்த ஒருவரும் மோதுகின்றனர். கருஞ்சிங்கம் கெயில் போன்றவர்கள் இருப்பதால் கங்குலி அணியின் வெற்றியை யாரும் அணைபோட்டுத் தடுக்க முடியாது. தம்பி கங்குலி வழக்கம்போல் தனது பணிகளை மட்டும் பார்த்தால் போதுமானது. மட்டையை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் களத்தில் இருந்து சோர்வடைய வேண்டாம். வாழ்த்துக்கள்.

கிரிக்கெட் உடன்பிறப்புகளுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?


ஐபிஎல் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும்போது மற்ற நாடுகளில் சர்வதேசப் போட்டிகள் என்ற போர்வையில் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளவிடாமல் தடுப்பதற்குச் சதி நடப்பதாக அறிந்தேன். இது தொடர்பாக கடந்தவாரமே உலகக் கிரிக்கெட் சங்கத்துக்கு தந்தி அனுப்பினேன். இப்போதுதான் அதற்கான பதில் வந்திருக்கிறது. வருகிற முட்டாள் தினத்துக்குப் பிறகு வேறு எங்கும் கிரிக்கெட் ஆட்டங்களே நடக்காது என அந்தச் சங்கத்தின் தலைவர் உறுதியளித்திருக்கிறார். எனவே தம்பீ, நமது அரும்பெரும் முயற்சியால் கிடைத்த இந்த வெற்றிக்காக யாரும் எமக்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டாம் என்பதை இதன் மூலம் சொல்லிக் கொள்கிறேன். நன்றி.

..
.
.

வியாழன், 25 மார்ச், 2010

மூளை ஸ்ட்ரைக்!



..
.

ஐபிஎல் ஜோக்கர்ஸ்

தென்னாப்பிரிக்க அணிக்கு ராசியே இல்லை என்ற கருத்து பொதுவாக இருக்கிறது. 99 உலகக் கோப்பையில் அது அப்பட்டமாகத் தெரிந்தது. சூப்பர் சிக்ஸ் என்று வித்தியாசமான சுற்று அந்த ஆண்டில் அறிமுகமாகியிருந்தது. ஜிம்பாப்வேயிடம் படு கேவலமாகத் தோற்றுப்போன பிசிசிஐ அணி, அரையிறுதிக்குப் போகமுடியாமல் வெறியேறியது. காரணம் சூப்பர் சிக்ஸ்தான்.

ஒரு அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் மோதின. ஆலன் டொனால்டு, லான்ஸ் க்ளூஸ்னர், போலக், காலிஸ், கிப்ஸ் ரோட்ஸ் போன்றவர்கள் தென்னாப்பிரிக்கா பக்கமும், கில்கிறிஸ்ட், ஸ்வீவ் வா, மார்க் வா, வார்னே, பெவன் போன்றவர்கள் ஆஸ்திரேலியா பக்கமும் இருந்தனர்.  ஆட்டம் அனல் பறந்தது. போலக், க்ளூஸ்னர் பந்துவீச்சில் 213 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சுருண்டது.

ஆஸ்திரேலிய பந்துவீச்சும் கனமாகத்தான் இருந்தது. ஆனாலும் தென்னாப்பிரிக்கு வெற்றிபெற வாய்ப்பிருந்தது. கடைசியில் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. 3 விக்கெட்டுகள் கையில். தொடங்கியது சோகம். 2 பேர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். க்ளூஸ்னர் ஒரு சிக்ஸ் அடித்து தென்னாப்பிரிக்காவுக்கு நம்பிக்கையூட்டினார்.

கடைசி ஓவர். முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரி. வெற்றிபெற ஒரே ரன். பேட் செய்வது ஜாம்பவான் க்ளூஸ்னர். மறுபக்கம் ஆலன் டொனால்டு. ரன் அவுட். சூப்பர் சிக்ஸ் பட்டியலில் மேலிருந்த அடிப்படையில் ஆஸ்திரேலியா உள்ளே. தென்னாப்பிரிக்கா வெளியே.

தென்னாப்பிரிக்க அணியின் துரதிருஷ்டம் என்பதைத் தவிர, இந்தப் போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று இருக்கிறது. அது குரோனியே. அவர் எடுத்த ரன்கள் பூஜ்ஜியம்.

கிங்ஸ் விசாரணைக் குழு முன்னிலையில் க்ரோனியே கதறிக் கதறி அழுதாரே, அப்போது அவரிடம் இந்தப் போட்டி பற்றிதான் கேட்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய ஒரு போட்டியிலேயே சூதாட்டம் புகுந்திருக்கும்போது, ஐபிஎல் போட்டிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு எளிமையான தியரி. ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் 2 அணிகள் ஜோக்கர்களாக இருப்பார்கள். அந்த இரண்டு அணிகளுக்கு வெற்றிபெறுவது நோக்கமே கிடையாது. அவர்கள் மற்ற அணிகளுக்கு இணக்கமாக ஆட வேண்டும். அதாவது, மற்ற அணிகள், புள்ளி பட்டியலில் முன்னேறுவதற்கும், அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கும் உதவ வேண்டும். எதிரணியைச் சேர்ந்த சில ஆட்டக்காரர்கள் அதிக ரன்களைப் பெறுவதற்கும் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கும் பயன்படுவதான் இந்த இரு அணிகளின் பணி. இப்படி உதவி செய்வதன் மூலமாக இந்த அணிகள் சம்பாதிக்கின்றன. அவர்கள் தோற்றாலும் வெற்றிதான். 2008 ஐபிஎல் போட்டியில், டெக்கானும், பெங்களூரும்,  2009-ல் மும்பை இந்தியன்ஸ், கோல்கத்தா, ராஜஸ்தான் போன்ற அணிகளும் இதைச் செய்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்திருக்கிறது.

இதேபோல், ஒன் டூ ஒன் சமரச உடன்பாடுகளும் ஐபிஎல் போட்டிகளில் நடக்கின்றன. அதாவது எதிரெதிர் அணிகளைச் சேர்ந்த இருவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் ஒப்பந்தம் செய்து கொள்வது. இருவருமே அந்தந்த அணிகளில் நிலையான இடத்தைப் பிடித்துக் கொள்வதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

மக்களுக்குத் தேவை களியாட்டம்தானே.

..

.

சச்சினின் முகங்கள்


அசார் என்றால் தொழுகை என்று அர்த்தம். ரீபோக் ஷூ விளம்பரத்துக்காக, ஷூவில் அசார் என கையெழுத்திடப் போய் பெரிய சர்ச்சையில் சிக்கினார் அசார். எல்லோரும் பழமைவாதிகளாக இருக்கின்றனர் என்று கூறிய அவர், கடைசியில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதே அசார், சூதாட்டப் புகாரில் சிக்கியபோது, சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவன் என்ற காரணத்தினால்தான் என் புகழைக் கெடுக்கிறார்கள் என்று கூசாமல் சொன்னார். அதே அசார், அதே சிறுபான்மை இனத்தைக் காரணம் காரணம் காட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டார்.

சரி விஷயத்துக்கு வருவோம். இந்த சூதாட்டப் புகார் பற்றி சச்சினிடம் கேட்டபோது, அசாருக்கு புக்கிகளுடன் தொடர்பிருந்தது பற்றி தமக்குத் தெரியும் என ஒப்புக் கொண்டார். குற்றத்துக்குத் துணை போனதற்காக சச்சினுக்கு பெரிய தண்டனை ஏதும் அளிக்கப்படவில்லை. குற்றத்தை மறைத்ததற்கு அணியைவிட்டு நீக்கப்படுவோம் என்ற பயம்தான் காரணமாக இருக்கக்கூடும்.

சச்சின் ஆடவந்த சில ஆண்டுகளுக்குப் பிறகே களத்துக்கு வந்த வினோத் காம்ப்ளி, சச்சினுக்கு முன்பே செஞ்சுரி அடித்தார். சச்சினுக்கு முன்பே இரட்டைச் சதமும் அடித்தார். சச்சினை விட மிக வேகமாகப் புகழ் உச்சியையும் எட்டினார். சச்சின் அளவுக்குத் திறமையும் இருந்தது. ஆனால், 96 உலகக் கோப்பையுடன் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று. ஒரே காரணம் ஆர்வத்துடன்கூடிய உழைப்பு இல்லாதுதான். ஆனால், இத்தனை ஆண்டுகள் ஆடிய பிறகும் எந்த பயிற்சியையும் சச்சின் தவற விடமாட்டார். அது அவருடைய தனித்தன்மை.

அசாரிடமிருந்த கேப்டன் பதவி, சச்சினுக்குத் தரப்பட்டது. அதை அவரால் உருப்படியாகச் செய்ய முடியவில்லை. பேட்டிங் பாதிக்கப்படுவதாகச் சொன்னார். வழிநடத்தும் திறமையில்லாததுதான் அதற்குக் காரணம். மற்றதெல்லாம் சப்பைக் கட்டு.

90 ரன்களுக்குப் பிறகு சச்சின் எப்படி ஆடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அணி எந்த நிலைமையில் இருந்தாலும் கட்டைதான் போடுவார். அது அவருடைய சுயநலம். பலர் இதை ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிராக சென்னையில் நடந்த ஒரு போட்டியில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சச்சின் அவுட் ஆனார். அந்த 12 ரன்களை எடுக்காமல் மேலும் 3 பேர் அவுட் ஆகி தோற்றுப் போனார்கள். சச்சின் மேட்ச் வின்னர் இல்லை. ஆனால், அவர் இல்லாமல் மேட்சை ஜெயிக்கவும் முடியாது.  அவர் இல்லாத இந்திய அணி, கேள்விக்குறிதான்?

இன்றைய ஐபிஎல் போட்டியை சச்சினுக்கும் தோனிக்கும் இடையேயான போட்டியாகக் கருதிப் பார்க்க வேண்டும்.
..
..
.

டெக்கானும் பாகிஸ்தானும் - விட்டுக் கொடுக்கப்பட்ட வெற்றி

 எச்சரிக்கை: படம், வலைமனையிலிருந்து சுடப்பட்டது.

92 கிரிக்கெட் உலகக் கோப்பையை பாகிஸ்தான் எப்படி ஜெயித்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் ஒரு மீள்பார்வை. 92 உலகக் கோப்பையில் 9 அணிகள் லீக் முறையில் ஆடின. அசார் தலைமையிலான பிசிசிஐ அணி பெரும்பாலான ஆட்டங்களில் தோற்றது. ஆனால் பாகிஸ்தானிடம் வென்றது. இங்கிலாந்துடனான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மழை குறுக்கிடவே ஆளுக்கொரு புள்ளிகள் வழங்கப்பட்டன. இந்த ஆட்டம் முறையாக நடந்திருந்தால் இன்றைக்கும் பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பை ஏக்கம் இருந்து கொண்டேயிருக்கும்.

மார்ட்டின் குரோ தலைமையிலான நியூசிலாந்து அணிதான் 92 உலகக் கோப்பையின் சிறந்த அணி முதல் 7 லீக் ஆட்டங்களிலும் வென்றிருந்த அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்தித்தது. ஏற்கெனவே இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியிருந்த நிலையில், கடைசி வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருந்தது.

பாகிஸ்தானின் புள்ளிகள் 7, ஆஸ்திரேலியாவின் புள்ளிகள் 6. இரு அணிகளும் தத்தமது கடைசி லீக் ஆட்டங்களை ஆடின. ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு வரக்கூடாது என்பதற்காக, நியூசிலாந்து அணி வேண்டுமென்றே பாகிஸ்தானுக்கு விட்டுக் கொடுத்தது. ஆஸ்திரேலியா தனது கடைசி ஆட்டத்தை வென்றாலும் அரையிறுதிக்குச் செல்ல முடியவில்லை.

விட்டுக் கொடுத்த நியூசிலாந்து அணியை அரையிறுதியில் நையப்புடைத்தது பாகிஸ்தான். இறுதி ஆட்டத்தில் சொதப்பினாலும் ஜெயித்தது. இந்த உலகக் கோப்பை பாகிஸ்தானுக்குக் கிடைத்ததற்கு விட்டுக் கொடுத்தலும் அதிர்ஷ்டமுமே காரணம்.

அதே போலத்தான் , 2009 ஐபிஎல் கோப்பையும், தோற்று வெளியேற வேண்டிய நிலையில் இருந்த டெக்கான் அணி, கோல்கத்தா அணியுடன் மாயாஜாலமாக வெற்றி பெற்றது.  கடைசி ஓவரில் 23 ரன்கள் எடுக்கப்பட்டன. நம்பும்படியாகவா இருக்கிறது.

92 உலகக் கோப்பை சும்மா விட்டுக் கொடுக்கப்பட்டது, 2009 ஐபிஎல் கோப்பை காசுக்காக விட்டுக் கொடுக்கப்பட்டது.

இன்றைய ஐபிஎல் போட்டியில் முதல் ஆட்டம் பெங்களூருக்கும் டெல்லிக்கும் இடையேயானது. மேற்சொன்ன குறிப்புகள் நினைவுக்கு வந்திருப்பதால், இப்போதைக்கு யார் ஜெயிப்பார் என்று தெரியவில்லை.

நல்ல விமர்சனம் வேண்டுவோர் கீழ்கண்ட தளங்களைப் பார்வையிடலாம். திட்டுவதென்றால் அங்கேயே திட்டவும்.



வலைமனையின் அட்டகாசமான கமெண்ட்ஸ்

சங்ககாரவுக்கு முகிலனின் அட்வைஸ் (அய்யோ) 

கிரி பிளாக்கில் ஐபிஎல் ஒப்பீடு 

புலவன் புலிகேசியின் ஐபிஎல் எதிர்ப்பு 

ஸ்ரீயின் தெண்டுல்கர் அனுதாபம் 

சதீஷ் கில்லியின் ஐபிஎல் வாக்கெடுப்பு

..

..

புதன், 24 மார்ச், 2010

ஐபிஎல் அடக்கி வாசிப்பு: ஆஸ்திரேலியாவா? சிங்களமா?

கடந்த உலகக் கோப்பையில் திராவிட் தலைமையிலான அணி தோற்றுப் போனதற்கு முழுக்க முழுக்கக் காரணம் தோனிதான். அதுவரை நன்றாக விளையாடிக் கொண்டிருந்தவர், உலகக் கோப்பையில் மட்டும் சொதப்பினார்.

 உலகக் கோப்பை முதல் சுற்றிலேயே பிசிசிஐ அணி வெளியேறியதும், திராவிட் மிகவும் சோகமானார். விரக்தியின் உச்சத்துக்கே போனார். அப்போதுதான் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வந்தது. போனால் போகட்டும் என்று தோனியை கேப்டனாக அனுப்பி வைத்தார்கள். திராவிட்டும் தனக்குப் பின்னால் நடக்கும் சதியைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியாதவராக இருந்தார்.

அந்தச் சமயத்தில் கேப்டன் பொறுப்பு தோனிக்குப் பதிலாக யுவராஜுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். கூடுதல் அனுபவம் பெற்றவர் அவராகத்தான் இருந்தார். ஆனாலும் தோனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதில் ஏதோ உள்விவகாரம் இருந்தது.

திராவிட்டுக்குச் சோதனைக்குச் சோதனையாக அந்த போட்டியில் தோனி தலைமையிலான அணி கோப்பையை வென்றது. அதுதான் இந்தியக் கிரிக்கெட் அணி என்று கூறப்படும் பிசிசிஐ அணியில் ஏற்பட்ட மாபெரும் திருப்பம். அந்த வெற்றியில், திராவிட்டின் கேப்டன் பதவி பறிபோனதுடன், யுவராஜின் கனவும் தகர்ந்தது.

ஆக, திராவிட்டுக்கும் யுவராஜுக்கும் பொது எதிரி தோனி.

இந்த எதிர்ப்பு வெளிப்பாட்டால்தான் கடந்த போட்டியின்போது சென்னை அணியை வெற்றி கொண்டபோது யுவராஜ் அதிகப்படியாக அலட்டினார். துள்ளிக் குதித்தார்.

இன்றைக்கு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதும் ஆட்டத்தில் யுவராஜ் சிங்குக்கு இந்த அளவு உற்சாகம் இருக்காது என்று கணிக்க முடிகிறது. ஆனாலும் "நீங்க எத்தனை ரன் எடுத்தாலும் அதைவிடக் குறைவா எங்களால் எடுக்க முடியும்" என்று ஆவேசமாகப் பேசும் நிலையில்தான் ராஜஸ்தான் அணி உள்ளது. ஸ்மித் பிளைட் பிடித்து போனபிறகு யூசுப் பதானை நம்பியது அந்த அணி. அவரோ ஒரு செஞ்சுரிக்குப் பிறகு தொடர்ந்து புஸ்வாணம் விட்டுக் கொண்டிருக்கிறார்.

பஞ்சாப் அணியில் யுவராஜ், சங்ககார, பதான் ஆட்டம் சரியாக இருந்தால் வெற்றி அவர்களுக்குத்தான்.
..
.

செவ்வாய், 23 மார்ச், 2010

ஐபிஎல் கள்ள வோட்டு: வலைப்பதிவு ஜனநாயகம் - ஒரு செல்ஃப் ஆப்பு

ஒரு வயித்தெரிச்சக் கோஷ்டியின் ஆதங்கம்.

விஜயகாந்த் மாதிரி கட்சி தொடங்கியாச்சு. தெரிஞ்சவங்க, தெரியாதவங்க எல்லாத்துக்கும் மெயில் அனுப்பி வோட்டு போடவும் சொல்லியாச்சு.  தமிலிஷ்லேயும் தமிழ்மணத்திலேயும் மனுத்தாக்கல் ஏற்பாடு பண்ணியாச்சு. கள்ளவோட்டுப் போடச் சொல்லி கைக்காசு காலியாச்சு. நம்மகிட்ட காசு வாங்கிட்டு எதிரணிக்கு வோட்டுப் போடறாங்க. இப்படியே போய்க்கிட்டிருந்தா நம்ம கட்சிய ஒரு நாள் கலைச்சிர வேண்டியதான்.

கட்சி ஆரம்பிக்கும்போதே நல்லவங்க சிலபேரு சொன்னாங்க. இதெல்லாம் உனக்கு ஒத்து வராதுண்ணு. அதுக்கெல்லாம் தலையில இருக்கிற கிட்னி ஒழுங்கா வேலை செய்யணுமாம். நல்லவங்க சொன்னா நாம எங்க கேக்கறோம். தெனாவெட்டா கட்சியத் தொடங்கினோம். கலர் வேணுங்கறதுக்காக கத்ரீனா, ஜூகி, ப்ரீத்தியெல்லாம் போஸ் கொடுக்க வெச்சோம். ஆனா என்ன பலன்? யாரும் வோட்டுப் போட மாட்டேங்கிறாங்க.

தமிலிஷ்லகூட நம்ம கட்சி சார்ந்த சமாசாரம்தான் ஹாட். நித்யானந்தா விவகாரம் பரபரப்பா இருந்தபோது "சூடான சங்கதி"ன்னு தனி காலமே கொடுத்தாங்க. என்ன பொழைப்போ அது. நக்கீரனை விடக் கேவலம். ஜூனியர் விகடனைவிட அசிங்கம். சன் டி.வி.யைவிடக் கொடுமை. நான் கட்சியைக் கலைக்கும் முன்னாடி தமிலிஷ் கட்சியைக் கலைச்சிரலாம். தேர்தல் கமிஷனே இப்படியிருந்தா எப்படி? இதச் சொன்னதுக்காக நம்ம கட்சி அங்கீகாரத்த ரத்து பண்ணீராதீங்க. இது சும்மா வாய்க்கொழுப்பு. பரபரப்பு வீராப்பு. அம்புட்டுதேன்.

வோட்டு வாங்கறதுக்காக நித்தியானந்தாவ பிரசாரத்துக்குக் கூப்பிடக்கூடான்னுதான் மோடியையும் கங்குலியையும் கூப்பிட்டோம். இப்ப என்னடான்னா, சூடான சங்கதி ஐபிஎல்தானாம். ம்... வெளுத்துக் கட்டுங்க. நல்லவேளை நித்தியானந்தா பரபரப்பை ஐபிஎல் அடக்கிருச்சி.

இன்னொரு தேர்தல் கமிஷன் தமிழ்மணம். மொய்யெழுதுவோர் பட்டியலை தனியே காட்டி அசிங்கப்படுத்துகிறார்கள். நாமும் எல்லா இடத்துக்கும் போய் ஹாய்.... பாய்.... சூப்பர்.... நீங்க புதுமையான தலைவர்.... வாழ்க... ஒழிகன்னு எவ்வளவோ மொய் எழுதிக் கோஷம் போட்டு வந்தாலும் கார்த்திக் கட்சி வேட்பாளர் மாதிரித்தான் நம்மள பாக்கறாங்க. என்ன மொய் எழுதறாங்கங்கறது முக்கியமில்ல... எவ்ளோங்கறதுதான் முக்கியம்.... நம் வீட்டுக் கல்யாணத்துக்கு நாமே மொய்யெழுதினாலும் கணக்கில சேரும் போலிருக்கு. இது அமெரிக்கா மாதிரி, சுவிட்சர்லாந்து மாதிரி ரொம்ப மேம்பட்ட ஜனநாயகம்.

தேர்தல் கமிஷன் திரட்டிகளே கொஞ்சம் சிந்தியுங்கள். இதிலெல்லாம் ஜனநாயகம் தேவையா?  கிடாக்கறி விருந்து கொடுக்க வசதியில்லாத சுயேச்சைகளெல்லாம் தேர்தலில் டெபாசிட் இழக்கத்தான் வேண்டுமா? ஒவ்வொரு வீடாகச் சென்று மொய் வீசிவிட்டு வந்தால்தான் வோட்டுக் கிடைக்குமா? வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, பூத் ஏஜெண்டுக்கு குவார்ட்டர் வாங்கிக் கொடுப்பது போன்ற தில்லாலங்கடி வேலைகளெல்லாம் உண்டா? இல்லையென்றால் தேர்தல் கமிஷனையே கவனிக்க வேண்டுமா?


..
.
.

ஐபிஎல் காவிரிச் சண்டை: கன்னடமா? தமிழகமா?


தமிழகத்துக்கும் கன்னடத்துக்கும் ஆண்டுதோறும் ஒருமுறையாவது வீராவேசமான காவிரிச் சண்டை நடக்கும். மூத்த அரசியல்வாதிகள் முதல் குள்ளமணிவரை அனைவரும் வீரம் காட்டுவார்கள். நடிகைகள் சிலர் அந்தப் பக்கமும் இந்தப்பக்கமும் உண்ணாவிரதம் இருப்பார்கள். நெய்வேலிக்குப் போய், கன்னடத்துக்கு கரண்ட் போகும் சுவிட்சை ஆஃப் செய்யப் போவதாக போட்டி அணியினர் சொல்வார்கள். எங்கு ஷாக் அடிக்குமோ தெரியாது, கருப்புச் சட்டையுடன் சாமி தரிசனம் முடித்துவிட்டு சென்னைக்கு வெற்றிச் சிரிப்புடன் திரும்புவார்கள்.

சூப்பர் ஸ்டாருக்கு ரெண்டு பாஷையும் அத்துப்படி. என்ன பேசினாலும் அப்பாவிப் பசங்க கேட்டுக்கிட்டு போவாங்க. மிக அதிகமாக ஆவேசம் தமிழகத்தில் இருந்துதான் கிளம்பும். சென்னையில் கன்னடத்துக் கடைகளை உடைப்பார்கள். எழுத்துக்களை தார்பூசி அழிப்பார்கள். சில கன்னடத்துக்காரங்ககூட தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் இருக்கென்று பேசுவார்கள். சென்னை உண்ணாவிரததத்தை சன் டி.வி.யும், பெங்களூர் உண்ணாவிரதத்தை உதயா டி.வி.யும் நேரடியாக ஒளிபரப்பும். அவர்கள் நடுநிலையாக நடந்து கொள்வதாக ஊர் மெச்சிக் கொள்ளும்.

முதலில் 10 டிஎம்சி என்பார்கள். பிறகு 5 டிஎம்சி என்பார்கள். கடைசியில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் விடுவோம் என்பார்கள். வெற்றிபெற்றுவிட்டதாக தமிழக அப்பாவிகள் எக்காளமிடுவார்கள். ஆனால், கன்னடத்துக்காரர்கள் சொல் பிறழாதவர்கள். சொன்னபடி தண்ணீர் விடுவார்கள். எப்போது? தமிழகம் தண்ணீரில் மிதக்குமே அநதக் காலத்தில். அதாவது அக்டோபர் நவம்பரில். இருக்கிற வெள்ளம் போதாதென்று கன்னடத் தண்ணி வந்து கூவத்துக் குடிசைகளை அடித்துச் செல்லும். இப்படித்தான் தமிழ்நாடு ஆண்டுதோறும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது.

சரி போகட்டும். இன்னிக்கு ஐபிஎல் போட்டிக்கு வருவோம். கடைசியாகக் குடுகுடுப்பை சொன்ன ஜக்கம்மா அருள்வாக்கு பலித்துவிட்டது என்பதால், இன்று நடக்கும் சென்னை-பெங்களூர் போட்டியையும் அவர் கணிப்புக்கே விட்டுவிட்டோம்.

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் இதுவரை அவுட் ஆக்கவே முடியாத ஜாம்பவான் காலிஸ் பெங்களூரின் பொக்கிஷமாக இருக்கிறார். கன்சிஸ்டன்சி என்று சொல்வார்களே, இப்போதைக்கு, சச்சின், தோனி, காலிஸ் மூவரிடம் மட்டும்தான் அதைப் பார்க்க முடிகிறது. இந்தக் கட்டுரையை எழுதும் மாபெரும் கட்டுரையாளருக்கும் இது பொருந்தும்.

காலிஸ் தொடர்ந்து அப்படி ஆடுவார் என எதிர்பார்க்கலாம். கும்ளே சுழல் இருக்கிறது. பிரவீன் பரத்துகிறார். பான்டே, ராகுல் போன்றவர்களும் அடிப்பார்கள். ஆக, இது வலுவான அணி.

தோனி இல்லாதது சென்னைக்குப் பெரிய குறை. 137 ரன்களை எடுக்க முடியாமல் உருண்டு புரண்ட அந்த அணி இன்னிக்கு என்ன செய்யப் போகிறதோ. ஹேடன் கணக்கைத் தொடங்கியிருப்பது ஒரு பலம். ரெய்னா ஓகே.

குடுகுடுப்பையின் கணிப்புப்படி சென்னை அணிக்கு யாரோ செய்வினையும் வேறுசிலர் செயப்பாட்டுவினையும் வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதனால் அவர்கள் வெற்றிபெறுவது கொஞ்சம் சிரமம்தான்.

காவிரியில் தமிழகம் எப்படி வெற்றிபெறுகிறது என்பது புரிந்துவிட்டதுதானே!
..

..
.

ஐபிஎல் புள்ளி பட்டி: துல்லியமானதும் பிரத்யேகமானதும்

உங்கள் பதிவில் சரியான புள்ளி விவரம் இல்லை என்று கூறியவர்களுக்காக ஐபிஎல் போட்டிகளில் அணிகளின் நிலை (23.03.2010 காலை)

அணி
ஆட்டம்
வெ.
தோ.
டை
வரு.
புள்ளி
ர.ரே.
எடுத்தது
கொடுத்தது
மும்பை
4
3
1
0
0
6
+1.330
737/78.3
638/79.1
பெங்களூர்
4
3
1
0
0
6
+1.212
587/68.4
582/79.2
டெக்கான்
4
3
1
0
0
6
+0.450
681/80.0
645/80.0
சென்னை
4
2
2
0
0
4
+0.448
649/79.1
620/80.0
கோல்கத்தா
5
2
3
0
0
4
-0.851
695/99.2
773/98.3
டெல்லி
5
2
3
0
0
4
-0.919
754/97.0
862/99.1
பஞ்சாப்
4
1
3
0
0
2
-0.276
645/80.0
656/78.4
ராஜஸ்தான்
4
1
3
0
0
2
-0.953
609/80.0
581/67.5


பி.கு. வெட்டி ஒட்டுவதற்கு இந்தத் தலைப்பு தேவையா என விமர்சிப்பது, இணைய நெறிமுறைகளுக்கு எதிரானது.
..
...
 ..

திங்கள், 22 மார்ச், 2010

ஐபிஎல் தத்துவம்: மனித வாழ்க்கையும் மங்கூஸ் பேட்டும்


தேவை 20 ரன்
போடுவது கடைசி ஓவர்
சுவரை இறக்கலாமா?

நோபால் வீசிவிட்டு
அம்பயரிடம் கேட்கலாமா
ஹௌ இஸ் தட்?

பஞ்சாப் வைத்தியம் இல்லை
என்பதால் சீயர் லீடர்களிடம்
டேட்டிங் கேட்கலாமா?

பிஃப்டி அடிக்காமல்
செஞ்சுரி அடிக்க
வழி தேடலாமா?

வீசாத ஓவரை
மெய்டன் ஓவர் என்பது
ஓவராகாதா?

ஆர்சி அடித்தால்
மப்பு வரும்.
ரன்கூட வருமா?

போதி மரத்துக் குச்சியால்
பல் தேய்தால்
ஞானம் வந்திடுமா?

...
..

ஐபிஎல் அருள்வாக்கு: மோடி அருள் ஷாருக் பக்கம்!

எச்சரிக்கை: கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கங்குலி தொடர்கிறார்.

குலசாமி கோயிலுக்குப் போவதாகக் கூறிவிட்டுச் சென்ற காஜா, சேரக்கூடாத ஆள்களுடன் சேர்ந்து கெட்டுப் போய்விட்டான். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சூப்பர் ஓவர்வரை செல்லும் என ரூ.150 பெட் கட்டி ரூ. 1500 ஜெயித்திருக்கிறான். இதையடுத்து த்ரிஷாவுடன் டேட்டிங் கேட்டிருப்பதாகத் தெரிகிறது. அவனது இடத்துக்கு ஆள்கேட்டு தினத்தந்தி "ஆள் தேவை" வரி விளம்பரப் பகுதியில் ரூ.50க்கு 15 வார்த்தை விளம்பரம் செய்திருந்தோம். அதைக் கண்டு கங்குலி உள்ளிட்ட பலர் மனுப் போட்டிருந்தார்கள். இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இன்றைக்கு மும்பை அணியும் கோல்கத்தா அணியும் மும்பையில் மோதுகின்றன. மும்பைதான் ஜெயிக்கும் என்பது அனைவரின் கணிப்பு. ஆனால் இந்த முறை அது நடக்கப் போவதில்லை என என் மனதுக்குப் பட்டது. நமது சந்தேகத்தைக் கொண்டு பொதிகை மலையடியில் அருள்வாக்குச் சொல்லும் பேச்சியம்மாவிடம் சென்றோம். அவர்தான் நமக்குச் சில முக்கிய விஷயங்களைச் சுட்டிக் காட்டினார். மும்பை அணியில் பலருக்கு சந்திராஷ்டமம் நடப்பதும் சந்திராஷ்டமக் காலத்தில் தொட்டது கெட்டப் போகும் என்கிற முன்னோர் சொல்வழக்கும் அவர் சொல்லத்தான் நமக்குத் தெரிந்தது.

இது தவிர கடந்த ஆட்டத்தில் காலிஸிடம் சிக்கி மும்பை பந்துவீச்சாளர்கள் சின்னா பின்னமாகியிருக்கிறார்கள். அதே போல் முக்கிய பேட்ஸ்மேன்களும் கும்ளேயில் சுழலில் அரண்டுபோயிருக்கிறார்கள். பிரேவோவும், பொலார்டும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கோல்கத்தா அணிக்கு கங்குலி கேப்டன் என்பதைத் தவிர மும்பை அணிக்கு நல்லசேதி வேறெதுவும் இல்லை.

அதே நேரத்தில் கோல்கத்தா அணியில் கெய்ல் சேர்கிறார். அவரது சிறப்பான தொடக்கம் அந்த அணிக்கு வலுச் சேர்க்கும் என்பது பேச்சியம்மா அருள்வாக்கு. கார்த்திக் பவுலிங் கலக்குகிறார். அதனால் மோடியின் அருள் இவர்கள் பக்கமே. மற்றபடி மொத்த பெட்டிங் தொகை எந்தப்பக்கம் அதிகமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து முடிவு அமையும் எனக் கூறப்படுகிறது.

கங்குலியை மீறி நைட்ரைடர்ஸ் அணி எப்படி ஜெயிக்கப்போகிறது என்பதைக் காண மக்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

..
..

வெள்ளி, 19 மார்ச், 2010

ஐபிஎல் கடையடைப்பு: கங்குலி ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்த வலைப்பூவை எழுதுவதில் உதவியாக இருப்பது காஜா பையன்தான். முன்பொரு காலத்தில் முக்குத் தையல் கடையில் காஜா போடும் பையனாக இருந்த அனுபவத்தைக் கொண்டுதான் அவனை வேலைக்குச் சேர்த்தோம். வெட்டுவது, ஒட்டுவது, திரட்டிகளில் இணைப்பது போன்ற வேலைகளெல்லாம் அவனது கைவண்ணம்தான்.

ஐபிஎல் போட்டிகளைப் பற்றித் தாறுமாறாக எழுதுவதை தொடக்கத்திலிருந்தே அவன் எதிர்த்து வந்தான். தப்புத் தப்பாக கணிப்பெழுதும் உங்களுடன் வேலைக்கு இருப்பதை விட மீண்டும் காஜா போடுவதற்கே போய்விடலாம் என்றும் அடிக்கடிக் கூறிவந்தான்.

இப்படியொரு சூழலில் குலசாமி கோயிலுக்குச் செல்வதாகக் கூறி ரெண்டு நாள் விடுப்பில் அவன் சென்றிருக்கிறான். அவன் செய்த வேலைகளைச் செய்யுமளவுக்குத் திறமை பெற்றோர் வேறு யாரும் இல்லை என்பதால் வேறு வழியில்லாமல் இந்த வலைப்பூவை குறைந்தபட்சம் ரெண்டுநாள்கள் தற்காலிகமாக மூட வேண்டியதாகிறது.

இந்த அறிவிப்பு கங்குலி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுப்பதாகத் தெரிகிறது. அவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை யாரும் தடுக்க வேண்டாம். ஐயோ பாவம், வேறு எதற்குத்தான் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதற்கு அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கப் போகிறது?

இந்தக் கடை மூடியிருக்கும் காலத்தில் தயவு செய்து யாரும் எதிரணியைச் சேர்ந்த முகிலனின் வலைப்பூவுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மீறிச் செல்வேன் என்று அடம்பிடித்து கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளுக்கு கம்பெனி எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது. அந்த ஆபத்தான வலைப்பதிவு:

http://cricketpithatralkal.blogspot.com/

..

.

ஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது டெக்கான்!

அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த குடுகுடுப்பை நேற்றுத்தான் டிஸ்சார்ஜ் ஆனார். நர்சுகளுடனான அவரது வாய்க்காத் தகராறுகளைத் தீர்த்து வைத்து, பில் வருவதற்குள் பின்பக்கச் சுவர் ஏறித் தவ்வி ஓடி வருவதற்குள் பெரும் பாடாவிட்டது.  வந்ததும் வராததுமாக இன்றைக்கு ஐபிஎல் போட்டிகளை நான்தான் கணிப்பேன் என்று கூறினார். அவருக்காக ஜக்கமாவுக்கு லைன் போட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று.

டெக்கான், பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று கட்டாக்கில் நடக்கிறது. பெங்களூருக்கு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 203 ரன்கள் எடுத்ததை நினைவி்ல் கொள்ள வேண்டும். இதுவரை பந்தா மட்டுமே காட்டிவரும் யுவராஜ் சிங், இந்தப் போட்டியிலும் தொடர்ந்து பந்தா காட்டுவார். ரவி போபரா, பிஸ்லா ஜோடி இன்னிக்கு ஆடாவிட்டால் கஷ்டம்தான்.

டெக்கான் அணி பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் ஸ்ட்ராங். கில்கிறிஸ்ட் மட்டுமே அனைவரையும் துவைப்பார். அவர் சீக்கிரமே அவுட் ஆனால் அணி படுத்துவிடும். ஆனால், ஆவிகளைப் பிடித்து உடுக்கை அடித்து விசாரித்ததில் அப்படி எதவும் நடக்காது எனக் கூறியுள்ளன. அதனால் இன்றைய வெற்றி டெக்கான் அணிக்கே.

உடுக்கையில் வார் பிடிக்கும் அளவுக்குக் கூட குடுகுடுப்பையின் உடல் நலம் இன்னும் தேறவில்லை. இந்தக் கணிப்பு எப்படியிருக்கும் எனத் தெரியவில்லை. எதற்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒரு மனுப் போட்டுவிடுவது நல்லது.

..

..

வியாழன், 18 மார்ச், 2010

ஐபிஎல் புலி ஜோசியம்: பச்சைத் தமிழன் தினேஷுக்கு வெற்றி!

பல வகையிலும் ஐபிஎல் போட்டிகளின் முடிவுகளைச் சரியாகக் கணித்துக் கூறியதால், சிங்கப்பூர், பர்மா,மலேசியா, தாய்லாந்து வாழ் தமிழர்கள் மத்தியில் நமது புகழ் எக்கச்சக்கமாகப் பரவியிருக்கிறது. இந்தப் புகழை செவ்வாய், புதன், நிலா உள்ளிட்ட வெவ்வேறு கிரகங்களுக்கும் கொண்டு செல்வது குறித்து வலுவான உத்தியை வகுத்திருக்கிறோம். அதன்படி, வண்டலூர் பகுதியில் புலி ஜோசியம் பார்க்கப்படுவதாகத் தகவல் அறிந்து நமது கணிப்புக் கோரிக்கையை ஃபேக்ஸ் மூலம் அங்கு அனுப்பி வைத்தோம்.

இன்றைய முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. ஐயோ பாவம், றெண்டு அணி கேப்டன்களும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கிறார்கள். டெல்லி அணிக்கு நியாயப்படி சேவக்தான் கேப்டனாக இருக்க வேண்டும். ஆனால், கம்பீர் கேப்டனாக இருக்கிறார். இப்போது அவரும் போய்விட்டார். இப்போதாவது சேவக் கேப்டனாக வேண்டும். ஆனால் அப்படி நடக்காது என்கிறார்கள். சேவக் தனது முடிவில் உறுதியாக இருந்தால், பச்சைத் தமிழன் தினேஷ் கார்த்திக்குக்கு கேப்டன் வாய்ப்பு கிடைக்கும்.

மும்பைக்கு எதிரான போட்டியின்போது அவர்தான் கேப்டனாக இருந்தார். அப்போது அணி என்ன பாடுபட்டது என்பது தேவையில்லாமல் நினைவுக்கு வருகிறது. மற்றபடி பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் இன்னமும் அணி ஸ்ட்ராங்தான். தில்ஷன் பட்டையைக் கெளப்புவார் என எதிர்பார்க்கலாம்.

சென்னை அணியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஹேடன்தான் துருப்புச் சீட்டு என்றார்கள். அவர் இன்னமும் தூக்கத்திலிருந்தே விழிக்கவில்லை போலத் தெரிகிறது. இந்த லட்சணத்தில் மங்கூஸ் பேட்டை எடுத்துவந்து அவுட் ஆனால், ரசிகர்கள் எகனமொகனையாகத் திட்டுவார்கள். கோல்கத்தா அணியுடன் தோற்க வேண்டிய ஆட்டத்தை ஜெயித்தார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. தோனி போய் ரெய்னா வந்திருப்பது சென்னைக்குப் பெரிய சோகம்.

இந்த அறிகுறிகளின்படி பார்த்தால் டெல்லி அணிதான் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என புலி ஜோசியம் சொல்கிறது. புலி சொன்னால் தப்பாது.

ஐபிஎல் வெட்டுகுத்து: லீ தரப்பின் ஏடாகூடக் கருத்து

அரசு பெரிதா, இல்லை கிரிக்கெட் பெரிதா என்று கேட்டால் நம் மக்களில் பாதிப்பேர் கிரிக்கெட்தான் பெரிது என்பார்கள். அப்படித்தான் விதைக்கப்பட்டிருக்கிறது. அரசை ஆட்டுவிக்கும் அளவுக்கு கிரிக்கெட் வளர்ந்துவிட்டது என்பதையும் மறுக்க முடியாது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி திட்டமிடப்பட்டிருந்த நாள்களில், தேர்தலும் நடந்ததால் பாதுகாப்புச் சிக்கல் கருதி போட்டிகளைத் தள்ளி வைக்கும்படி நம் உள்துறை அமைச்சர் கேட்டார். கவனிக்க வேண்டும் உத்தரவிடவில்லை. கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையப் பரிசீலித்த ஐபிஎல் தரப்பு, நாங்களே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறோம். நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை எனச் சொன்னது.  

அரசு தரப்பில் பலமுறை கெஞ்சியபிறகே விவகாரம் முடிவுக்கு வந்தது. அதுவும் சில வாரங்களிலேயே தென்னாப்பிரிக்காவில் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பணம் பாதாளம் வரை பாய்ந்தது.

இதேபோல மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, வீட்டுக்குப் போன இங்கிலாந்து அணியைக் கழுத்தைப் பிடித்து இழுத்து வந்தார்கள். அந்த அளவுக்கு செல்வாக்குச் செலுத்த முடிந்தது. நூற்றாண்டுக் கணக்கில் வெள்ளையர்களுக்கு அடிமையாகக் கிடந்த நமக்கு இந்த அதிகாரம் தேவைதான்.

சரி தலைப்பில் சொல்லப்பட்ட விஷயத்துக்கு வருவோம். கிங்ஸ் லெவன் அணியில் ஆடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீக்கு முழங்கையில் பிரச்னை. மிகச்சிறந்த பவுலர். சினேகமாகப் பழகுபவர் என்றும் கூறுவார்கள். முழங்கைப் பிரச்னைக்கு ஏதோ ஊசி போட்டால்தான் சரியாகும் என்றார்கள்.  துபாய் போகிறார் என்றார்கள். இப்போ ஆஸ்திரேலியா போவதாகச் சொல்கிறார்கள். உண்மையிலேயே அவர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கிரிக்கெட் வாரிய அனுமதிக்காகத்தான் என்று இப்போது கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் ஏஜ் பத்திரிகையில் வெளியாகியிருக்கும் செய்தியில் "பாதுகாப்பு காரணங்களுக்காகவே பிரெட் லீ ஆஸ்திரேலியாவுக்கு செல்வதாக" லீயின் மேலாளர் உறுதி செய்திருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி கிடைக்கும்வரை சண்டிகரில் இருப்பது பாதுகாப்பானது இல்லையென்பதால் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதாக அந்தச் செய்தியி்ல் கூறப்பட்டிருக்கிறது.

போகிற போக்கில் இந்தியாவி்ல் பாதுகாப்பு இல்லை என்பது போலக் கொளுத்திப் போடப்படும் விஷயம்தான் இது. இந்த ஏடாகூடச் செய்தி பற்றி பிரெட் லீயிடம் உரிய விளக்கம் கேட்காவிட்டால் அரசை விட தனியாருக்குச் சொந்தமான பிசிசிஐ உயர்ந்தது என்றுதானே அர்த்தமாகிறது?
..
..
.



ஐபிஎல் பஞ்சாயத்து: கத்ரீனா அணிக்கு வெற்றிவாய்ப்பு!

நெனச்ச மாதிரியே வாஸ்து மாமேதைக்கு கார்டன் பிரௌனிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது. டவுனிங் தெரு வீட்டில் நாய்க்குட்டியை எந்த இடத்தில் கட்டுவது என்பது தொடர்பாக இருவரும் ஆலோசிக்க இருப்பதாகத் தெரிகிறது. அந்த ஆலோசனை முடிந்ததும் ரஷியாவுக்குப் பறந்து மெத்வதேவின் காரில் ஸ்டெப்னியை எங்கு பொருத்துவது என்பது குறித்த மேல்நிலை அவசரக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்.
அதுவரை ஐபிஎல் போட்டிகளை கணித்துத் தருவதற்கு வேறு யாரையேனும் நியமித்துக் கொள்ளும்படி மின்னஞ்சல் வழியாக அந்த மாமேதை கேட்டுக் கொண்டார். இதன் பிறகுதான் ஒரு பயங்கரமான முடிவு எடுக்கப்பட்டது. மோடியிடமே போன் செய்து கேட்டுவிடுவதென்று

இன்னிக்கு ராயல்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் பெங்களூரில் நடக்கும் ஆட்டத்தில் யார் ஜெயிப்பாங்கன்னு அவர்கிட்ட கேட்டபோது, அவர் சொன்ன தகவல் கீழே அப்படியே தரப்பட்டுள்ளது. ஒரு எழுத்துக்கூட மாறாமல்.
"ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னும் அவங்க அக்கவுண்ட் ஆரம்பிக்கலை. கிட்டத்தட்ட 2008ம் இதே மாதிரி தான் ஆரம்பிச்சாங்க. கடைசியில அவங்க தான் சேம்பியன். இந்த தடவை அப்பிடி முடியாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா அவங்க டீமோட சிறந்த வீரர்கள் எல்லாம் காயப்பட்டு இருக்காங்க. ஸ்மித், பதான், மஸ்கரானஸ் இப்பிடி. ஷான் டெயிட்டும் எதிர் பாத்த அளவுக்கு சோபிக்கலை. வார்னேவுக்கு எதாவது மிராக்கிள் நடந்தாத்தான் உண்டு.

பெங்களூரு போன போட்டில ஜெயிச்ச உற்சாகத்துல இருப்பாங்க. அதோட இது அவங்க சொந்த மைதானம்ங்கிறதால ரசிகர்கள் ஆதரவு இருக்கும். அதோட காலிஸ் மாதிரி ஆளுங்க இருக்கிறதால தைரியமா இருப்பாங்க. வெற்றி வரிசையை மாத்துவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. 

இந்தப் போட்டியில பெங்களூரு ஜெயிக்கத்தான் வாய்ப்பு நிறைய இருக்கு"

மேற்படி தகவல், போனில் மோடி கூறியதுதான். இந்தக் கருத்துக்கு வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஆனால், அமெரிக்காவாழ் முகிலன் என்பவர் இதைத் தம்முடைய கருத்து என அவருடைய பிளாக்கில் எழுதியிருப்பதாக அறிகிறோம். இது சுத்துப்பட்டி 18 கிராமங்களின் பொது நன்மைக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது. அதனால், இது தொடர்பாக சின்னக்கவுண்டரை அணுகி பஞ்சாயத்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வெற்றி நம் பக்கந்தான்.


...

..

புதன், 17 மார்ச், 2010

ஐபிஎல்: உள்ளே வெளியே


மும்பைதான் வெற்றிபெறும் என்று கணித்துக் கூறிய பென்டகன் புகழ் வாஸ்து நிபுணருக்கு தொலைபேசி, இ-மெயில், எஸ்எம்எஸ் மூலமாக பாராட்டுச் செய்திகளை அனுப்பிய அனைவருக்கும் நன்றி. இந்தப் பாராட்டுச் செய்திகளை பிரிட்டனின் டவுனிங் தெருவுக்கு பார்வார்ட் செய்திருக்கிறார் அந்த மாமேதை. இதன் மூலம் கார்டன் பிரௌனிடமிருந்து அவருக்கு அடுத்த அழைப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐபிஎல் போட்டிகளில் பலருக்கு வாஸ்து சரியில்லை போலிருக்கிறது. ஆமதாபாத்தில் டேர் டெவில்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் சேவக் அடித்த பந்தைப் பிடிக்கப்போய் ஸ்மித்தின் விரல் ஒடிந்துவிட்டது. இந்த ஆண்டு இனி வரும் போட்டிகளில் அவர் ஆடுவது சந்தேகம்.

அதேபோல் கோல்கத்தா அணியுடனான போட்டியில் பாண்ட் வீசிய பந்து தோனியின் வலது முழங்கையைப் பதம் பார்த்தது. ஒருகையைப் பயன்படுத்தி அவர் தொடர்ந்து ஆடினாலும், 10 நாள் வீட்டிலிருக்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது. தம்பி ரெய்னாவுக்கு கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

என்னைக் கேட்டால் தமிழன் என்ற முறையில் பாலாஜி, அஸ்வின், பத்ரிநாத் போன்றவர்களில் யாருக்கேனும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதைச் சொன்னால் அவர்களுக்கெல்லாம் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் போதவில்லை என்கிறார்கள். அப்படியெனில் இலங்கைத் தமிழன் என்ற முறையில் முரளிதரனையாவது கேப்டனாக்கியிருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை. சென்னை அணியில் தமிழினம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய போட்டியில் கடுமையான தசைப்பிடிப்பு காரணமாக முதல் ஓவரிலேயே கௌதம் கம்பீர் வெளியேறிவிட்டார். அவர் இல்லாமல் 9 விக்கெட்டுகளைக் கொண்டே நேற்று டெல்லி அணி ஆடியது. டெல்லி அணிக்கு தினேஷ் கார்த்திக் என்ற பச்சைத் தமிழன் கேப்டனாக இருந்தார். உலகத் தமிழர் அனைவருக்கும் பெருமே சேர்த்த அவருக்கு நமது பாராட்டுக்கள். கேப்டன் பதவி கிடைத்ததாலோ என்னவோ, கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட் என எல்லாவற்றையும் அவர் கோட்டை விட்டார். வரும் போட்டிகளிலும் கம்பீர் ஆடுவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சர்வேதேசப் போட்டிகள் முடிந்துவிட்டதால் பொலார்டும் பிரேவோவும் ஏற்கெனவே மும்பை அணியின் இணைந்து முதல் போட்டியில் ஆடிவிட்டார்கள்.

அதேபோல கோல்கத்தா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கெயில் 20-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் காயத்திலிருந்து குணமடைந்திருப்பதால், கிங்ஸ் லெவன் அணியின் அடுத்த போட்டியில் அவர் ஆடக்கூடும்.


இன்றைய நிலவரம்

உள்ளே

பிரேவோ - மும்பை இந்தியன்ஸ
பொலார்டு - மும்பை இந்தியன்ஸ
கெயில் - நைட் ரைடர்ஸ்
ஷான் மார்ஷ் -  கிங்ஸ் லெவன்


வெளியே


தோனி  -சென்னை சூப்பர் கிங்ஸ்
ஸ்மித் - ராஜஸ்தான் ராயல்ஸ்
கம்பீர் - டேர் டெவில்ஸ்



சொதப்பல் ஆட்டம் காரணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களின் பட்டியில் இதில் சேர்க்கப்படவில்லை. கோல்கத்தா அணியில் அப்படியொருவர் இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

...

..

ஐபிஎல் வாஸ்து: மும்பைக்கு வாய்ப்பிருக்கு!

குடுகுடுப்பை, ஐசியூவில் இருக்கிறார். புறா, வன்முறைக்கு இரையாகிவிட்டது. இனிவரும் ஐபிஎல் ஆட்டங்களைக் கணிப்பதற்கு வேறு யாரை அணுகலாம் என்ற யோசனையில் இருந்தபோது, அமெரிக்காவிலிருந்து வாஸ்து நிபுணர் ஒருவர் பேசினார். அமெரிக்க ராணுவத்தின் பென்டகன் கட்டடம் இவரது வாஸ்து யோசனைப்படிதான் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

நேற்று போன் செய்ததற்கு சற்று முன்புகூட வெள்ளை மாளிகையில் குப்பைத் தொட்டிகளை எங்கெங்கே வைக்க வேண்டும் என்று ஒபாமாவுக்கு யோசனை சொன்னதாக என்னிடம் கூறினார். எஃப்பிஐயின் கண்காணிப்பில் இவர் இருப்பதால் பெயரை வெளியிடக்கூடாது என்கிற கண்டிஷனுடன்தான் அவர் பேசத் தொடங்கினார்.

இன்றைய ஐபிஎல் போட்டி டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையேயானது. பொதுவாகவே இந்தியன்ஸ் என்ற பெயரைக் கொண்ட அணியைத்தான் அனைவரும் நேசிக்க வேண்டும். அதுதான் தேசப்பற்று. அதற்காக தேசத்தின் தலைநகரான டெல்லியையும் புறக்கணிக்க முடியாது. இப்படியொரு இக்கட்டான சூழ்நிலைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், வாஸ்து பிரகாரம் பெரோஷா கோட்லா பிட்ச் தடை விவகாரம் முற்றிலும் உள்ளூர் அணிக்குச் சாதகமானதல்ல.

இது தவிர பிரோவோவும், பொலார்டும் பிளைட் பிடித்து வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அவர்கள் இன்றைக்கு ஆடும்பட்சத்தில் மும்பை அணி பட்டையைக் கிளப்பும். ஜெயசூர்யவும் சச்சினும் ஆட வேண்டியிருக்கிறது. மலிங்காவும் மிரட்டுகிறார்.

டெல்லி அணியில், கம்பீரும் சேவக்கும் ஏற்கெனவே நன்றாக ஆடிவிட்டனர். இது தில்ஷனுடைய முறை.  பந்துவீச்சில் நேன்னஸ் மிரட்டுவார் என்பது தெரிந்த விஷயம்.

ஆனாலும் கேலரி அமைப்பு, பிட்சின் திசை, ஸ்கோர் போர்டு அமைக்கப்பட்டிருக்கும் உயரம் போன்றவற்றை வைத்துப் பார்க்கும்போது வாஸ்து முழுவதும் மும்பை அணிக்கே சாதகமாக உள்ளது என்று தெரிகிறது. எது எப்படியிருந்தாலும் நேன்னஸ்-ஜெயசூர்ய, நேன்னஸ்-தெண்டுர்கர், நேன்னஸ்-பொலார்டு போட்டியைப் பார்க்கலாம். அதேபோல் தில்ஷனின் அதிரடியையும் எதிர்பார்க்கலாம்.

மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தும் வாஸ்து நிபுணர் சொல்லக் கேட்டு எழுதப்பட்டது. கணிப்புத் தவறினால் அது வாஸ்துவையே சாரும். முன்னோரைத்தான் கேட்க வேண்டும். அதைவிடுத்து அந்த பென்டகன் புகழ் நிபுணரையோ, அல்லது இதை எழுதிய மாபெரும் கட்டுரையாளரையோ தேடுவது ஜனநாயக விரோதமாகும்....

.

..

பெரோஷா கோட்லா: என்ன உள்குத்து?

இன்றைய ஐபிஎல் ஆட்டம் நடைபெறும் பெரோஷா கோட்லா மைதானம் சப்பையானது. ஏற்கெனவே விவகாரங்களுக்கு உள்ளானது. பிசிசிஐக்கும் அருண் ஜேட்லிக்கும் இடையே நடந்து வரும் அரசியல் பனிப்போருக்கு இந்த மைதானம் ஏற்கெனவே பலியாகியிருக்கிறது. இதற்கான அடிப்படையைத் ஊகித்துப் புரிந்து கொள்ளவும்.

இந்தச் சண்டையின் காரணமாகத்தான், கடந்த ஆண்டு இலங்கையுடனான போட்டியின்போது, பந்து எகிறி வருவதாகக்கூறி அந்த மைதானத்துக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. உண்மையில் பந்து எகிறித்தான் வந்தது என்றாலும் அதன் பின்னணியில் உண்மையிலேயே அரசியல் சதி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தத் தடை இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், களம் "தயாராகி" விட்டதாகக் கூறி இன்னிக்கு மேட்ச் ஆடப் போகிறார்கள். என்ன தயாரானதோ தெரியவில்லை. ஐபிஎல்லின் பலத்தைக் கவனியுங்கள்!
..
..
.

செவ்வாய், 16 மார்ச், 2010

கங்குலி ரசிகர்களுக்கு அனுதாபம்!


புறா ஜோசியம் ஏன் பலிக்கவில்லை என்பது பற்றி ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற ஜோசியர் தலைமையில் 4 நபர் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. 10 நாள்களுக்குள் அந்தக்குழு, கம்பெனியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்க முடியவில்லையெனில் கால நீட்டிப்பு வழங்கப்படும்.

இதற்கிடையே, பலன் சொல்லி வந்த புறாவை மர்மக்கும்பல் ஒன்று நேற்றிரவு கடாயி்ல் போட்டுக் காய்ச்சிவிட்டது. ஒப்பந்தங்கள் மீறப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மங்கூஸ் பேட் எடுத்து வருவார் என்ற எதிர்ப்பார்பில் ஹேடனை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள் நேற்று ஏமாற்றப்பட்டனர். எந்த பேட்டை வைத்து ஆடினாலும் சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்பது போன்ற வசனங்களை கோல்கத்தா மைதானத்தில் நேற்று கேட்க முடிந்தது.


நேற்று ஜோசியத்தைக் கேட்டதும் கேகேஆர் ரசிகர்கள் பலர் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு பல்சரில் பறந்து கொண்டிருந்தனர். ஆட்டம் முடியும் நேரத்தில், சாலையோரம் இருந்த போதி மரத்தில் பல்சர் மோதியதில் அவர்களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது.நேற்று நள்ளிரவில் அவர்களைப் போன்ற நூற்றுக் கணக்கானோர் டாஸ்மாக்கில் மட்டையாகிக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது.

கங்குலியைப் பற்றிக் எதுவும் பேசுவதற்கில்லை. பேசாமல் அவர் ஆடாத கேப்டனாக இருக்கலாம். இன்னும் கெயில், மெக்குல்லம் போன்றவர்கள் வரும்போது இவர் வழிவிட்டுவிடலாம் என கேகேஆர் ரசிகர் மன்றங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றன.

ஷான் பாண்ட் நன்றாகத்தான் பவுலிங் போட்டுக் கொண்டிருந்தார். அப்புறம் கங்குலி வந்து யோசனை சொன்னதும், எல்லாம் டர்.... டர்... ஆகிவிட்டது. இன்னமும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் கங்குலி, மைதானத்தில் கோபமாக கத்திக் கொண்டு திரிவதை பார்க்கச் சகிக்கவில்லை. அவரிடம் தொழில் கற்றுக்கொண்ட தோனி, எவ்வளவு கெத்தாக இருக்கிறார் என்பதை கவனிக்கவில்லை போலும்.

...

..

.

ஐபிஎல் ஜோசியம்: தோற்பது தோனி!

பெங்களூர் மேட்சில் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றதிலிருந்து புறா ஜோஸ்யம் எவ்வளவு அறிவியல்பூர்வமானது என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். இதைக் கணித்துச் சொல்வதற்காக அந்தப் புறா எத்தனை விஷயங்களை நுணுக்கமாக ஆராய்கிறது என்பது பக்கத்திலிருந்து பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும்.

தாதாவின் அணியும் தோனியின் அணியும் இப்போது தாதாவின் இடத்தில் மோதுகின்றன. முக்கியமான ஆட்டக்காரர்கள் யாரும் இல்லாமலேயே தாதா அணி ஜெயிப்பது எப்படி என்பது அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். இஷாந்த் சர்மாவுடன் ஷேன் பாண்ட் இணைவார் எனத் தெரிகிறது.  அப்படியானால் அணியின் பவுலிங் திறன் கூடும். இப்போதும் அதிர்ஷ்டம் அந்தப்பக்கம்தான் இருக்கிறது. மற்றபடி கங்குலி வழக்கம்போல சொதப்புவார். முடிந்தால் டக்அவுட் ஆவார்.

தோனி டீம் பந்து வீசத் தெரிந்தவர்களுக்கு வலைவீசிக் கொண்டிருக்கிறது. தியாகிக்கு வேப்பிலை அடிக்கப்படுகிறது. ஹேடனும் அவரது மங்கூஸ் பேட்டும் எந்த எக்கு எக்கினாலும் இன்னிக்கு தாதா டீமை ஜெயிக்க முடியாது.

.

.
.

ஐபிஎல் ஜோசியம்: பாவம் கிங்ஸ் லெவன்!

குடுகுடுப்பை பெரும் மனக் கஷ்டத்தில் இருக்கிறார். என்ன சொன்னாலும் அவருக்கு எஸ்எம்எஸ் விவகாரமே அவரது உச்சந் தலையில கிர்ருங்குது. எப்படியும் அவருக்கு ஒருவாரம் லீவ் தேவைப்படும். அதனாலே புறா ஜோஸ்யம் பாக்கற ஒருத்தர் மூலமா நவீன முறையில் ஐபிஎல் ஆட்டங்களைக் கணித்துச் சொல்வதற்கு பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது.

புறாக் கணிப்பு தவறாகி்ப் போனால்... மகா ஜனங்கள் தங்களது கோபத்தை புறாமீதுதான் காட்ட வேண்டும். முன்பே செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தப்படி லெக்பீஸ் கம்பெனிக்குச் சொந்தம்.

இன்னிக்கு ஐபிஎல் போட்டியில ரெண்டு தோத்த டீம் ஆடுறாங்க...  அதான் கிங்ஸ் லெவன், ராயல் சேலஞ்சர்ஸ்... மல்லையா டீம்ல காலிஸ் ஃபார்ம்ல இருக்கார். டிராவிட், கும்ளேவெல்லாம் கணிக்க முடியாது... இருந்தாலும் சவுத்தாப்பிரிக்கா சப்போர்ட் முழுமையா இருக்கு. பெங்களூர்ல மேட்ச் நடக்கறதாலயும். கிங்ஸ் லெவன் டீம்ல யாரு பார்ம்ல இருக்காங்கன்னு தெரியலங்கறதாலயும் மல்லையாவுக்குத்தான் இன்னிக்கு மாலை...

ஏற்கெனவே நடந்த 6 போட்டிகளில் 5 போட்டிகள் நாம் சொல்லிய முடிவைத்தான் எட்டின. இது குடுகுடுப்பைக்குக் கிடைத்த வரம். அவர் விரைவில் பயம் தெளிந்து வர வேண்டும் எனப் பிரார்த்திக்கவும்.

அதேபோல, விளம்பரம் போட ஓவர் முடியும்வரை ஏன் காத்திருக்க வேண்டும் என ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே ஐடியா கொடுத்ததற்கு மோடி தரப்பில் நமக்குப் பாராட்டுக் கிடைத்தது. இப்போது ஒவ்வொரு பந்துக்கும் இடையே விளம்பரம் போடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதைச் சுட்டிக்காட்டி மெயில் அனுப்பிய, பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி...

.............

...

திங்கள், 15 மார்ச், 2010

சச்சினிடம் பேட்டி: பிரபல பதிவர் கிருபா நந்தினிக்கு வாய்ப்பு!

தோனியின் தமிழக ரசிகர் மன்றத் தலைவரிடம் இருந்து நேற்றிரவு ஓர் அவசர தொலைபேசி அழைப்பு.

"பிளாக்கர்ஸ்க்கு பேட்டி தரலாம்னு சச்சின் நினைக்கிறாரு. பிரபல பதிவர் யார செலக்ட் பண்ணலாம்"

"இப்போதைக்கு பிரபல பதிவர்னா அது நாந்தான். நல்லா பேட்டியெடுப்பேன். படமெல்லாம் நல்லா போடுவேன்"

"கூல் டவுன்.. கூல் டவுன்... நான் சீரியஸா கேட்கறேன்"

"அப்ப நான் சொன்னது ஜோக்கா... சரி விடுங்க...நம்ம ஜெயமோகன், சாரு, மானுஷ்யபுத்திரன், ஞாநி இவங்கள்ல யாராவது...."

"ப்ச்...."

"நம்ம கேபிள் சங்கர் நல்லா எழுதுவாரு"

"எழுதறாரு... ஆனா அவரு ரொம்ப பிஸியா இருப்பாரு போல... விட்டறலாம்"

"கார்க்கி"

"இங்க புட்டிக் கதை எழுதறதுக்கா ஆள் கேக்கறோம்... தவிர அவரு தாதாவோட ஆள்"

"பரிசல் சீரியஸா எழுதுவாரு..."

"அது வேண்டாம்..."

"கிரிக்கெட்  பத்தி நர்சிம் நல்லா எழுதுவார்"

"அதெல்லாம் தேவையில்ல..."

"சந்தன முல்லைய கேட்கலாமே...?"

"ம்... மைன்ட்ல வெப்போம்... வேற"

"நசரேயன்...?"

"என்ன டாஸ்மாக்ல நிக்கறீங்களா? இதென்ன சீயர் லீடர்ஸ் பேட்டியா? நெக்ஸ்ட்"

"விக்னேஷ்வரிய கேட்கலாமா?"

"எதுக்கு...?  உங்க சர்ட் கலர் சரியில்லை... பேன்ட் டிசைன் மாத்தனும்னு  சச்சின்கிட்ட கேட்கவா?"

"சரி கலகலப்பிரியா?"

"புரியறமாதிரி ஏதாவது சொல்லுங்க.."

"இப்பிடியே ரிஜக்ட் பண்ணிக்கிட்டிருந்தா நான் என்னதான் பண்றது?"

"கூல் கூல்... நல்லா யோசிச்சு சொல்லுங்க... உங்களால முடியும்"

"சரி எனக்கு ஒரு சந்தேகம்... தோனி ரசிகர் மன்றத் தலைவர்தானே நீங்க... எதுக்கு சச்சின பேட்டியெடுக்கணும்?"

"சும்மாதான்... எல்லாம் நல்லதுக்குத்தான்.... சரி வேற பதிவர் சொல்லுங்க..."

"செந்தழல் ரவி...?"

"ஆங்... கிட்டதட்ட வந்திட்டீங்கன்னு நினைக்கிறேன்..."

"அப்ப கிருபா நந்தினிய கேட்டா சரியா இருக்கும்னு..."

"ஆ... சூப்பர்... அவங்களேதான் இப்போதைக்கு அவங்கதான் பிரபல பதிவர்... அவங்ககிட்ட கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்..."

"10 பின்னூட்டம்.... 20 வோட்டு செலவாகும் பரவால்லியா...தோனி, கங்குலி, டிராவிட் எல்லாம் வந்து கெமென்ட் போடனும்..."

"ஏங்க அவங்கிட்ட கேக்கறதுக்கு முன்னாடி நீங்களே கண்டிஷன் போடுறீங்க..."


"இந்த உலகத்தப் பத்தி எனக்கு கொஞ்சம் தெரியுங்க.."

"சரி... சரி... சச்சினை வந்து அவங்க பிளாக்ல அழ வைக்கிறோம்... போதுமா?"

"உங்க திட்டம் புரிஞ்சிடுச்சி சார்..."

"புரிஞ்சிடுச்சா.... மனசுல வெச்சுக்கோங்க... கிருபா நந்தினிகிட்ட கேட்டுச் சொல்லுங்க..."

"இதோ போன் பண்றேன்...."



(கிருபா நந்தினியின்  கண்டிஷன்கள்... அடுத்த பதிவில்)

....
..