செவ்வாய், 23 மார்ச், 2010

ஐபிஎல் காவிரிச் சண்டை: கன்னடமா? தமிழகமா?


தமிழகத்துக்கும் கன்னடத்துக்கும் ஆண்டுதோறும் ஒருமுறையாவது வீராவேசமான காவிரிச் சண்டை நடக்கும். மூத்த அரசியல்வாதிகள் முதல் குள்ளமணிவரை அனைவரும் வீரம் காட்டுவார்கள். நடிகைகள் சிலர் அந்தப் பக்கமும் இந்தப்பக்கமும் உண்ணாவிரதம் இருப்பார்கள். நெய்வேலிக்குப் போய், கன்னடத்துக்கு கரண்ட் போகும் சுவிட்சை ஆஃப் செய்யப் போவதாக போட்டி அணியினர் சொல்வார்கள். எங்கு ஷாக் அடிக்குமோ தெரியாது, கருப்புச் சட்டையுடன் சாமி தரிசனம் முடித்துவிட்டு சென்னைக்கு வெற்றிச் சிரிப்புடன் திரும்புவார்கள்.

சூப்பர் ஸ்டாருக்கு ரெண்டு பாஷையும் அத்துப்படி. என்ன பேசினாலும் அப்பாவிப் பசங்க கேட்டுக்கிட்டு போவாங்க. மிக அதிகமாக ஆவேசம் தமிழகத்தில் இருந்துதான் கிளம்பும். சென்னையில் கன்னடத்துக் கடைகளை உடைப்பார்கள். எழுத்துக்களை தார்பூசி அழிப்பார்கள். சில கன்னடத்துக்காரங்ககூட தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் இருக்கென்று பேசுவார்கள். சென்னை உண்ணாவிரததத்தை சன் டி.வி.யும், பெங்களூர் உண்ணாவிரதத்தை உதயா டி.வி.யும் நேரடியாக ஒளிபரப்பும். அவர்கள் நடுநிலையாக நடந்து கொள்வதாக ஊர் மெச்சிக் கொள்ளும்.

முதலில் 10 டிஎம்சி என்பார்கள். பிறகு 5 டிஎம்சி என்பார்கள். கடைசியில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் விடுவோம் என்பார்கள். வெற்றிபெற்றுவிட்டதாக தமிழக அப்பாவிகள் எக்காளமிடுவார்கள். ஆனால், கன்னடத்துக்காரர்கள் சொல் பிறழாதவர்கள். சொன்னபடி தண்ணீர் விடுவார்கள். எப்போது? தமிழகம் தண்ணீரில் மிதக்குமே அநதக் காலத்தில். அதாவது அக்டோபர் நவம்பரில். இருக்கிற வெள்ளம் போதாதென்று கன்னடத் தண்ணி வந்து கூவத்துக் குடிசைகளை அடித்துச் செல்லும். இப்படித்தான் தமிழ்நாடு ஆண்டுதோறும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது.

சரி போகட்டும். இன்னிக்கு ஐபிஎல் போட்டிக்கு வருவோம். கடைசியாகக் குடுகுடுப்பை சொன்ன ஜக்கம்மா அருள்வாக்கு பலித்துவிட்டது என்பதால், இன்று நடக்கும் சென்னை-பெங்களூர் போட்டியையும் அவர் கணிப்புக்கே விட்டுவிட்டோம்.

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் இதுவரை அவுட் ஆக்கவே முடியாத ஜாம்பவான் காலிஸ் பெங்களூரின் பொக்கிஷமாக இருக்கிறார். கன்சிஸ்டன்சி என்று சொல்வார்களே, இப்போதைக்கு, சச்சின், தோனி, காலிஸ் மூவரிடம் மட்டும்தான் அதைப் பார்க்க முடிகிறது. இந்தக் கட்டுரையை எழுதும் மாபெரும் கட்டுரையாளருக்கும் இது பொருந்தும்.

காலிஸ் தொடர்ந்து அப்படி ஆடுவார் என எதிர்பார்க்கலாம். கும்ளே சுழல் இருக்கிறது. பிரவீன் பரத்துகிறார். பான்டே, ராகுல் போன்றவர்களும் அடிப்பார்கள். ஆக, இது வலுவான அணி.

தோனி இல்லாதது சென்னைக்குப் பெரிய குறை. 137 ரன்களை எடுக்க முடியாமல் உருண்டு புரண்ட அந்த அணி இன்னிக்கு என்ன செய்யப் போகிறதோ. ஹேடன் கணக்கைத் தொடங்கியிருப்பது ஒரு பலம். ரெய்னா ஓகே.

குடுகுடுப்பையின் கணிப்புப்படி சென்னை அணிக்கு யாரோ செய்வினையும் வேறுசிலர் செயப்பாட்டுவினையும் வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதனால் அவர்கள் வெற்றிபெறுவது கொஞ்சம் சிரமம்தான்.

காவிரியில் தமிழகம் எப்படி வெற்றிபெறுகிறது என்பது புரிந்துவிட்டதுதானே!
..

..
.

3 கருத்துகள்:

  1. //குடுகுடுப்பையின் கணிப்புப்படி சென்னை அணிக்கு யாரோ செய்வினையும் வேறுசிலர் செயப்பாட்டுவினையும் வைத்திருப்பதாகத் தெரிகிறது//

    ROTFL

    பதிலளிநீக்கு
  2. கர்நாடகா வெள்ளத்துல தமிழ்நாடு அடிச்சிக்கிட்டு போயிடும்போல?

    பதிலளிநீக்கு