வெள்ளி, 1 ஏப்ரல், 2011

முடிகிறது சச்சின் அத்தியாயம்!

இந்த உலகக் கோப்பை போட்டியே திட்டமிட்ட நாடகம். மோசடிகள் நிறைந்தது. பணம் குவிப்பதற்காக தேசபக்தியை விற்கிறார்கள் என பல்வேறு விமர்சனங்களை நோஐபிஎல் அதிபர் பலமுறை எழுதியிருக்கிறார். மேட்ச் ஃபிக்சிங் உள்பட பல்வேறு தருணங்களில் சச்சின் தெண்டுல்கர் துரோகம் செய்ததாகவும் பட்டியலிட்டிருக்கிறார்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தோனி தலைமையிலான அணியை நையாண்டி செய்திருக்கிறார். எல்லா இந்திய பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இந்திய அணி கோப்பையை வெல்லட்டும் என்று முதல்பக்கத்தில் பிரமாண்ட செய்தி எழுதும்போது, அந்த அளவுக்கு தேசபக்தி தமக்கு இல்லை என்பதையும் நோஐபிஎல் அதிபர் ஒப்புக்கொள்கிறார். பல்வேறு கட்டங்களில் தமது மனக்குமுறலை வெளிப்படுத்தியும் இருக்கிறார்.

2000 ஆண்டுக்குப் பிந்தைய மேட்ச்பிக்சிங் குற்றச்சாட்டுகளும், ஐபிஎல் போட்டிகளின் தொடக்கமுமே கிரிக்கெட் மூலம் பிதுங்கும் தேசபக்தி அவருக்கு இல்லாமல் போனதற்கான காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. வெகுஜன புத்தியின் ஓட்டத்தில் செல்ல முடியவில்லையே என்கிற தீராத ஏக்கமும் கவலையும் அவருக்கு எப்போதுமே உண்டு என்பது தெரியவந்திருக்கிறது. அதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்து படியுங்கள்.

இன்னொரு உலகக் கோப்பை போட்டியில் சச்சின் ஆடுவார் என்பது சந்தேகமே.  என்னதான் தெண்டுல்கர் மீது பல்வேறு வகையான விமர்சனங்களை அள்ளி வீசினாலும், தனிப்பட்ட முறையில் இந்திய இளைஞர்களுக்கெல்லாம் அவர் ஒரு வழிகாட்டி என்பதை நோஐபிஎல் அதிபர் உள்ளிட்ட எவருமே மறுக்க மாட்டார்கள். ஒரு துறையிலேயே தம்மைத் தோய்த்துக் கொண்டு அதன் எல்லா உச்சங்களையும் எட்டிவிட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவதற்கு சச்சினை விட்டால் வேறு ஆள்கிடையாது.

ஒரே துறையில் நீண்டகாலம் இருக்கும் அனைவருக்குமே ஒரு சலிப்புத் தன்மை வரும். அந்த சலிப்புத் தன்மைதான் திறமைக்கும் புகழுக்கும் எதிரி. அதே பேட், அதே பந்து, அதே மைதானம் என்றாலும் எந்தவித சலிப்புத்தன்மையும் இல்லாமல் ஒவ்வொரு முறையும் புதிதாய்க் களமிறங்குவது போல இருப்பது சச்சினின் சுபாவம். எல்வாவிதமான ஷாட்களையும் அடிக்கும் திறன் கொண்ட அவர், இன்னமும்கூட பயிற்சிகளில் தவறாமல் பங்கேற்கிறார் என்பது அவரிமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களில் ஒன்று. இதே மாதிரியான சுபாவத்தை முதல்வர் கருணாநிதியிடமும் காண முடியும் - தயவு செய்து இந்த ஒப்பீட்டை நேர்மறையாகக் கொள்ளவும்.

எத்தனையோ முறை பார்ம் இல்லாமல் சிரமப்பட்டாலும்கூட, தமது இலக்கிலிருந்து விலகாத சச்சினின் மனஉறுதி போற்றுதலுக்குரியது. சச்சினுக்கு இதுதான் உச்சநிலை என்பதே கிடையாது. எல்லா உச்சங்களும் அவருக்கு இன்னொரு படியாகத்தான் இருந்திருக்கின்றன. 10 ஆயிரம் ரன்களைக் குவிக்க வேண்டும், 35 சதங்களை அடிக்க வேண்டும் என்று சாதனைகளை முறியடிப்பதுடனும், இலக்குகளை எட்டுவதுடனும் சச்சின் ஓய்ந்து இருந்துவிடவில்லை. சாதனைகளை முறியடிக்கும் அனைவருமே "அப்பாடா" என்று மூச்சிரைக்கத்தான் இலக்கை எட்டியிருக்கிறார்கள். கபில்தேவ், ஆலன் பார்டர் போன்றவர்களெல்லாம் சாதனைகளை முறியடிக்கும்போது "எல்லைக்கோட்டில் வந்து பொத்தென்று விழுந்தார்கள்" என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு மேல் அவர்களால் நகரவே முடியவில்லை. ஆனால் போகிறபோக்கில் சாதனைகளுக்கான இலக்குகளை கடந்து சென்றவர் சச்சின்.

சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு பிசிசிஐயின் கிரிக்கெட் அணி தனது அடையாளம் இழந்து போகப் போகிறது. கபில்தேவும் அசாருதீனும் போன பிறகு ஏற்பட்டதைக் காட்டிலும் மிகப்பெரிய வெற்றிடம் இந்திய கிரிக்கெட்டில் ஏற்படும் என்பதைக் கணிக்க முடிகிறது.

அதி தீவிரமான கிரிக்கெட் ரசிகன் என்கிற முறையில் நோஐபிஎல் அதிபர் கூறிய சில குற்றச்சாட்டுகள் இன்னும் நிலுவையில்தான் இருக்கின்றன. நக்கல், நையாண்டி எல்லாம் உள்ளுக்குள் இன்னமும் உண்டு. ஆனாலும், உலகக் கோப்பை போட்டியில் சச்சின் ஆடும் கடைசிப் போட்டி இதுதான் என்னும்போது இருவிழிகளிலும் கண்ணீர் துளிர்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை....
...

2 கருத்துகள்:

  1. அட உங்களுக்கு சச்சினை நினைத்து வருத்தப்பட கூட தெரியுமா.? குற்றம் மட்டும் தான் சொல்ல தெரியும் என்றிருந்தேன்..

    உடனே முடிவெடுத்திடாதீங்க பாஸ்.. சச்சின் அடுத்த உலக கோபையிலயும் ஆடுனாலும் ஆடுவார்..

    பதிலளிநீக்கு