செவ்வாய், 30 மார்ச், 2010

ஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு?


இந்திய இளைஞர்கள் பலர் சோகமாகியிருக்கின்றனர். தமிழகத்தில் நேற்றிரவு டாஸ்மாக்குக்குச் சென்று பலர் இன்னும் வீடு திரும்பவில்லை. எல்லோர் கையிலும் சானியா படம் இருந்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் இளைஞர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் என்ன இளைஞர்களா இல்லை? அதென்ன எதிரி நாட்டுடன் சம்பந்தம் செய்வது? சோயிப் மாலிக் ஒழிக.

இப்படிப் பெருஞ்சோகத்தில் பலர் ஆழ்ந்திருக்க வேறு சிலர், கங்குலிக்கு வேலை தேட முற்பட்டிருக்கின்றனர். நேற்றைய ஆட்டத்தில் அவர் பேட்டை தூக்குவதற்கு பட்ட பாட்டைச் சொல்லி மாளாது. 2 மீட்டர் இறங்கி வந்து அடித்தால், எல்லா பந்தும் சிக்சருக்குப் போயிருமா என்ன? உங்க பப்பு 2010ல வேகாது அண்ணே.

எப்படியும் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கங்குலிக்கு வாய்ப்பேயில்லை என்பது தெரிந்துவிட்டது. அவருக்காக மூன்று முக்கியத் துறைகளில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. வர்ணணையாளர் பணிக்கு அவர் லாயக்கில்லை என டி.வி. நிறுவனம் ஒன்று ஏற்கெனவே ஒதுக்கிவிட்டது. அதனால் அது இப்போதைக்கு வேண்டாம். பயிற்சியாளர் பணிக்குச் சென்றால் அந்த அணியின் நிலைமை என்னவாகும் என்பதைக் கூறத் தேவையில்லை. வேண்டுமானால் எத்தியோப்பிய அணிக்கு பந்து பொறுக்கிப் போடுவது பற்றிச் சொல்லும் பயிற்சியாளராகச் செல்லலாம். அடுத்தது அரசியல். புத்ததேவுடன் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி ஏதாவது செய்யலாம்.

இத்தனையும் பிடிக்காவிட்டால், ஏற்கெனவே நம்மிடம் உள்ள காஜா போடும் வேலையை கங்குலிக்கு அளிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். அதனால் கங்குலிக்கு கவலைப்பட வேண்டாம்.

இன்னிக்கு ஐபிஎல் போட்டியில் ஆடும் அணிகள் பஞ்சாபும் மும்பையும். இதில் ஒன்று ஆனை, மற்றொன்று எறும்பு. ஒன்றுக்கு முதல் இடம் மற்றொன்றுக்கு கடைசி இடம். இருந்தாலும் கட்டங்கள் சரியாக இருக்கிறதா என்பது பற்றி நீண்டகால ஓய்வில் இருந்து திரும்பிய குடுகுடுப்பையிடம் கேட்டோம்.

ஏற்கெனவே கொடுத்த அருள்வாக்குக்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப்படவில்லை என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார். உடுக்கைக்கு புதிய வார் போடுவதற்கு ரூ.5 கொடுக்க வேண்டியதாயிற்று.

அவரது கணிப்புப்படி இந்த முறையும் மும்பை அணியே வெற்றி பெறும் எனத் தெரிகிறது. பார்ம் தப்பிப் போன யுவராஜ் சிங் தொடர்ந்து சொதப்புவார் என்பது இன்றைய நிலவரம். மற்றபடி சிங்களர்களுக்குக் கட்டம் சரியில்லை.

மும்பைக்காரர்கள் கடந்த போட்டியில் தோற்பது போலப் போய். பஜ்ஜியால் ஜெயித்தார்கள். அதனால், அவர்களுக்கு நல்ல ஆவிகள் துணையிருக்கிறது என்பது நிரூபணமாகிவிட்டது. இன்னொரு வெற்றி அவர்களுக்கு இருக்கிறது.

--------------------
ஐபிஎல் எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் சிங்கள் எதிர்ப்பாளர்கள் தயவு செய்து  முகிலனின் சிங்கள எதிர்ப்பு   இடுகையைப் படியுங்கள். 

முகிலன் கவலைப்படாதீங்க..... நல்ல காலம் பொறக்குது....

..
.
.
.

1 கருத்து: