வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட், யாருக்கு நஷ்டம்?


1999-ம் ஆண்டில் இருந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஐசிசி ஏகபோக குத்தகைக்கு எடுத்து நடத்துகிறது. அடாவடி, கெடுபிடிகள் எல்லாம் உண்டு. இதனால், ஐசிசி காட்டில் இப்போது நல்ல பணமழை. இந்தப் பொதுச் சேவை நிறுவனம் தனது பெயரை ஐசிசி இன்டர்நேஷனல் லிமிடெட் என்று  பதிவுசெய்திருக்கிறது. வரி ஏய்ப்பு செய்வதற்காக மொனாக்கோவில் தலைமையகத்தை மாற்றியது. இப்போது அதைவிட கூடுதலாகச் சுருட்டலாம் என்பதற்காக துபையில் செயல்பட்டு வருகிறது.

 2011 உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைக்காக மட்டும் ரூ. 10 ஆயிரம் கோடியை இஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழங்கியிருக்கிறது. அந்தத் தொகையை விளம்பரங்கள் மூலம் அவர்கள் வசூலித்துக் கொள்வார்கள். 10 செகண்ட் விளம்பரத்துக்கு ரூ.24 லட்சம் கட்டணமாம். தோனி டீம் நாக் அவுட் ரவுண்டுக்குப் போனாலோ, பைனலுக்குப் போனாலோ வேறு வகையான கட்டணம். எப்படியோ கல்லாக் கட்டிவிடுவார்கள்.

ஒருவேளை நோஐபிஎல் அதிபர் நடத்தும் புரட்சியின் காரணமாக, மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டு சேப்பாக்கம் மற்றும் அண்ணா சதுக்கம் முன்பாக லட்சோபலட்சம் மக்கள் திரண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளே நடக்காமல் போனாலும் இஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு லாபம்தான். ஏனென்றால் அவர்கள் ரூ.30 ஆயிரம் கோடிக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியிடம் இன்சூரன்ஸ் செய்திருக்கிறார்கள். அவர்கள் இந்த இன்சூரன்ஸை ரீஇன்சூரன்ஸ் செய்திருக்கிறார்கள். இது தொடர் ரீஇன்சூரன்ஸ். இதனால் இன்சூரன்ஸ்காரர்களுக்கும் ஒருவகையில் லாபம் கிடைக்கப் போகிறது.

 அப்புறம் பாகிஸ்தானில் நடந்த 14 போட்டிகள் மற்ற பகுதிகளுக்கு மாற்றப்பட்டதால், ஐசிசி இழப்பீடு தரப் போகிறது. அது கிட்டத்தட்ட ரூ.10ஆயிரம் கோடியைத் தொடும் என்கிறார்கள். அதனால், ஒரு போட்டியைக்கூட நடத்தாமல் அவர்களுக்கும் லாபம்.
அப்புறம் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பவர்களுக்கும் ஒருவகையில் லாபம்தான். இலங்கையிலும், வங்கதேசத்திலும் ரூ.10 முதல் டிக்கெட் கிடைக்கிறது. அம்பாந்தோட்டை மைதானத்தில் கூவிக்கூவி டிக்கெட் விற்பதாகக் கேள்விப்படுகிறோம். சிட்டகாங் மைதானத்தில் ஓசிக்கே விட்டாலும் விடுவார்கள் போலத் தெரிகிறது.இதனால், ஏதோ பத்து ரூபாய்க்கு நாள் முழுக்க சிரிப்பொலி தொலைக்காட்சியே நேரிலேயே பார்க்க முடியும் என்பதால் ரசிகர்களுக்கும் ஓரளவு லாபம்தான்.

ஆனால், இதையெல்லாம் இந்தியாவில் எதிர்பார்க்கக்கூடாது. கூடுவாஞ்சேரி, அமிஞ்சிக்கரை ஆட்டத்தை சேப்பாக்கத்தில் பார்க்கவேண்டுமென்றால்கூட ரூ.500 அழவேண்டும். அங்குபோய் என்ன ஆட்டம் நடக்கிறது என்றே தெரியாமலேயே இந்தியா வாழ்க, ஜெய்ஹிந்த், பாரத் மாதா கீ ஜெய், தாய் மண்ணே வணக்கம், வந்தே மாதரம் என்று யாராவது கத்திக் கொண்டிருந்தாலும் அப்பாவியாகக் கேட்டுக் கொண்டு வரவேண்டும். காசும் போய், பக்த கோடிகளின் காட்டுக் கத்தலால், உள்ளே நடக்கும் காமடியை ரசிக்க முடியாமல், உண்மையிலேயே நஷ்டமடைவது நமது இந்திய ரசிகர்கள்தான் என்று நமது தீர்ப்பைச் சொல்லி....

...
..
...
...

3 கருத்துகள்:

  1. ////உண்மையிலேயே நஷ்டமடைவது நமது இந்திய ரசிகர்கள்தான் என்று நமது தீர்ப்பைச் சொல்லி....////
    பாத்தா நஷ்டம்... பாக்காட்டி ஒண்ணுமில்ல.... சிம்பில் ங்க.

    1.75 லட்சம் கோடியை ஸ்வாஹா பண்ணினவங்களையே இன்னும் மெளனமாத்தான் பார்த்துட்டு இருக்கோம். (அடுத்து ரெண்டு லட்சம் கோடியாம்..) இதெல்லாம் என்ன சுண்டைக்கா 10000 கோடிகள்.... போங்க... போய் வேலை வெட்டி இருந்தா பாருங்க..

    பதிலளிநீக்கு
  2. ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பார்த்ததுக்கப்புறம் அஞ்சாயிரம் கோடி, பத்தாயிரம் கோடி எல்லாம் நம்ம ராசா கடலை மிட்டாய் வாங்க வச்சிருக்கும் காசு மாதிரி தெரியுது. ICC என்பது ஒரு தனியார் அமைப்பு, யாருக்கும் சேவை, பொதுநலத் தொண்டு செய்வதில்லை, அதே மாதிரி BCCI யும் இந்திய அணி அல்ல, அதுவும் ஒரு தனியார் அமைப்பு, இவற்றுக்கு கொடி பிடித்து நம்மாளுங்க உசிரை விடுவது தான் தமாஷ். இந்தியா- பாகிஸ்தானுக்கு எதிராக ஆடும் ஆட்டம் இந்திய பாகிஸ்தான் போர். மேட்ச் நடக்கும் பிட்ச் தான் போர்க்களம், கிரிக்கெட் ஆடுறவன் கையில் இருப்பது பேட் அல்ல, துப்பாக்கி, அவன் பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினால் இந்தியாவையே காக்கிறான் என்று அர்த்தம். ஆனால், அவன் பெப்சி, கோலா போன்ற வயிற்றைக் கெடுக்கும் விளம்பரங்களில் நடிப்பான், போற இடத்திலெல்லாம் லட்சுமி ராய், நக்மா மாதிரி கில்மா கிடைக்கும், அப்புறம் IPL பணம், சூதாட்டப் பணம் எல்லாம் வரும். ஹாக்கி மாதிரி விளையாட்டுகளில் என்ன சாதனை செய்தாலும், ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற பின் வயிற்றைக் கூட கழுவ முடியாது, நல்ல வீடு கூட இருக்காது. நிஜமாவே எல்லையில் உயிரைப் பணயம் வைத்து நாட்டை காத்து ஓய்வு பெரும் [நிஜ] வீரனுக்கு ஒழுங்காக பென்ஷன் வராது, ரே ஷன் அட்டை கிடைக்காது, ஓய்வுக்குப் பின் சரியான வேலை கிடைக்காது. நன்றி கெட்ட தேசத்துக்கு முதல் உதாரணம் நம் நாடுதான்.

    பதிலளிநீக்கு
  3. நம் நாடு வளர்ச்சியடைந்துவிட்டது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் கிடைக்காது...

    பதிலளிநீக்கு