நண்பர் ஒருவர் கேட்டார்...
"பாஸ்! இந்தப் போராட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்?"
"தெரியலையே பாஸ்!"
"அதெல்லாம் உங்களுக்குக் கண்டிப்பா தெரியும்... சும்மா சொல்லுங்க". வாயைப் பிடுங்கினார்.
நான் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை.
"இல்லைங்க... சத்தியமா எனக்குத் தெரியாது". நழுவினேன்.
"ஹலோ! அதான் ஏதாவது சொல்லுவீங்களே, ஐ.பி.எல். தொடங்குறவரைக்கும்தான் போராட்டமெல்லாம்... அப்டீன்னு" ஒரே போடாகப் போட்டார்.
ரொம்ப ஆசைதான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்...
"அப்படியெல்லாம் சொல்ல முடியாது..." இழுத்தேன்.
"நீங்க சொல்லாட்டி பரவாயில்ல... நான் சொல்றேன்... ஐ.பி.எல். தொடங்கின உடனே எல்லோரும் சேப்பாக்கத்தில் வரிசையில நிப்பாங்க" அப்டீன்னார்.
இதுக்கு மேல் போனால், அடிதடி நிச்சயம் என்று உணர்ந்து, பேச்சை மாற்றினேன்.
"சேப்பாக்கைத்தை விடுங்க. ஐபிஎல் போட்டிய நடத்தணும்னா, விவசாயிகளுக்கு ரூ.500 கோடி நிவாரணம் தரணும்னு ஐ.பிஎல். ஓனர்களுக்கு சிவசேனை எச்சரிக்கை விடுத்திருக்கே தெரியுமா"
"ஓ அப்படியா" ஆர்வமாகக் கேட்டார்.
"ஆமாம்.." வேறு பிரச்னைக்கு தாவிவிட்ட திருப்தியில் வேகமாகத் தலையை ஆட்டினேன்.
"ஆமாங்க! மும்பை, புணே அப்டீங்கற பேர வெச்சுத்தானே சம்பாதிக்கிறாங்க... அப்ப கொடுக்க வேண்டியதானே. ஊர்ப் பேரு மட்டும் இல்லாட்டி இவங்களை நாய்கூட மதிக்காதே..."
"சரிதாங்க" ஆமோதித்தேன்.
"இங்க உள்ளவங்க என் பண்றாங்க... இங்கேயும் விவசாயிகள் தண்ணி கிடைக்காம கஷ்டப் படுறாங்க... மின்சாரம் இல்லாம சிறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்காங்க... ஊர்ப் பேரை வெச்சு ஏமாத்துற காசுல கொஞ்சத்த கொடுக்க வேண்டியதுதானே" லாஜிக்காக பேசினார்.
"சூப்பரா சொன்னீங்க" பாராட்டினேன்.
"ஆனா இங்க நடக்காதுங்க" சுருதியைக் குறைத்தார்.
"ஏங்க"
"இங்க உள்ளவங்க அவங்க சொந்தக்காரங்களுக்கு ஏதாவது கேட்டு வாங்கிப்பாங்களே தவிர, ஊருக்காகக் கேட்டு வாங்குற பழக்கமெல்லாம் இதுவரைக்கும் கெடையாதே..."
"ஓ" ஆச்சரியப்படுவதுபோலக் கேட்டேன்.
"அதுக்கெல்லாம் சொரணை வேணுங்க". சொல்லி முடித்தார்.
"..."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக